அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், சந்தவாசல்

அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், சந்தவாசல் – 606 905. திருவண்ணாமலை மாவட்டம்.
**********************************************************************************************************

+91 4181 243 207, 96773 41227 (மாறங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி வரை நடை திறந்திருக்கும்.

மூலவர்: – கங்கையம்மன்

உற்சவர்: – கங்காதேவி

தல விருட்சம்: – வில்வம்

தீர்த்தம்: – பெருமாள் தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – சந்தவாசல்

மாவட்டம்: – திருவண்ணாமலை

மாநிலம்: – தமிழ்நாடு

தட்ச யாகத்திற்கு பின், அம்பிகையைப் பிரிந்த சிவன் பூலோகம் வந்தார். இதனால் உக்கிரத்துடன் இருந்த சிவனின் வெம்மையை, அவரது தலையில் இருந்த கங்காதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிவனை சாந்தப்படுத்தும்படி அவள் திருமாலை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார். மேலும், அவரது உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும் ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி அணைத்தார். இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு பெருமாள், கங்காதேவிக்கு கோயில் கட்டினார். காலப்போக்கில் இக்கோயில்கள் மறைந்து போனது.

தென்னாட்டுக் கோயில்களை அந்நியர்கள் ஆக்கிரமிப்பு செய்தபோது, குமார கம்பணன் என்ற வடநாட்டு சிற்றரசர் படையெடுத்து சென்று அந்நியர்களை அழித்து, கோயில்களை மீட்டார். அவர் தென்னாடு வரும் வழியில், இவ்வூரில் தங்கினார். இப்பகுதியை ஆண்ட ராசநாராயண சம்போராயர், குமார கம்பணன் படையெடுத்து வந்ததாகக் கருதி அவருடன் போரிட்டார். போரில் கம்பணன் வென்றார். தோற்ற மன்னன் ராசகம்பீர மலையில் ஒளிந்து கொண்டார். அப்போது, குமார கம்பணனின் மனைவி, இத்தலத்தின் மகிமையறிந்து கங்காதேவிக்கு கோயில் எழுப்பினாள். போரில் வென்ற குமார கம்பணர், ராசநாராயண சம்போராயரை அழைத்து, நாட்டைத் திருப்பிக்கொடுத்தார். இதனால் சேனைக்கு மீண்டான் வாசல்என்று இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது.

விஷ்ணு தீபம் :

கோயிலுக்குப் பின்புறம் ராசகம்பீர மலை உள்ளது. பூலோகம் வந்த சிவன், முதலில் இம்மலையிலும், அடுத்து திருவண்ணாமலையிலும் பாதம் பதித்தார். மலையில் சிவன் பாதம் வைத்ததாகக் கருதப்படும் இடம் பெரிய பள்ளமாக உள்ளது. அங்கு சிவபாதமும் உள்ளது. இதற்கு மிதிமலைஎன்றே பெயர். திருக்கார்த்திகைக்கு மறுநாள் விட்டுணு கார்த்திகையன்று இந்த மலையில் தீபம் ஏற்றுவர்.

தீர்த்தம் பிரசாதம் :

கங்காதேவி இடது காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டபடி, ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். கீழே சிம்ம வாகனம் இருக்கிறது. கைகளில் தண்டம், உடுக்கை மற்றும் அமுத கலசம் உள்ளது. பிரதான அம்பிகைக்குப் பின்புறம் அம்பிகையின் சுதை வடிவமும் வடித்துள்ளனர். தீர்த்த வழிபாட்டிற்கு முக்கியத்துவம் உள்ள தீபாவளி, மாசி மகம் ஆகிய நாட்களில் கங்காதேவிக்கு விசேட பூசை நடக்கும். கங்காதேவிக்கு அபிசேகம் செய்த தீர்த்தத்தையே இங்கு பிரதான பிரசாதமாகத் தருகின்றனர். தண்ணீர் வடிவ தெய்வமான கங்கைக்கே, பூஜை செய்த தீர்த்தமென்பதால், இதை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர். இதை சிறிது வாங்கிச்சென்று, வீட்டில் வைத்துக் கொள்ள அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

சுமங்கலி பூஜை :

சித்திரை முதல் நாளில் அம்பிகைக்கு 108 பால் குட அபிசேகம் நடக்கும். அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் தாமே சன்னதிக்குள் சென்று, அம்பிகைக்கு பூசை செய்யலாம். ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சுமங்கலி ஹோமம் நடக்கும். இவ்வேளையில் பக்தைகளுக்கு ஒன்பது மங்கலப்பொருட்களை பிரசாதமாகத் தருவர். பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடக்கும். உற்சவ அம்பிகைக்கு தனிச்சன்னதி உள்ளது. பவுர்ணமி நாட்களில் அம்பிகை கோபுரம் முன்பாக எழுந்தருளுவாள்.
முன்பு இங்கு பெருமாளுக்கு கோயில் இருந்ததன் அடையாளமாக, கோயில் முகப்பில் ஒரு தீபக்கம்பம் உள்ளது. இதில் சங்கு, சக்கரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

துணி முடிதல் வழிபாடு :

திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள் இங்கு அம்பிகைக்கு துணி முடிதல்என்ற வழிபாட்டைச் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள், மஞ்சள் துணியில் காணிக்கை கட்டி, அம்பாள் பாதத்தில் வைத்து பூசித்து, வேண்டிக் கொள்கின்றனர். பின், அதை கோயிலிலேயே கொடுத்துவிட்டு சென்று விடுகின்றனர். வேண்டுகோள் நிறைவேறியதும், மீண்டும் இங்கு வந்து துணி முடிப்பை வாங்கிக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், அவரது நன்மைக்காகவும் அம்பிகைக்கு தாலி அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். குரு, சனி, ராகு கேது பெயர்ச்சி நேரத்தில் இங்குள்ள நவக்கிர சன்னதியில் விசேட யாகம் வளர்த்துப் பரிகார பூசை நடக்கும்.

திருவிழா:

தீபாவளி, மாசி மகம், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, பவுர்ணமி, பங்குனி உத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *