அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில், மேல் சேவூர்

அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில், மேல் சேவூர், செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்.

+91 99621 72565, 97877 20215, 99433 22152

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ரிஷபபுரீஸ்வரர்

அம்மன்

மங்களாம்பிகை

தல விருட்சம்

புன்னை

தீர்த்தம்

சங்கராபரணி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

மேல் சேவூர்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

ஒரு முறை சங்கரா பரணி நதியில் வெள்ளம் புரண்டோடி ஊரையே அழிக்கும் நிலை ஏற்பட்டது. இங்குள்ள அம்மன் மங்களாம்பிகையின் கால்பட்டு வெள்ளம் தணிந்தது. திருவாதிரைத் திருவிழாவில் நந்தீஸ்வரரும், மங்களாம்பிகையும் மதியம் புறப்பட்டு வருவர். சிவனை கண்ட அம்மன், சினந்து பாதி வழியிலேயே தன் பிள்ளைகளுடன் கோயில் வந்தடைவார். தனக்கும், பரவை நாச்சியார்க்கும் ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்திட பெருமான் இரவில் இருமுறை தூது சென்ற நன்றியால் சுந்தரர் அம்மனிடம் தூது சென்று இருவரையும் சேர்த்து வைப்பார். சுந்தரர் தூது சென்ற சிறப்பு ஆதிரைத் திருநாளில் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. இங்குள்ள ஆற்றை சங்கரன் தனது பரணியால் சுத்திகரித்ததால் சங்கரா பரணி என்று அழைக்கப்படுகிறது.

வெளிச்சுற்றில் வலது புறத்தில் விநாயகர் சன்னதியும், கிழக்கில் அறுபது கல்தூண்கள் தாங்கிய மகா மண்டபம். கொடிமரம், பலிபீடம், சிவபெருமானை நோக்கும் நந்தி. கருவறையின் வாயிற் கதவுகளுக்கு இருபுறமும் விநாயகர், முருகன். மேற்புறத்தில் நரசிம்மரின் கற்சிற்பம். கல்தூண்களின் கீழ்ப்பகுதியில் யாளி உருவம். கருவறை முன்னர் சுமார் ஒன்பதடி உயரத்தில் துவார பாலகர்கள். இவை அனைத்தும் பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் உருவானது.

கருவறையில் ரிஷபபுரீஸ்வரர், நாக குடையின் கீழ், இலிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். உள் மண்டபத்தில் சிவன், சோமாஸ்கந்தர், நடராஜர், கணபதி, முருகன் போன்ற உற்சவர் இருக்கும் மாடம். பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, சூரியன், ஏழு கன்னியர், சகஸ்ரலிங்கம், காசி விஸ்வநாதர், திருமால் சன்னதி உள்ளது. பெரிய கூடத்தைக் கடந்தால் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சன்னதி. அருகே கோயிலைக் கட்டிய கமல முனிவர், சோழ தம்பதியர், துர்க்கை அம்மன். கீழே சண்டிகேஸ்வரர் சன்னதி. வாகனக் கிடங்கை அடுத்து நவக்கிரக சன்னதி. தெற்கு நோக்கி மங்களாம்பிகை தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். அக்காலத்தில் இக்கோயிலை பாண்டி மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் பராமரித்து வந்ததை செப்பேட்டில் அறியலாம்.

திருவிழா:

ஆடி மாதத்தில் மூன்றாம் வெள்ளிக் கிழமை அன்று சந்தன நிறைமண விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிக்கிருத்திகை, திருவாதிரை.

கோரிக்கைகள்:

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *