அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், குடவாசல்

அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், குடவாசல், திருவாரூர் மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஸ்ரீநிவாசப் பெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

குடவாசல்

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொரு காலத்தில், வடதிசைக்கு அதிபதியான குபேரன் மகாவிஷ்ணுவை வணங்கி, நான் எப்பொழுதும் தங்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதற்கிணங்கிய மகாவிஷ்ணு, “கலியுகத்தில், கடத்துவாரபுர க்ஷேத்திரம் எனப்படும் திருக்குடவாயில் தலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி அனுக்ரகம் செய்கிறேன்என்று கூறினார். அதன்படியே ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசராக திவ்ய மங்கள விக்ரக வடிவில் பூமிக்கடியில் எழுந்தருளினார். இந்நிலையில், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் இப்பகுதிக்கு வந்தபோது, இங்கே ஒரு வைணவ ஆலயம் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காகத் தன்னுடன் வந்திருந்த வேத பண்டிதர்களுடன் ஆலோசனை செய்தார். பூமி பூஜை செய்து முதலில் குளம் வெட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரவில், ஒரு வைணவ அன்பரின் கனவில் தோன்றிய திருப்பதி ஏழு மலையான், “குளம் வெட்ட நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தில் ஈசான்ய பாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் விக்ரகமாக நான் பூமிக்கடியில் உள்ளேன். பாலை ஊற்றி மண்ணைக் கரைத்து விக்ரகத்தை சேதப்படுத்தாமல் வெளியில் எடுத்து, எளிமையாக கோயில் கட்டி வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யுங்கள். திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்னும் சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக ஒப்பிலியப்பன் கோயிலும்; தம்பி என்ற சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக இந்த குடவாயில் கோயிலும் பிற்காலத்தில் சிறப்பு பெறும்என்று கூறி மறைந்தார். கண்விழித்த அந்த அன்பர் ஓடிச்சென்று கிருஷ்ண தேவராயரிடம் தான் கண்ட கனவைக் கூற, அதிசயித்த மன்னன் குடம் குடமாகப் பால் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

பின்னர் சுபமுகூர்த்தத்தில் பூமிபூஜை செய்து, பொன் ஏர் பூட்டி ஈசான்ய பாக நிலத்தை உழத் தொடங்கினர். ஓரிடத்தில் ஏர் தடைப்பட்டு நின்றது. அந்த இடத்தில் குடங்களிலிருந்த பாலை ஊற்றச் சொன்னார் மன்னர். அப்படியே செய்யப்பட, அங்கே வடக்கு நோக்கி எழுந்தருளியிருந்த பெருமாளின் திருமேனியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்து நின்றனர். பூஜை செய்து அந்த விக்ரகத்தை எடுத்து, பெருமாள் அருளியபடியே வடக்கு நோக்கிய ஆலயம் அமைத்து, திருமலையைப் போன்றே வைகானச ஆகமப்படி பிரதிஷ்டை செய்து வைத்தார் கிருஷ்ண தேவராயர். ஆலயப் பராமரிப்புக்கு வேண்டிய நிலங்களை நிவந்தமாகக் கொடுத்து, நித்திய பூஜைகளைச் செய்து வருவதற்கு சில குடும்பங்களை அங்கேயே குடியமர்த்தினார் கிருஷ்ண தேவராயர்.

இவ்வாலயத்தில் நடைபெறும் எல்லா வழிபாடுகளும் வைபவங்களும் திருப்பதி திருமலையில் நடப்பது போன்றே நடத்தப்படுகின்றன. திருமலையில் வெள்ளிக் கிழமை நடைபெறும் திருமஞ்சன தரிசனம் காண முடியாதவர்கள் இத்தலத்துக்கு வந்து கண்டு மகிழலாம். இதனால் நம் இல்லங்களில் மகாலட்சுமியின் அருள் பெருகும். பெருமாளுக்கு சனிக்கிழமை உகந்த தினமாகும். அந்த நாளில் விரதம் இருந்து இவரை வணங்கினால், பெருமாள் குபேர சம்பத்தைத் தந்தருள்வார் என்பதில் ஐயமில்லை. திருமலை பெருமாளைப்போலவே இத்தலத்துப் பெருமாளும் சர்வ அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இங்கு நடைபெறும் ஏகாந்த சேவையும் (அர்த்த சாம பூஜை) சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். வியாழக் கிழமைகளில் நேத்ர தரிசனம் கண்டு மகிழலாம். ஒவ்வொரு மாதமும் பெருமாளின் திருநட்சத்திரமான திருவோணத்தில் சன்னதியில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் இலட்சுமியுடன் கூடிய ஸ்ரீநிவாசர் தீப வடிவமாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இங்கே கோயில் கொண்டிருக்கும் யோக நரசிம்மருக்கும் (மூலவர்) இலட்சுமி நரசிம்மருக்கும் (உற்சவர்) பிரதோஷ காலத்தில் தீபமேற்றி வழிபட்டால், கடன் தொல்லைகள் நீங்கும்; தொழில் விருத்தியும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். கல்விக் கடவுளான ஹயக்ரீவருக்கும் இங்கு சன்னதி உண்டு. மாணவ மாணவிகள் வியாழக் கிழமைகளில் இவரை வலம் வந்து ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்தால் கல்வியில் சிறக்கலாம். இங்குள்ள ஆஞ்சனேயர் காரிய சித்திக்காக நூதன முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஐந்து வெற்றிலை, ஐந்து பாக்கு, ஐந்து பழங்களை வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயருக்கு சமர்ப்பித்து தொடர்ந்து ஐந்து வாரங்களும்; அமாவாசை நாட்களில் தொடர்ந்து ஐந்து மாதங்களும் வழிபடுபவர்களுக்கு எண்ணிய காரியங்கள் கைகூடுகின்றன. வெண்ணெய், காப்பு, வடைமாலை சாற்றி வேண்டுதலை நிறைவு செய்யலாம். ஞாயிற்றுக் கிழமை காலையில் நீராடி, வெறும் வயிற்றுடன் இங்குள்ள கருட பகவானுக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், பிள்ளைப் பேறில்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு கிட்டும் என்கிறார்கள்.

இங்கு நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், நாதமுனிகள், திருமங்கையாழ்வார், ஆண்டாள், நிகமாந்த மாகதேசிகர், ஸ்ரீராமானுஜர் ஆகியோர் தனிச் சன்னதிகளில் சேவை சாதிக்கிறார்கள். பெருமாளே விரும்பி கோயில் கொண்ட தலம் என்னும் சிறப்போடு, வடக்கு நோக்கி பெருமாள் கோயில் கொண்டுள்ள தலம் என்னும் சிறப்போடும் இத்தலம் விளங்குகிறது.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, திருவோணம்.

கோரிக்கைகள்:

கடன் தொல்லைகள் நீங்க, தொழில் விருத்தியும் பொருள் சேர்க்கையும் உண்டாக, கல்வியில் சிறந்து விளங்க, திருமணம் கைகூட இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் நெய் தீபமேற்றியும், வெற்றிலை, ஏலக்காய் மாலை, வெண்ணெய் காப்பு, வடைமாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *