அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், மேலமாட வீதி, திருநெல்வேலி

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், மேலமாட வீதி, திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.

+91 98940 20443, 95859 58594

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நரசிம்மர்

உற்சவர்

ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசபெருமாள்

தாயார்

மகாலெட்சுமி

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

மேலமாட வீதி, திருநெல்வேலி

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக, பகவான் ஸ்ரீமன் நாராயணன் பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் தனிச்சிறப்பு பெற்றது நரசிம்ம அவதாரம். அசுர குடும்பத்தில் பிறந்தாலும், பக்தியால் தன்னை வளைத்துப் போட்ட ஒரு குழந்தைக்காக உருவானவரே நரசிம்மர். இரண்யன் என்னும் அசுரன், தன்னையே நாட்டு மக்கள் வணங்க வேண்டுமென உத்தரவிட்டான். அவனது மகன் பிரகலாதன், பகவான் நாராயணனின் பக்தனாக விளங்கினான். தந்தை மீது மரியாதை கொண்டாலும் கடவுளாக ஏற்க மறுத்தான். இரண்யன், பெற்ற பிள்ளை என்றும் பாராமல் பலவகையிலும் கொடுமை செய்தான். அவனைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார் திருமால். தவ வலிமை மிக்க இரண்யன் தனக்கு மனிதர், மிருகம், பிற சக்திகளால் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். எனவே திருமால் சிங்க முகமும், மனித உடலும் கொண்ட வித்தியாசமான வடிவில் தோன்றி அவனை அழிக்க முற்பட்டார். “உன் ஹரி எங்கே இருக்கிறான்?” என்று இரண்யன் தன் மகனிடம் கேட்டதும், நரசிம்மரே திகைத்து விட்டார். இந்தச் சிறுவன் நம்மை எங்கே இருக்கிறான் என்று சொல்வானோ என அதிர்ந்து போனவர், உலகிலுள்ள அத்தனை தூசு, துரும்பில் கூட தன்னை வியாபித்துக் கொண்டார். இவ்வாறு, பக்தனுக்காக பதறிப்போய் தன்னை பரப்பிக் கொண்ட திவ்ய அவதாரம் நரசிம்மவதாரம். இறுதியில், பிரகலாதன் ஒரு தூணைக் காட்ட அதைப் பிளந்தான் இரண்யன். உள்ளிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். இரண்யனைத் தன் மடி மீது வைத்து அவனைப் பிளந்தார். அவரது உக்ரத்தைத் தணிக்க லட்சுமி பிராட்டியே பூமிக்கு வந்து பகவானின் மடியில் அமர்ந்தாள். அதுமுதல் அவர் லட்சுமி நரசிம்மர்என பெயர் பெற்றார்.

தனது இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தப்படி இருக்கும் லட்சுமி நரசிம்மரை பல இடங்களில் பார்த்திருக்கலாம். ஆனால், இங்கு பெருமாளின் இடது மடியில் அமர்ந்த மகாலெட்சுமி பெருமாளின் தோளில் கைபோட்டபடி இருப்பதைக் காண முடியும். அவளது கையில் தாமரை மலர் உள்ளது. இவள் பெருமாளை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியிருக்கிறாள். இங்கு வந்து கோரிக்கை வைக்கும் பக்தர்களின் குறையை உடனே தீர்க்கும்படி அவள் பெருமாளிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கும் வகையில், அவர் மீது வைத்த கண்ணைத் திருப்பாமல் இருப்பதாக ஐதீகம். இப்படி ஒரு சிலையமைப்பு காண்பதற்கு அரிய ஒன்றாகும். இந்தப் பெருமாள் நரசிம்மர் என அழைக்கப்பட்டாலும், அவருக்கு சிங்கமுகம் கிடையாது. இப்படிப்பட்ட பெருமாளை பிரகலாத வரதன்என அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்புள்ள நரசிம்மரிடம் வைக்கும் கோரிக்கை பரிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் நம்பிக்கை.

1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் இது. எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. நெல்லையப்பர், காந்திமதி அம்பிகை கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாகத் தகவல் உள்ளது. இந்த சன்னதியும், நெல்லையப்பர் மூல இலிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன. இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது. ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது. வைணவ மகான் ஸ்ரீ கூரத்தாழ்வார் இதை மீண்டும் கண்டுபிடித்தார். அப்போது நரசிம்மர் அளவற்ற சக்தியுடன் ஆர்ப்பரித்து தனது சக்தியை வெளிப்படுத்தினாராம். இம்மகானுக்கு பிறகு வைணவ பக்தர்களான பேரருளாளர், திருமங்கையாழ்வார் ஆகியோர் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்து நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர்.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர நாளிலும், பிரதோஷத்திலும் சிறப்பு பூஜை.

கோரிக்கைகள்:

கடன் பிரச்னை, நீதிமன்ற வழக்கு பிரச்னை, வீடு, நிலம் பிரச்னைகள் தீர்வதற்கும், வியாபார பெருகுவதற்கும் சர்க்கரையும், எலுமிச்சை சாறும் கலந்த பானகம் நைவேத்யம் செய்கின்றனர். எந்தக் குறை ஏற்பட்டாலும், அதற்கு இவர் பரிகாரம் செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதால் நரசிம்ம பெருமாளையும், தாயாரிடமும் பக்தர்கள் கண்ணீர் வடித்து, உருக்கமாக, தங்கள் கோரிக்கைகளைச் சொல்வதை இங்கு காண முடியும்.

நேர்த்திக்கடன்:

கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் நீராஞ்சன தீபம் செலுத்தும் வகையில் பக்தர்கள் அரிசி, தேங்காய், நல்லெண்ணெய் எடுத்து செல்கின்றனர். ஒரு தட்டில் அரிசியை பரப்பி தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதனால் செவ்வாய் தோஷம் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட திருமண தடை விலகுவதாக நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *