அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திம்மராஜபுரம்

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திம்மராஜபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வெங்கடாசலபதி

உற்சவர்

வெங்கடாசலபதி

தல விருட்சம்

பனை மரம்

தீர்த்தம்

ஜடாயு தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

திம்மராஜபுரம்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

தெலுங்கு மொழி பேசும் திம்மராஜா என்ற குறுநில மன்னர் திருநெல்வேலியின் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் பக்தர். ஏழுமலையானை அடிக்கடி தரிசிப்பதற்காக தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறிய கோயிலைக் கட்டி, ஏராளமான நிலங்களையும் வருமானத்துக்காக எழுதி வைத்தார். கோயிலில் வெங்கடாசலபதி பிரதிஷ்டை செய்யப்பட்டார். தன் பெயரால் கோயில் இருந்த பகுதிக்கு திம்மராஜபுரம்என்று பெயரிட்டார். தாமிரபரணி நதியை ஒட்டி கோயில் அமைந்தது. கோயில் அமைந்துள்ள பகுதியில் ஓடும் இந்நதி ஜடாயு தீர்த்தம்என பெயர் பெற்றது. அதுவே இக்கோயிலின் தீர்த்தமும் ஆகும். பிற்காலத்தில் உற்சவர் வெங்கடாசலபதி சிலை அமைக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவர் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலை தெலுங்கு மன்னர் கட்டியதால், வாசலில் கொடிக்கம்பத்திற்கு பதிலாக ஆந்திர மாடலில் தீப ஸ்தம்பம் உள்ளது.

28 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலின் உற்சவர் சிலை காணாமல் போய் விட்டது. அதிர்ந்து போன அர்ச்சகர் போலீசில் புகார் செய்து விட்டார். போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். எடுத்தவரைக் கண்டுபிடிக்க முயலவில்லை. ஒருமுறை போலீசார் கோயிலின் சுற்றுப்புறத்தை சோதனையிட்ட போது, உற்சவரின் நெற்றியில் இருந்த பட்டை நாமம் கோயில் காம்பவுண்ட் சுவரை ஒட்டிக் கிடந்ததைக் கண்டெடுத்தனர். சுறுசுறுப்பாயினர். பட்டைநாமம் கிடந்த இடத்தை ஒட்டிய கால்தடம், சுவரில் பதிந்த ரேகைகளைக் கொண்டு குற்றவாளியை நெருங்கி விட்டனர். சிலை மீட்கப்பட்டது. ஆனால், பெருமாள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. கோயிலுக்கு வரவில்லை. கோர்ட்டுக்கு போய் விட்டார். சிலை கோர்ட் பொறுப்பில் இருந்தது. இரண்டாண்டுகள் வரை பூஜை எதுவும் இல்லை. இதனால், அதிகாரிகளின் பார்வை இக்கோயில் மீது சென்றது. கோயில் சொத்துக்கள் பற்றி கணக்கெடுத் தனர். அந்நேரத்தில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அரசாங்கம் போலீஸ் குவாட்டர்ஸ், வடிகால் வாரிய குடியிருப்பு கட்ட கேட்டது. நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதற்குள் விசாரணை முடிந்தது. ஒன்றுமில்லாமல் போன பெருமாள் கோயிலுக்குள் நுழையும் போது 50 லட்சத்துக்கு அதிபதியாகி விட்டார். இதன்பின் கோயில் வளர்ச்சி பெற்றது. ஒருமுறை இக்கோயிலுக்கு வந்த பக்தை ஒருவர் கோயிலை வலம் வரும் போது நெருஞ்சி முள் காலைக் குத்தியது. அவர் வீட்டுக்குச் சென்றதும், பல மூடை சிமென்டை கோயிலுக்கு அனுப்பி, சுற்றுப்பாதை அமைத்து விட்டார். இப்போது முள் குத்தாமல், பெருமாளை சுற்றி வரலாம். நேரம் வந்தால் தான் எல்லாம் நடக்கும் என்ற பதம் ஆண்டவனுக்கு கூட பொருந்துகிறது. முன் மண்டபத்திலுள்ள ஆஞ்சநேயரை வியாழன், சனியில் மாணவர்கள் வழிபட்டால் அதிக மார்க் பெற அவர் உதவுவார் என்கின்றனர் பலன் அடைந்தவர்கள்.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

இங்கே பெருமாளை 11 சனிக்கிழமைகளில் வணங்கினால் இழந்த பொருளைப் பெறலாம் என்பதும், புதன்தோறும் பழம், வெல்லம், நெய், அரிசிமாவு சேர்த்து உருண்டை பிடித்து பெருமாளுக்கு நைவேத்யம் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அவ்வரம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி விட்டு பிதுர் தர்ப்பணம் செய்து, இப்பெருமாளை வணங்கினால், முன்னோரின் அருள் பூரணமாகக் கிட்டும்

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *