அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில், நாட்டரசன்கோட்டை

அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கண்ணுடைய நாயகி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

நாட்டரசன்கோட்டை

மாவட்டம்

சிவகங்கை

மாநிலம்

தமிழ்நாடு

நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ., தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டுப் பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க, பலர் நாட்டரசன்கோட்டை வருவர். பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும்போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. அவற்றை விற்க முடியாமல் அனைவரும் கிராமத்திற்கு வேதனையுடன் திரும்புவது வாடிக்கையாக நிகழ்ந்தது. இதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். நீண்ட நாட்கள் கிராமங்களில் நடத்தப்பட்ட விவாதத்திற்கு பின்னர் சிவகங்கை மன்னரிடம் பிரச்னையை கொண்டு செல்ல முடிவு செய்தனர். மன்னரிடம் பேச மக்கள் திரண்டு செல்வதற்கு முதல் நாளில் அம்பாள் மன்னரின் கனவில் தோன்றி, “நான் பூமிக்கடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரம் பக்கத்தில் இருக்கிறேன்எனக் கோடிட்டு காண்பித்தாள். மறுநாள் திரண்டு வந்த மக்களிடம் விஷயத்தை கூறிய மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த மக்களிடம் தரையை தோண்டிப் பார்க்க சென்னார். தோண்டிய பள்ளத்தில் அம்பாள் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள். அப்போது தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவரின் கடப்பாரையின் நுனி கண்ணில் பட்டு இரத்தம் கொட்டியது. அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியைத் தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார். அம்பாள் சிலை மேலே வந்த நிமிடத்திலேயே பாதிக்கப்பட்டவரின் கண் பார்வை சரியானது. அவருக்கு கண் கொடுத்த காரணத்தால், “கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்என போற்றப்பட்டது.

எடுத்த அம்பாள் சிலையை யாதவர் குல மக்கள் வடக்கு நோக்கி கொண்டு வந்தனர். வரும் வழியில் நாயன்மார்குளம் கீழ்புறத்தில் சிலையை கொண்டு செல்ல முடியாமல் கிழக்கு புறமாக கீழே வைத்து விட்டனர். நகரத்தார் தரிசனத்தில் வடக்கு நோக்கி செல்வதாக கனவில் தோன்றி களியாட்டம் நடத்தி, பலி கொடுக்குமாறு அம்பாள் கூறினாள். நகரத்தார் உடனடியாக களியாட்டம் கூட்டி 30 நாள் திருவிழா நடத்தி பெண் வீடு, மாப்பிள்ளை வீடு என 2 கட்டடங்கள் தனித் தனியாக கட்டினர். அதில் பெண் வீட்டார் கள்ளர்கள் என்றும் மாப்பிள்ளை வீட்டார் கணக்குப்பிள்ளை வகையறாக்கள் என்றும் கூறப்பட்டது. காலை, மாலை இருவேளையிலும் பூஜைகள் நடத்தி நாயன்மார்குலத்தில் அம்பாளுக்கு ஆரயித்து 500 ஆடுகள் பலிகொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் வெட்டப்பட்ட 1499 ஆடுகளிலிருந்து ஒருதுளி ரத்தம் கூட சிந்தவில்லை. 1500வது ஆட்டைவெட்டும் போதுதான் ரத்தம் வந்தது. அப்போது தான் அம்பாளும் அந்த இடத்தை விட்டு கிளம்பினார். அங்கிருந்து தொடர்ந்து கொண்டு வரப்பட்ட அம்பாள் சிலை விரகண்டான் ஊரணி தென்புறத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலின் தெற்குப்புறம் பார்த்தமாதிரி வைக்கப்பட்டது. மறுநாள் கோயிலில் சென்று பார்த்தபோது அம்பாள் வடக்குப் புறமாக திரும்பி இருந்தாள். அதன்படியே அம்பாளை தூக்கி வந்தனர். தற்போது கருவறை இருக்கும் இடத்தில் அம்பாளை வைத்து பூஜிக்குமாறு அசரீரி ஒலித்தது. அதன்படி அம்பாள் ஸ்தாபிதம் செய்யப்பட்டு வளையர் குல மக்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டது. சில நாட்கள் கழித்து வளையர்களின் கனவில் அம்பாள் தோன்றி எனக்கு பூஜை செய்ய உகந்தவன், உவச்சர் இனத்தை சேர்ந்தவர்கள் பொன்னமராவதியில் இருப்பதாக கூறி அவர்களை அழைத்து வந்து பூஜை செய்யுமாறு உத்தரவிட்டாள். அன்று முதல் இன்று வரை அவர்களே அம்பாளுக்கு பூஜை செய்து வருகின்றனர். காளியாட்டம் எனும் திருவிழா கண்ணுடைய நாயகி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான விழாவாகும். இக்களியாட்டம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கும்பகோணம் மகாமகத் திருவிழா போன்று இத்திருவிழாவும் நடத்து வருகிறது. இவ்விழாவிற்காக நாட்டரசன் கோட்டை பழைய வளைவில் களியாட்ட கண்ணாத்தாள் தெருவில் இரு களியாட்ட வீடுகள் இருக்கின்றன. அவை கள்ளவீட்டு களியாட்ட வீடு என்றும் கணக்க வீட்டு களியாட்ட வீடு என்றும் கூறப்படும். காரணக்காரர்களாகிய கள்ளரையும் கணக்கரையும் கொண்டு நகரத்தார் இவ்விழாவை நடத்துகின்றனர். கள்ளரில் 5 பிரிவினர் இருப்பதால் அவர்கள் ஐந்து காரணக்காரர்கள் எனப் பெறுவர். இவர்களது களியாட்ட வீடு பெண் வீடுஎன்றும் கணக்கரது களியாட்ட வீடு மாப்பிள்ளை வீடுஎன்றும் செல்லப்பெயரிட்டு அழைக்கப்படும். களியாட்ட வீடுகள் 2ம் அஸ்திவாரம் சுட்ட செங்கலாலும், அதன் மேல் பச்சை செங்கலாலும், அதற்கப்பால் இருவரிசை சுட்ட செங்கலாலும் புதிதாக கட்டப்பெற்று கைமரம் போட்டு ஓடுகள் போடப்படும். அதன் உட்புறம் அம்மனும், இருபுறமும் பூசாரிகளும், விநாயகர், வீரபத்திரர், பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளும், மதுக்காரியும், அடுத்து துவாரசக்திகள் இருபுறமும், நான்கு சுவர்களிலும் வரையப்பெற்றும், வெளிப்பக்கம் முகப்பின் இருபுறமும் பூதங்கள் 2ம் வரையப்படும். ஒவ்வொரு முறையும் களியாட்டம் கூட்டும் போது வீடுகள் தரைமட்டம் செய்யப்பட்டு, புதிதாக மேற்கூறியபடி களியாட்ட வீடுகள் கட்டி சித்திரங்களும் வரையப்படும், தச்சு செய்தல், நிலை வைத்தல், கைமரம் போடுதல், ஓடு போடுதல், உரு எழுதுதல் என ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சித்திரை முதல் செவ்வாய்க்கு முன் அதாவது களியாட்ட விழா துவங்கும் முன்னரே நல்ல நாள் பார்த்து நடைபெறும். சித்திரை திங்கள் முதல் செவ்வாயன்று காலையில் கண்திறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக செய்யப் பெறும். தொடர்ந்து 22 நாள் விழா நடை பெறும்.

அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள், காலசந்தி மற்றும் மாலை பூஜை சிறப்புற நடத்தப்படும். முதல் நாள் காலசந்தியை முடித்துக் கொண்டு நகரத்தார் மற்றும் அனைவரும் களியாட்ட வீடுகளில் வைப்பதற்காக இருகரகக் குடங்களை பூஜாரிகளை சுமந்து வரச்செய்து வைப்பர். 22 நாட்கள் இரவில் முளை கொட்டி பாட்டுக்களைப் பாடி வழிபாடு நடத்தப்படும். நகரத்தார் முதலில் கள்ளவீட்டுக் களியாட்ட வீட்டில் முளைகொட்டும் ஐந்து காரணக்காரர்களுக்கு வெற்றிலை, பாக்கு, சந்தனம், பூ முதலியன கொடுத்து முறைகொட்ட செய்வர். இங்கு முளை கொட்டி முடிந்தவுடன் கணக்கு வீட்டில் நகரத்தார் சென்று மேற்கூறியவற்றை கொடுத்து முளை கொட்ட செய்வர். காலை, மாலை பூஜைகளின் போது நாயன்மார் குளத்தில் இருக்கும் பலி பீடத்திற்கும் பூஜை நடத்தப்படும். 22ம் நாள் எண்ணெய் குளியலுக்கு பிறகு மதுக்குடமாகிய வெள்ளி மதுக்குடத்திலும் மண்பானை மதுக்குடங்களிலும் தென்னம் பாளைகளை உள்ளிட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்வார்கள். களியாட்ட வீடுகளில் பலி கொடுக்கப்படும். மதுக் குடங்கள் அங்கிருந்து புறப்படும். பலிபீடத்திற்கு மதுக்குடங்கள் வந்ததும் தென்னந்தட்டி மறைப்பில் வெள்ளை ஆற்று மணல் பரப்பி அதன் மீது விரித்திருந்த வெள்ளைத் துகிலின் மீது ஆட்டின் தலையை வெள்ளைப்பிடி கயிற்றால் கட்டி ஒருவர் முன்னே இழுத்துக் கொள்ள பின்னங்கால்களை அம்மாதிரி கயிற்றால் கட்டி ஒருவர் பின்னே இழுத்துக் கொள்ள பூஜாரி ஆட்டின் தலையை ஒரே வெட்டில் வெட்டியவுடன், இரத்தம் துகில்மாத்தில் சிந்தாமல் தலை, உடல் ஆகிய இருபகுதிகளையும் மரத்திற்கு அப்பால் இழுத்து அப்புறப்படுத்தி விட வேண்டும். இப்பலியீடு முடிந்தவுடன் மதுக்குடங்கள் பலிபீடத்தை விட்டுப் புறப்படுகின்றன. 23ம் நாள் காலை மதுக்குடங்கள் கோயிலுக்கு வந்து சேரும். அங்கு சூலாட்டுப்பூஜை கொடுக்கப்படும். அப்போது காரணக்காரர் தம்பதியர் மட்டுமே உள்ளே இருக்க அனுமதிக்கப்படுவர். பெரிய படையலுக்கு பிறகு மதுக்குடங்களை எடுத்துக் கொண்டு காரணக்காரர் களியாட்ட வீடுகட்கு செல்வர். 24 ம் நாள் முதல் 29ம் நாள் வரை பூஜாரி மட்டுமே மேளதாளத்தோடு களியாட்டு வீடுகட்கும், பலி பீடத்திற்கும் பூஜை செய்வார். 29 ம் நாள் மாலை செங்கமத்தான் ஊரணியில் எண்ணெய் குளியலுக்கு பிறகு ஐந்து காரணக்காரர்கள் சேர்ந்து கள்ளர்களின் உருது ஆகாத சின்னஞ்சிறு பெண்கள் அலையாமதுஎடுத்து வருவர். முன்கூறியது போல மதுக்குடங்கள் அலங்காரம் செய்யப் பெற்றிருக்கும். களியாட்ட வீடு, ஊர்காவலன் கோயில், கருப்பணசாமி கோயில், பலிபீடம் ஆகிய இடங்களில் பலிகள் கொடுக்கப்படும். அலையாமது அம்பாள் கோயில் வந்து சேர, அம்பாள் சந்நிதியிலும் வைரவர் சந்நிதியிலும் பலிகள் கொடுக்கப்படும். கரகக் குடங்களையும், முன்னர் களியாட்ட வீடுகளில் மணலில் தெளித்திருந்த தட்டைப் பயறு, மொச்சப் பயறு, பாசிப்பயறு, உளுந்தம்பயறு ஆகிய முளைகளையும் களியாட்ட வீடுகளிலிருந்து இருபூஜாரிகள் மேளதாளத்தோடு எடுத்து வந்து அம்பாள் திருக்குளத்தில் சேர்ப்பிப்பர். இருபூஜாரிகளும் கோயில் வழிபாட்டிற்கு பின்னர் தாங்களாகவே களியாட்ட வீடு செல்வர்.

கோயில் துவக்கத்தில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவைகள் மன்னர் பரம்பரையினரால் கட்டப்பட்டிருந்தன. அதையடுத்து அலங்கார மண்டபம், அபூர்வ சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய வெகு உயரமான இராஜகோபுரத்தை அடுத்து சொக்காட்டாஞ்சாரி என்ற கர்ணக்கால் மண்டபம் ஆகியவை அபூர்வ வேலைபாடுகளுடன் பொறியியல் நுணுக்கத்துடன் நகரத்தார்களால் எழுப்பப்பட்டது. கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. அம்மனுக்கு மர வாகனங்களும், வெள்ளிக்கேடயம், வெள்ளிக்குதிரை, வெள்ளி ரதம் ஆகியவை இருக்கின்றன.

கோயிலில் தினமும் காலை 7.30 முதல் காலை விளா பூஜையும், 2ம் கால சாந்தி பூஜை காலை 8.30க்கும், உச்சிகால பூஜை நண்பகல் 12.30க்கும் நடைபெறும். மாலை 4 க்கு நடைதிறக்கப்பட்டு சாயரக்ஷை பூஜை நடத்தப்படும். இரவு 8.30க்கு அர்த்தசாம பூஜை நடைபெறும். மாதம் முதல் வெள்ளியில் சிங்கப்பூர் வாழ் நகரத்தாரால் தங்க அங்கி அணிவிக்கப்படும்.

திருவிழா:

பாரசைவர்களாகிய உவச்சர் குலத்தினரால் கோயிலில் பூஜை செய்யப்படுகிறது. சிவாச்சாரியார்கள், ஸ்ரீவைணவ பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் பிரமோற்ஸவம், ஆகமப்படி கொடியேற்றம் செய்து காப்புக் கட்டப்படுகிறது. வைகாசி பிரமோற்ஸவத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஐப்பசியில் கோலாட்ட திருவிழா 10 நாட்களும், தைலக்காப்பு உற்சவம் தை மாதத்தில் 10 நாட்களும், செவ்வாய் திருவிழாவும் விசேஷமானவை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு களியாட்ட திருவிழா 48 நாட்களுக்கு, காண்போர் வியக்கும் வண்ணம் பாரம்பரிய முறைப்படி நடைபெறும். களியாட்ட வீடுகள் இரண்டிலும் அன்னை ஓவிய வடிவில் காட்சி தருவாள். களியாட்ட கண்ணுடைய நாயகி 8 கரங்களுடன், அமர்ந்த கோலத்தில், வெள்ளி இரதத்தில், வைகாசி சுவாதியில் வலம் வருவது கண்கொள்ளா காட்சியாகும். ஆடி மாதத்தில் முளைகொட்டு திருவிழா 10 நாள் நடைபெறும். 9 வெள்ளி முளைப்பாரி ஓட்டிலும் ஒரு தங்க ஓட்டிலும் முளைப்பாரி போட்டு வளர்க்கப்படும். தங்க முளைப்பாரி அம்மன் தலையில் தாங்கி ஆடி பவுர்ணமி காலையில் திருவீதி உலா நடைபெறும். புரட்டாசி நவராத்திரி விழா 10 நாட்கள் கொண்டாடப்படும். 9 நாட்கள் அம்மன் கொலுவில் வீற்றிருந்து 10 ம் நாள் விஜயதசமி அன்று குதிரை வாகனத்தில் உலா வருவாள். நவராத்திரி நாட்களில் இலட்சார்ச்சனை நடைபெறும். திருக்கார்த்திகை அன்று அம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளி சொக்கப்பனை கொளுத்துவர்.

கோரிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க, கண் நோய் பிரச்னைகள் தீர இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *