அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், சிவகங்கை

அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை, சிவகங்கை மாவட்டம்.

+91- 92455 28813, 99946 74433

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.15 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுந்தரராஜப் பெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

ஆகமம்

பாஞ்சராத்ரம், வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சிவகங்கை

மாவட்டம்

சிவகங்கை

மாநிலம்

தமிழ்நாடு

17ம் நூற்றாண்டில், சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக்கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு கொண்ட இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசம் ஆகிய இரண்டு ஆகமங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில் இக்கோயிலை அமைத்தார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தர்ராஜப் பெருமாளும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவருடைய தாயார் மகமுநாச்சியார் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து கோயிலை முழுமையாக்கினார். இவர்கள் இருவருக்கும் மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிளை விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகப் பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார். வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தர்ராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார். மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். “சவுமியம்என்றால் அழகு.” பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் இராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

மகா மண்டபத்தில் ஆஞ்சநேயர் இராமபிரானை வணங்குவது போல, இருகைகளையும் குவித்தபடி அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால் இவர் வரசித்திஆஞ்சநேயர்என்று அழைக்கப்படுகிறார். அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் வெள்ளிக்கவசம் சாத்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவருக்கு ஐந்து வாரங்கள் தயிர்சாத நிவேதனம் செய்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலில் சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வார் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். பதினாறு கரங்களுடன் இருக்கும் இவருக்குப் பின்புறம் யோகநரசிம்மர் காட்சி தருகிறார். படிப்பு முடித்து நல்ல வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமைகளில் துளசிமாலை சாத்தி நெய்தீபம் இடுகின்றனர்.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில், மதுரை அழகர்கோவிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலும் சிறப்பு மிக்கவை. இவர்கள் இருவரையும் சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒரே நேரத்தில் இரு திவ்யதேசப் பெருமாள்களைத் தரிசித்த பாக்கியம் இங்கு சென்றால் கிடைக்கும். பெருமாளுக்கு எதிரில் கருடாழ்வார் இங்கு அருள்பாலிக்கிறார். அழகர்கோவிலைப் போன்றே இங்கும் பதினெட்டாம் கருப்பசாமி வாசலில் காவல் தெய்வமாக காட்சிதருகிறார்.

திருவிழா:

புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்டஏகாதசி, அனுமத் ஜெயந்தி.

கோரிக்கைகள்:

வேண்டிய வரங்கள் கிடைக்க, நினைத்தது நிறைவேற இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். படித்து முடிந்தவர்களுக்கு வேலை கிடைக்க சுதர்சன சக்கரத்தாழ்வாரை வழிபடலாம்.

நேர்த்திக்கடன்:

ஆஞ்சநேயருக்கு தயிர்சாதம் படைத்தும், சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *