அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில், பேளூர்

அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில், பேளூர், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலன்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

பேளூர்

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

அன்னை பராசக்தி பல அவதாரங்களை பூமியில் எடுத்தாள். காமாட்சி, விசாலாட்சி, உலகம்மை, பார்வதி, தாட்சாயணி. இப்படி பல பெயர்களில் அவதரித்த அவள், பழங்கால மதுரையில் மீனாட்சி என்ற பெயரில் தங்கினாள். அப்போது அவளுக்கு ஒரு பக்தை இருந்தாள். அவள் மீனாட்சியைக் குழந்தையாக நினைத்து தாலாட்டு பாடுவாள்; தூங்க வைப்பாள்; தன்னை மீனாட்சியின் அன்னையாகவே உருவகம் செய்து, பக்தியில் ஆழ்ந்தாள். அவளது பக்தியை மெச்சிய மீனாட்சி, முற்பிறவியில், அவளை காஞ்சனமாலை என்ற பெயரில் அரசியாகப் பிறக்கும்படியும், அவளுக்குத் தான் மகளாகப் பிறப்பதாகவும் வாக்களித்தாள். அதன்படியே மீனாட்சியின் பிற்கால கோயில் அமைந்தது. அவளுக்கே பெருமாள் அண்ணனாக இருந்து, சுந்தரேஸ்வரரை மணம் முடித்து வைத்தார். முந்தைய பராசக்தி வடிவமான மீனாட்சி, பெருமாளுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் தாயாகத்தான் இருந்திருக்கிறாள். அவ்வாறு அவள் தாயாக அமர்ந்த தலம்தான், தனி சன்னதியில், வயதான தோற்றத்துடன் மரகதவல்லி மீனாட்சி என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறாள்.

இந்த விஷ்ணுவுக்கு எட்டுக்கரங்கள் உள்ளன. இதில் இரண்டு கைகள் மகாவிஷ்ணுவுக்குரியவை. கீழேயுள்ள இரண்டு கரங்கள் கிருஷ்ணாவதார கைகள். நான்கு கைகள் பலராமனுக் குரியவை. இடது கன்னம் பெண் கன்னம். தொட்டுப்பார்த்தால் வழுவழுப்பாக இருக்கும். வலது கன்னம் ஆண் கன்னம். சொர சொரப்பாக இருக்கும். தலைக்கு மேல் ஏழு தலை ஆதிசேஷன் உள்ளது. இடது கால் பெண்கால்; இதன் மேல் பகுதியில் பஞ்சகச்சம்வைத்து கட்டியது போல புடவை அமைப்பு உள்ளது. வலது ஆண்கால். வலதுபக்கம் பசுவும், கன்றும், இடது பக்கம் பசுவும், காளையும் உள்ளன. அஷ்டமி, நவமி, ஏகாதசி திதிகளில் மரகதவல்லி மீனாட்சிக்கு அபிஷேகம் நடக்கும். வசிஷ்டர் இந்த சிலையைப் பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள கருடாழ்வார், இராமாயணத்தில் சீதையைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவாகக் கருதப்படுகிறார். ஏனெனில், இறகுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள கருடன் சிலை உள்ளது. வாசலில் வீர ஆஞ்சநேயர் உள்ளார்.

இத்தலத்திற்கு அருகில் சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், லட்சுமி கோபாலர் திருக்கோயில், வீரபத்திரசுவாமி திருக்கோயில், காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆகிய சிறப்புமிக்க கோயில்கள் அமைந்துள்ளது.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

இத்தலத்தில் மகம், விசாகம், சதயம், திருவோணம், ரோகிணி நட்சத்திர நாட்களில் திருமணத்தடை உள்ளவர்கள், கடன் தொல்லை, குடும்பத்தகராறு உள்ளவர்கள் வழிபட்டால் நிவர்த்தியாவதாக ஒரு நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *