அருள்மிகு அழகிரிநாதர் திருக்கோயில், சேலம்

அருள்மிகு அழகிரிநாதர் திருக்கோயில், சேலம், சேலம் மாவட்டம்.

+91- 427 – 222 1577 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அழகிரிநாதர்

தாயார்

சுந்தரவல்லி

தீர்த்தம்

வஞ்சுளபுஷ்கரணி

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சேலம்

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

மகாவிஷ்ணு, வைகுண்டத்தில் மகாலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரைக்காண பிருகு முனிவர் வந்தார். முனிவரை கவனித்தாலும் கவனிக்காதது போல் நடித்த விஷ்ணு இலட்சுமியுடன் பேசிக்கொண்டே இருந்தார். தன்னை விஷ்ணு அவமதிக்கிறார் என்றெண்ணிய முனிவர், கோபம்கொண்டு அவரை உதைக்கச் சென்றார். தனது கண்முன்னேயே கணவரின் நெஞ்சில் முனிவர் உதைக்க வருவதைக்கண்டு வெகுண்ட மகாலட்சுமி கோபித்துக்கொண்டு சென்றார். பொறுமையுடன் இருந்த விஷ்ணு, முனிவரின் அகங்காரத்தை குறைக்க எண்ணி, முனிவரின் பாதத்தில் இருந்த ஞானக்கண்ணை பறித்து அவரது சக்தியை இழக்கச் செய்தார். தவறை உணர்ந்த பிருகுமுனிவர், தன்னை மன்னிக்கும்படி நாராயணனிடம் வேண்டினார். கோபித்துக் கொண்டு சென்ற தாயாரை எண்ணி தவம் செய்து வணங்கிவர, மன்னிப்பு கிட்டும் என்றார் விஷ்ணு. அதன்படி இத்தலத்துக்கு வந்த முனிவர் அங்கு தவமிருந்தார். ஒருநாள் வில்வமரத்தினடியில் யாருமில்லாமல் தனியே அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கண்டார். மிகவும் அழகாக இருந்த குழந்தைக்கு சுந்தரவல்லிஎனப்பெயரிட்டு வளர்த்தார். அவள் பருவ வயதை அடைந்தபோது, அவளை மணமுடிக்கும் தகுதி இறைவனுக்கு மட்டுமே உள்ளது என உணர்ந்த அவர், மகாவிஷ்ணுவை வேண்டினார். அழகியநாதராக வந்த மகாவிஷ்ணு, சுந்தரவல்லியைத் திருமணம் செய்து கொண்டார். பின், முனிவர் வளர்த்து வந்த குழந்தைதான் மகாலட்சுமி என உணர்த்திய விஷ்ணு, தாயாருடன் காட்சி தந்தார். தாயார் அவரை மன்னித்தார். தனக்கு திருமணக்காட்சி தந்து அருளியதைப்போல இங்கு வரும் மக்களுக்கும் அருள வேண்டுமென அவர் வேண்டியதால், இருவரும் இங்கு தங்கிவிட்டனர்.

ஸ்ரீஎனும் தாயார் குழந்தையாக பிறந்த தலம் என்பதால் ஸ்ரீசைலம்எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் சேலம்என மருவியது. “சைலம்என்றால் புனிதம் மிக்கஇடம்என்று பொருள்.

ஸ்ரீராமர், சீதையை மீட்க இவ்வழியே சென்றபோது அவருடன் வந்த ஆஞ்சநேயர் மணிமுத்தாறில் நீராடினார். அப்போது, அழகியநாதரின் அழகை கண்ட அவர் மெய்மறந்து இங்கேயே நின்றார்.

இத்தலத்தில் பெண் பேசிமுடித்தல்எனும் சடங்கு அதிகளவில் நடக்கிறது. பெண்ணை அவர்களது வீட்டில் பார்க்கும் மணமகன் வீட்டார், அழகியநாதர் சாட்சியாக பெண்ணைத் தங்களுக்கு தரும்படி கேட்கின்றனர். இச்சடங்கை செய்வதால் மணம் முடிக்கும் அத்தம்பதியரின் இல்வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.
அவதாரங்கள் பல எடுத்த மகாவிஷ்ணு தன்னை ஆணாகவும், உலகில் பிறந்த ஆண், பெண் உட்பட அனைத்து உயிர்களையும் பெண்ணாகவுமே கருதுகிறார். பெண், ஆணின் துணையின்றி வாழ முடியாது என்பதைப்போல, நாம் அப்பரம்பொருளின் துணையின்றி வாழமுடியாது என இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. இதை வலுப்படுத்தும் விதமாகவே அவரது கிருஷ்ணாவதாரமும் விளங்கியது. கோபியராக இருந்த பெண்கள் அனைவரும், இராமவதாரத்தில் அவர் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த ரிஷிகளே. பாதி ஆணும், பாதி பெண்ணுமாக காட்சி தரும் இவரது சிற்பம், இலட்சுமியை இத்தலத்தில் திருமணம் செய்து தன் மார்பில் மீண்டும் தாங்கியதால் இந்த வடிவம் ஏற்பட்டதாகவும் கூறலாம். இது சுவாமியின் விமானத்தில் உள்ளது.

தான் கொண்ட அகங்காரத்தில் நரம்பு புடைக்கப்பெற்ற பிருகுமுனிவரின் அகங்காரம் அழிந்த தலமென்பதால் இங்கு வணங்கிட நரம்புத்தளர்ச்சி நீங்கும் என்பதும், பொன்ன மரத்தின் அடியிலுள்ள சந்தான கோபாலகிருஷ்ணரை வணங்க, புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

இங்கு மூலவர் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சர்வதோபத்ரி எனப்படும். இங்கு இறைவனுக்கு சுத்தான்னம் நைவேத்யம் செய்கிறார்கள்.

சுவாமிக்கு வலப்புறம் தாயார் யோக பத்மாசனத்தில் அமர்ந்து அருளுகிறார். ஆதியில் இருந்த வேணுகோபாலர் தனிச்சன்னதியில் உள்ளார். சுவாமிக்கு எதிரே கருடன், கொடிக்கம்பம், ஆஞ்சநேயர் சன்னதியும் வரிசையாக அமைந்திருப்பது சிறப்பு. சுவாமிக்கு எதிரில் பக்தஆஞ்சநேயராக 8 அடி உயரத்தில் தனிச்சன்னதியில் அருளுகிறார். பிரம்மபட்டம் பெறுவதற்காக, ஆஞ்சநேயர் இவ்விடத்தில் சுவாமியை வணங்கியதாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

இதயத்திலிருந்து வெளிப்படும் ஒளியிலிருந்து உருவம் உண்டாக்கும் மகாவிஷ்ணுவின் விகனச உத்பவ கோலம், ஆதிசேஷன் மீது அமர்ந்த நரசிம்மரை தூக்கியிருக்கும் கருடன் சிற்பங்களும் விமானத்தில் உள்ளன.

திருவிழா:

வைகாசியில் தேர்த்திருவிழா, இராமநவமி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

திருமணதோஷம் உள்ளவர்கள் ஆண்டாள் திருக்கல்யாணத்தை கண்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் வேண்டி பொன்ன மரத்தின் அடியிலுள்ள சந்தான கோபாலகிருஷ்ணரை பிரார்த்தனை செய்கின்றனர். இத்தல இறைவனை வேண்டிக்கொள்ள நரம்புத்தளர்ச்சி நோய்கள் நீங்கும்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *