அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில், அயோத்தியாப்பட்டணம்

அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில், அயோத்தியாப்பட்டணம், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இராமர்

தாயார்

சீதை

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அயோத்தியாப்பட்டணம்

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

இராவண வதம் முடிந்து இராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட புராதன சிறப்பு மிக்க கோயில் சேலம் அயோத்தியாபட்டணம் இராமர் கோயில். வட இந்தியா சென்று அயோத்தியில் உள்ள ராமரை வழிபட வேண்டும் என்று அவசியம் இல்லை. சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் இராமரை வழிபட்டாலே போதும். சகல புண்ணியங்களும் கிட்டும். சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று இராவணனை கொன்ற இராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அயோத்திக்கு திரும்ப வேண்டும் என்றால் சைலமலைக் குன்றுகள் வழியாகய்த்தான் திரும்ப வேண்டும். இராமர், சீதை, இலட்சுமணன், அனுமார், சுக்ரீவர், விபீஷணர் அனைவரும் சைலமலைக் குன்றுப் பகுதியை வந்தடைந்த போது லேசாக இருட்டத் தொடங்கியது. களைப்பாறி விட்டு செல்லலாம் என்று நினைத்த போது, சிறிய அளவிலான கோயில் ஒன்று தென்பட்டது. இங்கு இராமர், சீதை, இலட்சுமணன் உட்பட அனைவரும் அன்றிரவு தங்கினர். விடிந்து எழுந்த போது பட்டாபிஷேகத்திற்கான நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டது. நேரம் தவறினால் ராஜகுற்றமாகிவிடும் என்று எண்ணிய இராமர் இந்தக் கோயிலிலேயே பட்டாபிஷேகம் செய்து கொண்டதாகவும், பின்பு அயோத்தி சென்று முறைப்படி பட்டாபிஷேகம் முடித்தார் என்றும் சொல்வதுண்டு.

புராதனச் சிறப்போடு, ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான அதேசமயம் கம்பீரமான தோரணையில் வீற்றிருக்கிறது அயோத்தியாபட்டணம் கோதண்டபாணி இராமர் கோயில். இராமர் காலடி பட்டதால் அயோத்தியாபட்டணம் என்ற பெயரை இவ்விடம் பெற்றது. இங்குள்ள ஒவ்வொரு கல்லும் கவி பாடுகின்றன. கலைநுட்ப வேலைப்பாடுகள் மிக்க தூண்களை தட்டினால் பல்வேறு இசை ஒலிகள் எழுந்து மனதை மயக்குகின்றன. தாரமங்கலம் கைலாசநாதர் பெருமாள் கோயில், திருச்செங்கோடு முருகன் கோயில், மதுரை திருமலை நாயக்கர் மஹால் ஆகியவற்றுடன் இந்த கோயிலும் ஒரே காலத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. இதற்கு இங்குள்ள பிரமாண்டமான சிற்பங்களே சாட்சி.

அசுரனை வதை செய்யும் தேவர், குதிரை, யானை, யாழி, சிங்கம் போன்றவற்றின் மீது அமைந்திருப்பது போன்ற ஒரே கல்லில் செய்யப்பட்ட பல்வேறு கற்சிற்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. சிற்பங்களில் குறிப்பாக இராமர் பட்டாபிஷேகக் காட்சி, பரதன், சத்ருக்னன், இலட்சுமணன் கற்சிற்பங்களைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு தூணில் திருமலை நாயக்கர் தன் தேவியுடன் காட்சி தருகிறார். சிற்ப கலைக்கு மட்டுமல்ல. ஓவியக் கலைக்கும் பெயர் பெற்றது இக்கோயில். இவ்வளவு ஆண்டுகளாகியும் காலத்தால் அழியாத அன்றைய அற்புத ஓவியங்கள் கோயிலின் சிலீங்கில் பார்ப்போரை சிலிர்ப்படைய வைக்கின்றன.

இங்கு இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில் கோயில் கதவு ஓட்டை வழியாக வரும் சூரிய ஒளி பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது கோயிலை சுற்றி எழுப்பப்பட்டு விட்ட கட்டடங்களால் தடுக்கப்பட்டு விட்டது.

மூலஸ்தானத்திற்கு பாதுகாவலர்களாக துவார பாலகர்கள் வீற்றிருக்கின்றனர். அவர்களை வணங்கி விட்டு உள்ளே சென்றதும் இடம் இருந்து வலமாக ஆஞ்சநேயர், சத்ருக்கனன், பரதர், இராமர், சீதை, இலட்சுமணன், சுக்ரீவர், விபீஷ்ணர் வீற்றிருக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். கலைநுட்ப வேலைப்பாடுகள் மிக்க தூண்களை தட்டினால் பல்வேறு இசை ஒலிகள் எழுகிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பத்தில் சிங்கம், கீழே யானை என்று அதிசயிக்க வைக்கின்றன.

திருவிழா:

ஸ்ரீ ராம நவமி.

கோரிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *