அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், பெரியமணலி

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், பெரியமணலி, நாமக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நாகேஸ்வரர்

தாயார்

சிவகாமி அம்பிகை

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பெரியமணலி

மாவட்டம்

நாமக்கல்

மாநிலம்

தமிழ்நாடு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கே பாப்பாத்தி என்னும் ஒரு பெண்மணி, கணவரை இழந்து தனியே வாழ்ந்து வந்தாள். தீவிர சிவபக்தி கொண்டிருந்த பாப்பாத்தி, தினமும் கோயிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்வது வழக்கம். இவளது பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், ஒருநாள் அவளுக்குத் திருக்காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல வரலாறு. தன் பக்தைக்குக் காட்சி தந்தபோது, நாகம் ஒன்று சன்னதியின் இலிங்கத் திருமேனியில் இருந்து வெளியே வந்து, பிறகு மீண்டும் சன்னதிக்குச் சென்று இலிங்கத் திருமேனியைச் சுற்றியபடி காட்சி தந்தது. எனவே, இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீநாகேஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது என்கின்றனர், பக்தர்கள்.

ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை என விழாக்கள் விமரிசையாக நடைபெறும் இந்த ஆலயத்தில், மாசி மாதத்தின் மகாசிவராத்திரி சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. அன்னாபிஷேக விழாவின் போது தருகிற பிரசாதத்தைச் சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனச் சொல்கின்றனர். மகாசிவராத்திரி நன்னாளில், இரவில் நான்கு கால பூஜைகள் விமரிசையாக நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு சிவனருளைப் பெறுவதற்காக நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் முதலான பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரளெனக் கலந்துகொள்வார்கள். தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுத் தவிப்பவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் அல்லல்படுபவர்கள், குடும்பத்தில் கருத்துவேறுபாடு உள்ளவர்கள் ஆகியோர், மகாசிவராத்திரி திருநாளில் இங்கு வந்து சிவனாரை வழிபட, விரைவில் அனைத்து நலனையும் பெறுவர் என்பது நம்பிக்கை. மகாசிவராத்திரி பூஜையில் பங்கேற்று நாகேஸ்வரரைத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.

இங்கு துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, காலபைரவர், கல்யாண சுப்ரமணியர் மற்றும் சூரிய சந்திரர்கள் ஆகியோர் தனித்தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். நாகம் நேரில் வந்து இங்குள்ள மூலவரை வழிபட்டதால் இத்தல இறைவன் நாகேஸ்வரர் என அழைக்கப்படுவது சிறப்பு.

திருவிழா:

ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, மகாசிவராத்திரி பிரதோஷம்.

கோரிக்கைகள்:

இங்கு வந்து சிவனை வழிபட்டுப் பிரார்த்திக்க, நாக தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல், திருமணத் தடை நீங்க, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *