அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், குராயூர்-கள்ளிக்குடி

அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், குராயூர்கள்ளிக்குடி, மதுரை மாவட்டம்.

+91 452-269 3141, 98432- 93141 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வேணுகோபால சுவாமி

தாயார்

பாமா, ருக்மணி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

குராயூர்கள்ளிக்குடி

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

தென்காசியைத் தலைநகராகக் கொண்டு 14ம் நூற்றாண்டில் ஆண்ட வென்று மாலையிட்ட வீரபண்டியன், பெருமாளுக்கு ஒரு கோயில் எழுப்ப விரும்பினான். அவனது நாடு விரிந்து பரந்திருந்தது. அவன் மதுரைக்கும் அடிக்கடி சென்று வருபவன். கள்ளிக்குடியை அடைந்த நேரத்தில் அவனுக்கு ஸ்ரீமந் நாராயணனின் நினைவு மனதில் எழுந்தது. இதை நாராயணனின் சித்தமாகவே உணர்ந்த அவன், நினைவு எழுந்த இடத்திலேயே பெருமாளுக்கு கோயில் அமைத்தான். சுவாமிக்கு வேணுகோபாலன் என்று பெயரிட்டான். அதன்பின் வீரபாண்டியன், பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் ஆகியோர் கோயிலை விரிவுபடுத்தினர்.

அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயில் தற்போது சிதிலமடைந்துள்ளது. கருவறையில், புல்லாங்குழல் இசைக்கும் கோலத்தில் பாமா, ருக்மணி சமேதராக வேணுகோபால சுவாமி எழுந்தருளியுள்ளார். சிறிய தோற்றம் உடையவராக இருந்தாலும் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய பலனை அளிக்கிறார். ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் வாழ்ந்த புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை என்ற சிறப்பை பெற்றிருப்பது போல், இங்குள்ள நந்தவனத்திலுள்ள புளியமரமும் பூப்பதும், காய்ப்பதும் இல்லை என்ற சிறப்பை பெற்றுள்ளது.

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் ஆற்றின் கரையில் இருக்கும் ஊர்கள் புனித மானவை. குராயூரில் கமண்டல நதி இம்மாதிரியே ஓடுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரும் குரா மலர்கள் இப்பகுதியில் முன்பு கிடைத்ததால் குராயூர் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு சனிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், மாலையில் பூஜையும் நடக்கிறது. திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார தொழில் அபிவிருத்தி, குடும்ப அமைதி அடைவதுடன் தூய்மையான வாழ்க்கை கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது. கிராமமக்கள் விவசாய விளைநிலங்களில் கிடைக்கும் விளைபொருட்களை பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். பிறந்து மூன்று மாதமான குழந்தைகள் பிற்காலத்தில் சிறப்பாகப் படிக்க மாவிளக்கு ஏற்றப்படுகிறது.

நுழைவு வாயில், மகா மண்டபம், ஆழ்வார்கள் மேடை, அர்த்த மண்டபம், கருவறை என நான்கு பிரிவுகளாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னதியின் எதிரில் பெரிய திருவடி கருடாழ்வார், கல்தூணில் சிறிய திருவடி ஆஞ்சநேயர் உள்ளனர். விஸ்வக்சேனர், நம்மாழ்வார், இராமானுஜர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் உள்ளன.

திருவிழா:

தமிழ் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை, தீபாவளி, பொங்கலன்று சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.

கோரிக்கைகள்:

திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார தொழில் அபிவிருத்தி, குடும்ப அமைதிக்காக இங்குள்ள பெருமாளை வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, வாஸ்திரம் சாற்றி, விளைநிலங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *