அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர்

அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 44 2716 2236 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஆதிகேசவப் பெருமாள்

தாயார்

யதிராஜநாதவல்லி

தீர்த்தம்

அனந்தசரஸ் தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பூதபுரி

ஊர்

ஸ்ரீபெரும்புதூர்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

கைலாயத்தில் உள்ள பூதகணங்கள், சிவனிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெற மகாவிஷ்ணுவை வேண்டின. சுவாமி, அனந்தன் என்னும் சர்ப்பத்தால் இங்கு தீர்த்தம் (அனந்தசரஸ் தீர்த்தம்) உண்டாக்கி, அதன் கரையில் காட்சி தந்து விமோசனம் கொடுத்தார். இதற்கு நன்றிக்கடனாக பூதகணங்கள் இங்கு சுவாமிக்கு கோயில் எழுப்பின. இதனால் பூதபுரி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் என மாறியது. சுவாமிக்கு ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.

ஆடிப்பூர விழாவின் முதல் நாளில் இருந்து ஆவணி பூரம் வரையில் ஆண்டாள், சுவாமி சன்னதிக்குள் எழுந்தருளி சேர்த்தி காட்சி தருவாள். மார்கழி மாதத்திலும் சுவாமி சன்னதிக்குள் இருப்பாள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க சுவாமியுடன் கூடிய ஆண்டாளை வணங்குகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூரில் வசித்த கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு 1017ம் ஆண்டு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையின் மாமா பெரிய திருமலை நம்பி, திருப்பதியில் சேவை செய்து வந்தார். குழந்தை லட்சுமணர் போல இருந்ததால், “இளையாழ்வார்எனப்பெயர் சூட்டினார். ஆதிகேசவர் கோயில் எதிரே, இராமானுஜர் பிறந்த இடத்தில் மண்டபம் உள்ளது. சித்திரை விழாவின் 10 நாட்களும் இராமானுஜர் இங்கு எழுந்தருளுவார். திருநட்சத்திரத்தன்று ஊஞ்சலில் தாலாட்டி, சங்குப்பால் தரும் வைபவம் இங்கு நடக்கும். இவ்வேளையில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர், திருமாலிருஞ்சோலை (மதுரை கள்ளழகர் கோயில்) உள்ளிட்ட 36 திவ்ய தேசங்களில் இருந்து இராமானுஜருக்கு பரிவட்டம் கொண்டு வந்து மரியாதை செய்யப்படும்.

ராமானுஜருக்கு யதிராஜர் என்ற பெயரும் உண்டு. “யதிஎன்றால் சந்நியாசி,” “ராஜர்என்பது தலைமைப் பண்புடையவரைக் குறிக்கும். இத்தலத்தில் தாயார், “யதிராஜநாதவல்லிஎன்ற பெயரில் அருளுகிறாள். தன் பக்தரின் பெயரில் தாயார் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு.

அனுஜன் என்றால் இளையவர் என பொருள். இராமனுக்கு இளையவரான இலட்சுமணரின் அம்சமாகப் பிறந்ததால் இவர் இராமானுஜர் (ராமன் அனுஜன்) என்றழைக்கப்பட்டார். இராகு, கேது தோஷம், காளசர்ப்ப தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள அனந்தசரஸ் தீர்த்தத்தை தலையில் தெளித்து, இராமானுஜருக்குப் பாலபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி வணங்குகின்றனர்.

வருடத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு விழா கொண்டாடுகிறார்கள். பிரதான விழா இல்லாத நாட்களில் செல்வர் (பெருமாளின் உற்சவர் வடிவம்) காலை, இரவில் புறப்பாடாவார். மாலையில் ஒரு வாசனைப்பூ மாலையை, மேளதாளத்துடன் புறப்படச் செய்கின்றனர். சுவாமியே, பூ வடிவில் பவனி வருவதாக ஐதீகம்.

தீபாவளி துவங்கி தை மாத அஸ்தம் நட்சத்திரம் வரையில் இராமானுஜருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்கின்றனர். குளிர்காலம் என்பதால் இக்காலகட்டத்தில் இராமானுஜருக்கு கோட் அணிவித்து, கம்பளி போர்த்துகின்றனர். உடல் முழுவதும் போர்த்த வெல்வெட் அங்கி, உல்லன் சால்வை, தலை முதல் பாதம் வரை போர்த்த குன்சம் என்ற ஆடை ஆகியவை இங்குள்ளன. மாசி முதல் புரட்டாசி வரையில் கோடைகாலத்தில் சுவாமியை குளிர்ச்சிப்படுத்த சந்தனக்காப்பிடுகின்றனர்.

ராமானுஜரின் விசேஷமான திருமேனிகள் (சிலை) கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயணபுரம் (மேல்கோட்டை), ஸ்ரீரங்கம் மற்றும் இத்தலத்தில் உள்ளன. இங்குள்ள சிலை தானுகந்த திருமேனி ஆகும். இராமானுஜரின் அடியார்கள், அவரது ஆலோசனைப்படி ஒரு சிலை வடித்தனர். இராமானுஜர் அச்சிலையைத் தழுவி, அதில் தன் சக்தியை புகுத்தினார். இராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இது, “தானுகந்த திருமேனிஎனப்பட்டது. இந்த சிலையைச் செய்தபோது, இராமானுஜருக்கு வயது 120. அந்த வயதிற்குரிய தோற்றத்திலேயே ராமானுஜரின் விலா எலும்பு, காதுமடல் ஆகியவை தெரியும்படியாக சிலை தத்ரூபமாக இருக்கிறது.

மன்னன் ஒருவன் இராமானுஜர் மீது வஞ்சகம் கொண்டு, அவரை தண்டிக்க எண்ணினான். இதையறிந்த இராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வார், இராமானுஜரின் காவி ஆடையை அணிந்து கொண்டு மன்னனிடம் சென்றார். இராமானுஜர், கூரத்தாழ்வாரின் வெண்ணிற ஆடையை அணிந்து தப்பிச் சென்றார். உண்மையறிந்த மன்னன், கூரத்தாழ்வாரின் கண்களைக் குருடாக்கி விட்டான். குருவுக்காக தன் கண்களை தியாகம் செய்த சிஷ்யனுக்கு மரியாதை செய்யும்விதமாக, சித்திரை திருவிழாவில் ஒருநாள் ராமானுஜர் வெண்ணிற ஆடை அணிந்து காட்சி தருகிறார்.

மன்னன் ஒருவன் தன் மகளின் விருப்பத்திற்காக, கர்நாடகாவிலுள்ள திருநாராயணபுரத்தில் இருந்த பெருமாள் சிலையை டில்லிக்கு எடுத்துச் சென்றான். இதையறிந்த இராமானுஜர், சிலையை மீட்க டில்லி சென்றபோது, சுவாமி சிலை அவரது மடியில் வந்து அமர்ந்தது. “இதோ, என் செல்லப் பிள்ளைஎன ஆனந்தத்தில் கண்ணீர் விட்டார். இதன்பிறகு இந்தப் பெருமாளை செல்லப்பிள்ளை என்றே அழைத்தனர். பங்குனி பூசத்தன்று இராமானுஜர் மடியில் செல்லப்பிள்ளை அமர்ந்து வீதியுலா செல்லும் வைபவம் இங்கு நடக்கும்.

தொண்டைநாட்டு மன்னனான ஹாரீத மகாராஜன், வேட்டைக்குச் சென்றபோது, ஒரு பசுவை புலி அடிக்கச் செல்வதைக் கண்டான். புலி மீது அம்பெய்தான். ஆனாலும், உக்கிரம் கொண்ட புலி, பசுவைக் கொன்றுவிட்டது. இதனால், மன்னனுக்கு கோ சாபம் உண்டானது. இதற்கு இங்கு சுவாமியை வேண்டி நிவர்த்தி பெற்றான். இவ்வாறு, அறியாமல் செய்த பாவங்களையும் போக்குபவராக இங்கு சுவாமி அருள்கிறார். இராமானுஜர் சன்னதிக்குப் பின்புறம் பல்லி சிற்பம் இருக்கிறது. செய்த பாவத்திற்கு நிவர்த்தி கிடைக்கவும், மோட்சம் பெறவும் இந்த பல்லியை வணங்குகின்றனர்.

120 ஆண்டுகள் வாழ்ந்த இராமானுஜர், அடுத்த பிறப்பில் மணவாளமாமுனிகளாக தோன்றி, பாஷ்யங்களை உபதேசம் செய்தார். இராமானுஜர் சன்னதி பிரகாரத்தில் இவர் உபதேசித்த இடத்திலுள்ள ஒரு தூணில், மணவாளமாமுனிகள் சிலை உள்ளது. கோயிலுக்கு வெளியே மணவாளமாமுனிகளுக்கு தனிக்கோயிலும் உள்ளது.

இராமானுஜர் சன்னதி எதிரே மைசூரு மகாராஜா கட்டிக்கொடுத்த, தங்க மண்டபம் இருக்கிறது. இதில் வேதங்களைக் குறிக்கும்விதமாக நான்கு கலசங்கள், அதன் கீழே பரவாசுதேவன்பெருமாள், அடுத்து அரங்கநாதர், அதற்கு கீழே ஸ்ரீதேவி, பூதேவியுடன் நம்பெருமாள், கருடன், துவாரபாலகர்கள் இருக்கின்றனர். இம்மண்டபம் தனி கோயில் போன்ற அமைப்பில் உள்ளது. இராமானுஜர் அவதரித்ததால் இது, நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், இராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அவ்வேளையில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, இங்குள்ள மணிக்கதவை (சன்னதிகதவு) திறப்பர்.

திருவிழா:

மாசி பூரம், பங்குனி உத்திரம், பங்குனி அல்லது சித்திரையின் கடைசி வெள்ளியில் மட்டும் ஆதிகேசவர், யதிராஜநாதவல்லி, ஆண்டாள், இராமானுஜர் ஆகியோருக்கு ஒரே சமயத்தில் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும்.

கோரிக்கைகள்:

இராகு, கேது தோஷம், காளசர்ப்பதோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

இராமானுஜருக்கு பாலபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி வணங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *