அருள்மிகு துர்க்கை கோயில், பட்டீசுவரம்

அருள்மிகு துர்க்கை கோயில், பட்டீசுவரம், தஞ்சை மாவட்டம்
**********************************************************************

மூலவர்:பட்டீசுவரர்

அம்மன்: பல்வளைநாயகி

தல விருட்சம்: வன்னி

தீர்த்தம்:ஞானவாவி

பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்:மழபாடி, திருப்பட்டீசுவரம் ஊர்:திருப்பட்டீச்சுரம்

மாவட்டம்: தஞ்சாவூர்

மாநிலம்: தமிழ்நாடு

பட்டிக்கன்று மணலினால் ஓர் லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

அருள்மிகு தேனுபுரீசுவரர் ஆலயம், பட்டீசுவரத்தில் உள்ளது. பட்டீசுவரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீசுவரம் கோவிலில் பிரதிட்டை செய்தார்கள்.

தேவலோகப் பசுவான காமதேனுவின் மகள் பட்டி, இங்கே ஈசனைப் பூசித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் என்றாயிற்று. கோயிலின் வடக்கு வாயிலில் சுமார் ஆறடி உயரமுள்ள துர்க்கை அருள்கிறாள்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு காலங்களிலும், அமாவாசை, பௌர்ணமி, அட்டமி, நவமி திதிகளிலும் இந்த துர்க்கை கோலாகலமாக பூசிக்கப்
படுகிறாள். சாந்த வடிவமாக, எட்டுத் திருக்கரங்கள், முக்கண்களுடனும், காதில் குண்டலங்கள் துலங்க அன்னை மீனாட்சியைப் போலவே கையில் கிளி ஏந்திப் பரவச தரிசனம் அளிக்கிறாள் துர்க்கை.

அன்னை கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் போன்றவற்றை ஏந்தி வலக் கரத்தை அபயமாகவும், இடக்கரத்தை தன் தொடையின் மீது இருத்தியும் அழகே வடிவாய் உள்ளாள். பொதுவாக காளி மற்றும் துர்க்காம்பிகைக்கு சிம்ம வாகனம் மேற்கு நோக்கியே காணப்படும். ஆனால் இந்த துர்க்கையின் சிம்ம வாகனம் இடப்புறம் நோக்கி வித்தியாசமாகக் காணப்படுகிறது.

இந்த அன்னைக்கு அடிக்கடி சண்டி யாகம் நடப்பதால், சண்டி யாகத்திற்கென்றே ஒரு மண்டபம் ஆலயத்தில் உள்ளது.

ஆலய ஈசன் தேனுபுரீஸ்வரர் என்றும் அம்பிகை ஞானாம்பிகை என்றும் வணங்கப்படுகின்றனர். தலவிருட்சமாக வன்னி மரமும், தல தீர்த்தமாக ஞானதீர்த்தம் எனும் கோடி தீர்த்தமும் திகழ்கின்றன. பராசக்தி இத்தலத்தை தேர்ந்தெடுத்து தவம் புரிய, அவளுக்கு ஈசன் தன் சடைமுடியுடன் தரிசனம் தந்தார்.

இத்தலத்து ஈசன் திருஞானசம்பந்தர் தம்மைத் தரிசிக்க ஏதுவாக நந்தியை விலகியிருக்கச் சொன்னார். அதனால் இக்கோயிலின் ஐந்து நந்திகளும் சந்நதியிலிருந்து விலகியே உள்ளன.

விசுவாமித்திர முனிவர் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து, சித்தி பெற்று அதன் பயனால் பிரம்மரிஷிப் பட்டத்தை அடைந்த தலம் இது.

வாலியைக் கொன்ற தோஷம் போக்க ராமபிரான் இத்தலத்தில் தன் வில்லால் கோடி தீர்த்தம் எனும் கிணற்றை உருவாக்கி அதன் நீரால் ஈசனை அபிஷேகம் செய்து வழிபட்டாராம். அந்த லிங்கம், ராமலிங்கமாய் இத்தலத்தில் அருள்கிறது.

மாளவ தேசத்து தர்மசர்மா எனும் அந்தணர் மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் உருவை இத்தல ஞானதீர்த்தத்தில் நீராடிப் போக்கிக் கொண்டதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனிதத் தலங்களான கயிலாயம், திருவாரூர், திருவெண்காடு, திருச்சாய்க்காடு, விருத்தாசலம் போன்ற தலங்களுள் ஒன்றாக பட்டீஸ்வரமும் திகழ்கிறது.

இத்தல காவல் தெய்வமான பைரவரும் துர்க்காம்பிகையைப் போன்றே நெடிதுயர்ந்து தரிசனமளிக்கிறார்.

ஆலயத்தில் நாயக்க மன்னர்கள் கால ஓவியங்களும், நாயக்க மன்னர்களின் அமைச்சராக விளங்கிய கோவிந்த தீட்சிதரின் திருவுருவையும் தரிசிக்கலாம்.

ஞானாம்பிகை சந்நதியின் முன் உள்ள மண்டபத்தில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதையும், மண்டப நடுவில் கல்லாலான ஊஞ்சல் சங்கிலியையும் பார்த்து வியக்கலாம்.

கும்பகோணத்திற்கு தென்மேற்கே 8 கி.மீ தொலைவிலும், சுவாமிமலையில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் உள்ளது இத்தலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *