அருள்மிகு திருவனந்தீஸ்வரர் திருக்கோயில், காட்டுமன்னார் கோயில்

அருள்மிகு திருவனந்தீஸ்வரர் திருக்கோயில், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம்.

+91 94864 57124 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருவனந்தீஸ்வரர்

தாயார்

சவுந்தரநாயகி

தல விருட்சம்

தீர்த்தம்

சூரிய சந்திர புஷ்கரணி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

திருவனந்தீஸ்வரம்

ஊர்

காட்டுமன்னார் கோயில்

மாவட்டம்

கடலூர்

மாநிலம்

தமிழ்நாடு

அட்டநாகங்களில் (எட்டு நாகம்) ஒன்றான அனந்தன் தனது குறை நீங்க, இத்தல இறைவனை வழிபட இங்கு வந்தது. எனவே இவ்வூருக்கு திருவனந்தீஸ்வரம் என்ற புராணப் பெயர் இருந்தது. தற்போது காட்டுமன்னார்கோயில் எனப்படுகிறது. ஒருகாலத்தில் இங்கு வில்வ மரங்கள் அதிகமாக இருந்தன. கங்கை கொண்ட முதலாம் ராஜேந்திரசோழன், அனந்தீஸ்வரரைத் தனது குலதெய்வமாக வணங்கியுள்ளான். கோயில் கர்ப்பகிரகத்தை சுற்றிலும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இதில் உள்ளன.

அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருக்கிறது. காலசர்ப்ப தோஷம் நீங்க அனந்தீஸ்வரருக்கும், அம்பாள் சவுந்தரநாயகிக்கும் அபிஷேகம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இது இயலாதவர்கள் வெள்ளியிலோ பிற உலோகங்களாலே ஆன நாக வடிவிலான உருவங்களை காணிக்கை செலுத்தலாம். சிவன் சன்னதி அருகில் சனிபகவானுக்கும் சன்னதி உள்ளதால், அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவற்றின் பிடியில் உள்ளோரும் அனந்தீஸ்வரரை வணங்கி வரலாம்.

இராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சோழப்பேரரசியுமான செம்பியன்மாதேவியாருக்கு திருமணம் நடந்த தலம் இது. எனவே அனந்தீஸ்வரர் கோயிலுக்கு, தன் பெயரால் நந்தாவிளக்கு அறக்கொடை அளித்துள்ளார். உத்தமசோழன் காலத்தில் அடிகள் பழுவேட்டரையன் கண்டன் சுந்தரசோழன் என்ற பழுவூர் அரசன், தன் தம்பிகண்டன் சத்துருபயங்கரன் என்பானின் ஆன்மசாந்திக்காக நந்தாவிளக்கு வைக்க மானியம் வழங்கியுள்ளான். இந்த விளக்குகளை ஏற்ற எண்ணெய் காணிக்கை கொடுத்தால் நம் குலம் செழிக்கும் என்பதும், நம் முன்னோரின் ஆசி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

கோயில் சுற்றுச்சுவரிலுள்ள தெய்வங்கள் பெரும்பாலும் சிதைந்துள்ளன. முற்காலச் சோழர் காலத்தில் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நந்தி, பிற்காலப் படையெடுப்புக்கள், சூறையாடல்களால் சிதைக்கப்பட்டது. ஆனால், நந்தியின் தலை மட்டும் மிஞ்சியது. இந்தத் தலையை தென்புற திருச்சுற்று சுவரில் பதித்து வைத்துள்ளனர். தூண்களின் மத்தியில் காணப்படும் அன்னப்பறவைகளின் உருவம் உள்ள சிற்பங்கள் மிக அரிய படைப்பாகும்.

சிலர் தீராத நோயால் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு சுகமளிக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. சுந்தரபாண்டிய மன்னன் என்பவன் தொழுநோயால் அவதிப்பட்டு வந்தான். இந்நிலையில் அனந்தீஸ்வரர் கோயிலின் எதிர்புறமுள்ள சூரிய சந்திர புஷ்கரணியில் நீராடி, இறைவனை வணங்கி குணமடைந்தார். தீராத நோயால் அவதிப்படுபவர்களும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்களும் சுவாமி, அம்பாளிடம் வேண்டிக் கொள்வதால் சுகமடைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மூலவர் அனந்தீஸ்வரர் கிழக்கு நோக்கியும், சவுந்திரநாயகி அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். சர்ப்பதோஷ நிவர்த்தி தலமான இங்கு, துர்க்கை சன்னதியும் இருப்பதால் இராகுகால பூஜை நடந்து வருகிறது. நின்ற நிலையில் உள்ள விநாயகர் சிலையைப்பார்த்துக் கொண்டே இருக்கலாம். பிரம்மா, சூரியன் ஆகியோரையும் இங்கு தரிசிக்கலாம்.

திருவிழா:

வைகாசி விசாகம்.

கோரிக்கைகள்:

காலசர்ப்ப தோஷம் நீங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்களும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்களும் சுவாமி, அம்பாளிடம் வேண்டிக் கொள்வதால் சுகமடைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்தும், அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *