அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்

அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், மலைக்கோட்டை அடிவாரம், திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம்.

+91- 451 – 2433 229 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சீனிவாசப் பெருமாள்

உற்சவர்

கல்யாண சீனிவாசர்

தாயார்

அலமேலு மங்கை

தல விருட்சம்

நெல்லி

தீர்த்தம்

பத்மகிரி தீர்த்தம்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பத்மாசலம்

ஊர்

திண்டுக்கல்

மாவட்டம்

திண்டுக்கல்

மாநிலம்

தமிழ்நாடு

பெருமாள் அடியார்கள் சிலர், மகாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி இங்கு ஒரு யாகம் நடத்தினர். அப்போது அசுரன் ஒருவன், அவர்களைத் தொந்தரவு செய்தான். அசுரனை அழித்து யாகம் தடையின்றி நடக்க அருளும்படி அவர்கள், பெருமாளிடம் வேண்டினர். சுவாமியும் அசுரனை அழித்தார். இவ்வேளையில் அவர் உக்கிரமாக இருந்தார். சுவாமியின் உக்கிரத்தைக் குறைக்கும்படி, அவர்கள் மகாலட்சுமியை வேண்டினர். தாயாரும் சுவாமியை சாந்தப்படுத்தினார். பின்பு இருவரும் இங்கேயே எழுந்தருளினர். பிற்காலத்தில் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமிக்கு கோயில் எழுப்பப்பட்டது. இவர் சீனிவாசர்என திருநாமம் பெற்றார்.

திண்டுக்கல் மலைக் கோட்டையின் அடிவாரத்தில் அமைந்த கோயில் இது. மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் நெல்லி மரமே இத்தலத்தின் விருட்சமாகும். இதை துளசிக்கும் ஒப்பானதாகச் சொல்வர். மகாலட்சுமி இருக்குமிடத்தில், மகாவிஷ்ணு வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலத்தை மகாவிஷ்ணுவின் இருப்பிடமாகக் கருதுகின்றனர். மாங்கல்யம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். சுவாமி, வலது கையை ஆகாயம் நோக்கிக் காட்டியும், இடது கையால் பூமியைக் காட்டியபடியும் இருக்கிறார். கோயில் முகப்பில் பெரிய கருடாழ்வார் நின்ற நிலையில் இருக்கிறார். சித்ரா பவுர்ணமியன்று சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, குடகனாற்றில் இறங்குவார். ஆனி பிரம்மோற்ஸவம் மற்றும் பங்குனி உத்திரத்தன்று சுவாமிக்கு திருக்கல்யாண விழா நடக்கிறது.

சுவாமிக்கு வலப்புறம் தாயார் அலமேலு மங்கை, இடப்புறம் ஆண்டாள் இருவரும் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலையில் தாயார் சன்னதியில் கோமாதா பூஜையுடன், விசேஷத் திருமஞ்சனம் நடக்கும். இவ்வேளையில் பால் மற்றும் மஞ்சள் பிரசாதமாகத் தருவர். இப்பூஜையில் கலந்து கொண்டால் பெண்கள் சுமங்கலிகளாக இருப்பர், கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும் என்கிறார்கள். திருமாலை மணாளனாக அடைய விரும்பிய ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவைநோன்பிருந்தாள். இவ்வேளையில் அவள் பாடிய அற்புதப் பாசுரங்களே திருப்பாவை.” இம்மாதத்தின் பெருமையை உணர்த்தும்விதமாக, மார்கழி மாதம் முழுதும் ஆண்டாள் சன்னதியில் விளக்கு பூஜை நடக்கிறது. இம்மாதத்தில் மட்டும் தினமும் ஆண்டாளுக்கு சூடிக்களைந்த மாலையையே, சீனிவாசருக்கு அணிவித்து பூஜிக்கிறார்கள்.

சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரது சிலையில் சுற்றிலும் பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்புறம் நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கும் நரசிம்மருக்குக் கீழே நாகம் இருக்கிறது. இந்த நரசிம்மரைச் சுற்றி அஷ்டலட்சுமிகள் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பில் சக்கரத்தாழ்வார், நரசிம்மரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். சித்திரை நட்சத்திர நாட்களில் சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ திருமஞ்சனத்துடன், பூஜை நடக்கும். கடன் பிரச்னை தீர, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க இவ்வேளையில் வேண்டிக்கொள்ளலாம்.

பிரகாரத்திலுள்ள அபய ஆஞ்சநேயர் சிலையில் சுவாமியின் வால், அவரது இரு பாதத்திற்கு நடுவே இருக்கும்படியாக வடிக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்களும் வசிப்பதாக ஐதீகம். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள, கிரகம் தொடர்பான தோஷம் நீங்கும் என்கிறார்கள்.

இத்தல இறைவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இங்கு தாமோதர விநாயகர், நவநீத கிருஷ்ணர், நவக்கிரக சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர் உற்சவ மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். இக்கோயிலுக்கு அருகிலேயே அபிராமி கோயில், கோட்டை மாரியம்மன் கோயில்கள் உள்ளன. சக்கரத்தாழ்வாருக்குத் தனிச்சன்னதி இருக்கிறது. இவரது சிலையில் சுற்றிலும் பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.

திருவிழா:

சித்ரா பவுர்ணமி, ஆனியில் 13 நாட்கள். பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பங்குனி உத்திரம்.

கோரிக்கைகள்:

குழந்தைகள் மறதித்தன்மை நீங்கி, சுறுசுறுப்பாக இருக்கவும், கல்வியில் சிறக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

திருமணத்தடை நீங்க கல்யாண சீனிவாசருக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.

மாங்கல்யம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *