அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர்

அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை, சென்னை மாவட்டம்.

+91 -44-2498 5112, 2466 2039, 94440 18239 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை6.30 மணி முதல் 11மணி வரை, மாலை 4.39 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாதவப்பெருமாள்
உற்சவர் அரவிந்த மாதவன்
தாயார் அமிர்தவல்லி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் சந்தானபுஷ்கரிணி
ஆகமம் வைகானசம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மாதவபுரம்
ஊர் மயிலாப்பூர்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

திருமாலின் சாந்த குணத்தைச் சோதிக்கச்சென்ற பிருகு மகரிஷி, அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதனால் கோபம் கொண்ட மகாலட்சுமி, சுவாமியை பிரிந்தார். தன் தவறுக்குப் பிராயச்சித்தம் பெற விரும்பிய பிருகு மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டி, இத்தலத்தில் தவமிருந்தார். மகாலட்சுமி இங்குள்ள தீர்த்தத்தில் குழந்தையாக அவதரித்தாள். இலட்சுமி, அமுதம் கடைந்த பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு, “அமிர்தவல்லிஎனப்பெயரிட்டு வளர்த்தார் பிருகு. அவள் திருமண வயதை அடைந்தபோது, அவளை மணந்து கொள்ளும்படி திருமாலிடம் வேண்டினார். அவரும் இங்கு வந்து தாயாரை மணந்து கொண்டார். பிருகுவின் வேண்டுதலுக்காக சுவாமியும், தாயாரும் இங்கு எழுந்தருளினர்.

இங்குள்ள மூலவர் அமர்ந்த திருமண கோலத்தில் அருளுகிறார். இவருக்கு கல்யாண மாதவன் என்ற பெயரும் உள்ளது. மூலவரின் விமானம் ஆனந்த நிலை என அழைக்கப்படுகிறது. வேதவியாசர் நாரதரிடம் பூலோகில் தோஷம் இல்லாத தலம் எது என்று கேட்க, அவர் இத்தலத்தை கூறினாராம். அமிர்தவல்லித்தாயார் சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இங்குள்ள புஷ்கரிணியில் ஒரு மாசி மகத்தன்று குழந்தையாக தோன்றினாள். எனவே இத்தீர்த்தம், “சந்தான புஷ்கரிணிஎன்றழைக்கப்படுகிறது.

தாயார் அவதரித்த நாளில் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் இத்தீர்த்தத்தில் சங்கமித்ததாம். இதன் அடிப்படையில் மாசி மகத்தன்று இங்கு விழா நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டும் தாயார், சுவாமியுடன் சேர்ந்து தீர்த்தக்குளத்திற்கு எழுந்தருள்கிறாள். அப்போது தீர்த்த நீராடி, தாயாரை வணங்கிட பாவம் நீங்கி, புண்ணியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் தாயாருக்கு கல்கண்டு, குங்குமப்பூ, பால் மூன்றும் சேர்ந்த கலவையை நைவேத்யமாக வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால் குழந்தைப்பேறு உண்டாவதாக நம்பிக்கை. உற்சவர் தாமரை மலர் போன்று, அழகான முகத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர், “அரவிந்த மாதவன்என்று அழைக்கப்படுகிறார். அரவிந்தம் என்றால், தாமரை என்று பொருள். சதய நட்சத்திர நாட்களில் இவர், வீதி புறப்பாடாகிறார்.

பெருமாள் தலங்களுக்கு யாத்திரை சென்ற இராமானுஜர், கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரத்திற்குச் சென்றார். அங்கு உற்சவர் சம்பத்குமாரர் இல்லை. கலங்கிய இராமானுஜர், டெல்லியை ஆண்ட மன்னர் தன் மகளின் விருப்பத்திற்காக சிலையை கொண்டு போனதை அறிந்தார். பின்பு டெல்லி சென்ற அவர், திருமாலை வேண்டி வணங்கினார். அப்போது மன்னரின் அரண்மனையில் இருந்த பெருமாள் சிலை, அவரது மடியில் வந்தது. அச்சிலையை நாராயணபுரம் கொண்டு வந்த இராமானுஜர், மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த சம்பத்குமாரர் இங்கு உற்சவராக இருக்கிறார். இவரது பாதத்தில் டெல்லி மன்னரின் மகள் பீபி நாச்சியார் இருக்கிறாள். இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே இவருக்கு, “செல்வப்பிள்ளைஎன்ற பெயரும் உண்டு. பங்குனியில் சம்பத்குமாரருக்கு 10 நாட்கள் விழா நடக்கிறது. இவ்விழாவில் சுவாமி, இராமானுஜர் மடியில் அமரும் வைபவம் பிரசித்தி பெற்றது.

முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள மணிகைரவம் என்னும் கிணற்றில், செவ்வல்லி மலரில் அவதரித்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தையொட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கிறது. திருக்கோவிலூர் தலத்தில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் நிற்கச்செய்து அருளினார் திருமால். இதன் அடிப்படையில் இவ்விழாவில் மூன்று ஆழ்வார்களும் ஒன்றாக காட்சி தரும், “திருக்கோவிலூர் வைபவம்நிகழ்ச்சியும், பத்தாம் நாளில் பிறந்த தலமான கிணற்றிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருமழிசையாழ்வார், இத்தலத்தில் பேயாழ்வாரிடம் சீடராக இருந்து ஞான உபதேசம் பெற்றார். இந்த வைபவம், ஐப்பசி திருவிழாவின் 4ம் நாளில் நடக்கிறது. தாயார் சன்னதி முன்மண்டபத் தூண்களில் இவர் கிளி, யானை, குதிரை, சூரிய பிரபை மற்றும் அம்ச வாகனங்களில் காட்சி தரும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. பிரகாரத்தில் பூவராகப்பெருமாள், ஆண்டாள், இராமர், பால ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது. இக்கோயிலுக்கு அருகில் கபாலீஸ்வரர் கோயில், பின்புறம் முண்டகக் கண்ணியம்மன் கோயில் இருக்கிறது. இத்தலப் பெருமாளை தரிசிக்கச் செல்பவர்கள் இக்கோயில்களுக்கும் சென்று வரலாம். இத்தலம், “கலி தோஷம் இல்லாத தலம்என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

திருவிழா:

சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், நவராத்திரி, மாசியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.

கோரிக்கைகள்:

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமி, தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *