அருள்மிகு கல்யாண வரதராஜப்பெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை

அருள்மிகு கல்யாண வரதராஜப்பெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை, சென்னை, சென்னை மாவட்டம்.

+91- 99401 73559

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கல்யாண வரதராஜர்

உற்சவர்

பவளவண்ணர்

தாயார்

பெருந்தேவி

தல விருட்சம்

மகிழம்

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பத்மபுரம்

ஊர்

காலடிப்பேட்டை

மாவட்டம்

சென்னை

மாநிலம்

தமிழ்நாடு

முற்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கோலட்துரை என்பவர் இப்பகுதியை நிர்வகித்து வந்தார். அவரிடம் விஜயராகவாச்சாரியார் என்னும் பெருமாள் பக்தர் முக்கிய பொறுப்பில் பணியாற்றினார். தினமும் காஞ்சிபுரத்திலுள்ள பவளவண்ணப்பெருமாளைத் தரிசிப்பது இவரதுவழக்கம். பவளவண்ணரை வணங்காமல் எந்த வேலையையும் செய்ய மாட்டார். இவ்வாறு விஜயராகவர் தொடர்ந்து காஞ்சிபுரம் சென்றுவரவே, அவருக்காக கோலட்துரை இங்கு ஒரு பெருமாள் கட்டித் தந்தார். விஜயராகவர் இந்த பெருமாளை வணங்கி வந்தார். ஆனாலும், அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. மீண்டும் அவர் காஞ்சிபுரம் சென்றார். பவளவண்ணரை தரிசித்து இருப்பிடம் திரும்பினார். கோலட்துரை விசாரித்தபோது, விஜயராகவர் பவளவண்ணர் கோயிலின் உற்சவர் அழகில் மயங்கி, தினமும் காஞ்சிபுரம் செல்வதை அறிந்தார். எனவே, அத்தலத்திலுள்ள உற்சவரை இங்கு கொண்டு வந்தார். விஜயராகவர் சுவாமியை வணங்கினார். சுவாமி அவருக்கு காட்சி தந்து, “எனக்கு, திருமேனியில் எந்த வித்தியாசமும் கிடையாது. என்னை நினைக்கும் பக்தர்களின் உள்ளங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்என்றார். உண்மை உணர்ந்த விஜயராகவாச்சாரியார் தன் வாழ்நாள் முழுதும் இத்தலப் பெருமாளுக்கு சேவை செய்தார். இவ்வாறு பக்தருக்காக, பெருமாள் காட்சி தந்த தலம் இது. இங்கு சுவாமி வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

இங்குள்ள உற்சவர் பவளவண்ணப்பெருமாள் பிரசித்தி பெற்றவர். இவர் இடது கையில் தண்டம் வைத்தபடி காட்சி தருகிறார். பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் உற்சவர் பவளவண்ணர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தாயார் சன்னதி முன்மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அப்போது பவளவண்ணருக்கும், பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று முழுதும் பெருமாள், தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கும். மறுநாள் காலையில் இவர் மீண்டும் மூலஸ்தானம் திரும்புகிறார். திருக்கல்யாணத் தின்போது திருமணமாகாதவர்கள் சுவாமிக்கு மட்டைத்தேங்காய் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். பின்பு இந்த தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜையறையில் வைத்து வணங்குகிறார்கள். இவ்வாறு செய்வதால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. திருமண வரம் அருளும் பெருமாள் என்பதால் இவருக்கு, “கல்யாண வரதராஜப்பெருமாள்என்ற பெயரும் உண்டு.

இராமநவமியை ஒட்டி இங்கு 9 நாட்கள் விழா நடக்கிறது. பெரும்பாலான கோயில்களில் இவ்விழா, நவமியில் துவங்கி 9 நாட்கள் வரையில் நடக்கும். இராமர் பிறந்த பின்பு கொண்டாடப்படும் விழா என்பதால் இதனை, “ஜனன உற்சவம்என்பர். ஆனால் இத்தலத்தில், இராமர் பிறந்த தினத்திற்கு முன்பாக விழா துவங்கி, நவமியன்று விழா முடிகிறது. இதனை இராமர் பிறக்கும் முன்பு கர்ப்பத்தில் இருக்கும்போது, எடுக்கப்படும் விழாவாக கருதுவதால், “கர்ப்ப உற்சவம்என்றே அழைக்கப் படுகிறது. நவமியன்று, இராமபிரானுக்குப் பட்டாபிஷேகம் நடக்கிறது. முற்காலத்தில் இங்கு கர்ப்ப உற்சவம், ஜனன உற்சவம்என மொத்தம் 18 நாட்கள் விழா நடந்தது. தற்போது கர்ப்ப உற்சவம் மட்டும் 9 நாட்கள் நடக்கிறது.

இங்கு திரிதள விமானம் உள்ளது. தினமும் காலையில் சுவாமி சன்னதி முன்பு கோமாதா பூஜை நடக்கிறது. இராமர், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். வைகாசியில் தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது. அப்போது சக்கரத்தாழ்வார் தீர்த்த நீராடுகிறார். இத்தலத்திற்கு செல்பவர்கள் இங்கிருந்து சற்று தூரத்தில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமியையும் தரிசித்து திரும்பலாம். வடக்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி கோயில், சிவனருள் பெற்று முக்தியடைந்த பட்டினத்தார் கோயிலும் இவ்வூரில் பார்க்க வேண்டிய தலங்களாகும்.

தாயார் பெருந்தேவி சுவாமிக்கு வலதுபுறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். நவக்கிரகங்களுக்கு தனிச்சன்னதி உள்ளது. இச்சன்னதியில் ஒரு தாமரையின் மீதுள்ள பீடத்தின் மீது அனைத்து கிரகங்களும் இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

திருவிழா:

சித்திரையில் ராமானுஜர் விழா 10 நாள், வைகாசியில் பிரம்மோற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி, மாசிமகம், பங்குனி உத்ரம், ராமநவமி.

கோரிக்கைகள்:

கல்யாண வரதராஜரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமி, தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *