அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், பழைய பஸ் ஸ்டாண்டு அருகில், நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 98949 06455 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
உற்சவர் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர்
அம்மன் விசாலாட்சி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் வீரகங்கை
ஆகமம் காமீகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சிவராததானி
ஊர் நாகப்பட்டினம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தன்னை அழைக்காமல் யாகம் செய்த தட்சனை அழிக்க, சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் தட்சனை அழித்து விட்டார். இதனால் அவரை பிரம்மகத்தி தோஷம் (கொலை பாவம்) பிடித்தது. இந்த தோஷம் தீர, பூலோகத்தில் சிவபூஜை செய்ய வேண்டுமென கூறிய மகரிஷிகள், ஒரு நதியில் அவரது ஆபரணங்களை வீச வேண்டுமென்றும், அவை கரை ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்யும்படியும் கூறினர். அதன்படி நதியில் வீரபத்திரர் தான் அணிந்திருந்த அணிகலன்களை வீச, அவை இத்தலத்தில் கரை ஒதுங்கின. இங்கே, வீரபத்திரர் இங்கு இலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் இங்கு வீரபத்திரருக்கும், சிவனுக்கும் கோயில் எழுப்பப்பட்டது.

வீரபத்திரர் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். வழக்கமாக வீரபத்திரர் அருகில் ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கியபடி இருப்பார். இங்கோ, தட்சனின் வெட்டிய தலையை கையில் வைத்துள்ளார். ஐப்பசி பூசம் நட்சத்திரத்தில், வீரபத்திரரின் தோஷம் நிவர்த்தியானதாக ஐதீகம். எனவே அந்நாளில் வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சிவபூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம். எனவே அன்று உச்சிக்காலத்தில் (மதிய வேளை) உற்சவர் அகோர வீரபத்திரரை, விஸ்வநாதர் சன்னதிக்குள் கொண்டு சென்று பூஜை செய்கின்றனர். அன்று ஒருநாள் மட்டுமே, வீரபத்திரர், சிவன் இருவரையும் சேர்த்து தரிசிக்க முடியும்.

விஸ்வநாதர் இங்கு மூலவர். அம்பாள் விசாலாட்சி. இருப்பினும், வீரபத்திரருக்கே முக்கியத்துவம். வீரபத்திரர் கோயில் என்றே பெயரும் இருக்கிறது. அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் என இரண்டு உற்சவமூர்த்திகள் இருக்கின்றனர். தலவிருட்சமான இலந்தை மரத்தடியில், சிவலிங்கமும், அக்னி வீரபத்திரர் சிலையும் உள்ளன. வீரபத்திரர் சன்னதி முன்மண்டபத்தில் வீரசக்தி அம்பாள் இருக்கிறாள். வீரமாகாளி என்ற காவல் தெய்வத்திற்கு சன்னதி இருக்கிறது. இவள் வீரபத்திரருக்கே காவலாக இருப்பதாக ஐதீகம். இந்த அம்பிகையின் பாதத்திற்கு கீழ் மூன்று அசுரர்கள் உள்ளனர். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இவளுக்கு அரிசிமாவு களி படைக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.

பல்வேறு கோரிக்கைகளுக்காக வேண்டுபவர்கள், மனக்குழப்பம் உள்ளவர்கள், கிரகதோஷம், பயந்த சுபாவம் உள்ளவர்கள், 9 நெய் தீபங்களை ஒரு தட்டில் வைத்து, அதை தலையில் வைத்து, பூஜை நேரங்களில் வழிபடுகின்றனர். பூஜை முடியும் வரையில் தலையில் உள்ள விளக்குத் தட்டைக் கீழே வைப்பதில்லை. ஞாயிற்றுக்கிழமை, பூசம் நட்சத்திரம், பவுர்ணமி, மாத சிவராத்திரி நாட்களில் வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. நாகப்பட்டினம் வீரபத்திரர் கோயிலில், தீபத்தை உச்சந்தலையில் வைத்துக் கொண்டு, சுவாமி முன்னால் நின்று வழிபடுகின்றனர்.

திருவிழா:

சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை

வேண்டுகோள்:

தோஷம், பயம் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாள், வீரபத்திரருக்கு வஸ்திரம், அணிவித்து அபிஷேகம் செய்கிறார்கள்.

இருப்பிடம்: நாகப்பட்டினம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது. புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *