அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர்

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர்– 620 003. திருச்சி மாவட்டம்.
*****************************************************************
+91- 99767 17317(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு முன்பு அவர்களுக்குள் நாட்டை பிரித்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. தங்கள் மூவருக்கும் பொதுவான ஒருவரை வைத்து எல்லையைப் பிரித்துக் கொள்ள விரும்பினர். எனவே, அம்பிகையை வேண்டித் தவமிருந்தனர்.

அம்பிகை, அவர்களுக்கு காட்சி தந்தார். மூவேந்தர்களும் தாங்கள் ஆட்சி செய்ய வேண்டிய பகுதியை நிர்ணயம் செய்து தரும்படி வேண்டினர். அம்பிகை நாட்டை மூன்றாகப் பங்கிட்டு எல்லை வகுத்து தனித்தனியே பிரித்துக் கொடுத்தாள். அந்நாடுகள் அவர்களது பெயரிலேயே அழைக்கப்பட்டது. அப்போது மூவேந்தர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் அமர்ந்தருளும்படி அம்பிகையிடம் வேண்டிக்கொண்டனர்.

அம்பிகையும் அவ்வாறே அருள் செய்தார். அப்போது சோழ மன்னன், தனக்கு பிரித்துக் கொடுத்திருக்கும் நாடு எப்போதும் செழிப்பாக இருக்க அருள வேண்டும் என வேண்டினான்.

அவனது கோரிக்கையை ஏற்ற அம்பிகை, காவிரி நதியால் அவனது நாடு எப்போதும் செழிப்புற்றிருக்கும் படி அருளினாள். சோழ மன்னனுக்கு அருள் செய்த அம்பிகை, இத்தலத்தில் செல்லாண்டியம்மனாகஅருளுகிறாள்.

அம்பாள் அமைப்பு:

கருவறையில் அம்பிகையின் முழு உருவம் கிடையாது. இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி மட்டுமே இருக்கிறது. மூவேந்தர்களின் வேண்டுதல்படி அவர்களது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் தங்கிய அம்பிகை, இங்கு சோழ மன்னனுக்கு பாத தரிசனம் காட்டியருளினாள். எனவே, இங்கு அம்பிகையின் இடுப்பிற்கு கீழுள்ள பகுதி மட்டும் வடிக்கப்பட்டிருக்கிறது. இவளிடமுள்ள சூலம், அசுரனை வதம் செய்தபடி இருக்கிறது.

அபிசேகத்தின்போது மட்டுமே, இந்த அமைப்பை காண முடியும். மற்ற நேரங்களில் இந்த உருவத்திற்கு, அம்பிகையின் முழு உருவம் போல அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள். பிற்காலத்தில், இந்த அம்பிகைக்கு பின்புறத்தில் அம்பிகையின் முழு உருவச்சிலை பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இவள் கிழக்கு திசையை நோக்கியபடி காட்சி தருகிறாள்.

சோழ நாடான தஞ்சைப்பகுதியை நோக்கி இவ்வாறு காட்சி தருவதாகச் சொல்கிறார்கள்.
சன்னதி முன்மண்டபத்தில் அம்பிகையின் பாதம் பொறிக்கப்பட்ட பீடம் இருக்கிறது. இதனையும் அம்பாளாகவே பாவித்து வணங்குகிறார்கள். அம்பாளுக்கு பூசை செய்யப்படும்போது பாதத்திற்கும் பூசை செய்யப்படுகிறது.

சித்திரை மாதத்தில் காளி ஓட்டத்திருவிழா” 7 நாட்கள் நடக்கிறது. பொதுவாக கோயில்களில் திருவிழாக்காலங்களில் அம்பிகையின் பஞ்சலோக சிலையே உற்சவ அம்பாளாக வீதியுலா செல்லும். ஆனால், இங்கு பஞ்சலோக விக்கிரகம் இல்லை. அதற்கு பதிலாக பனை ஓலையில் செய்யப்பட்ட அம்பிகையை, உற்சவராகக் கருதி வழிபடுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் திருவிழா நடக்கும்போது, பனை ஓலையில் அம்பாளின் உருவத்தைச் செய்கின்றனர். இந்த ஓலையில் அம்பாள் அருளுவதாக நம்பிக்கை இருக்கிறது.

விழாவின்போது பனை ஓலை அம்பிகையை இக்கோயிலில் இருந்து சற்று தூரத்திலுள்ள ஒரு திடலுக்கு கொண்டு செல்கின்றனர். தொடர்ந்து 5 நாட்களுக்கு அம்பிகைக்கு, பிரதான நைவேத்யம் படைக்கப்பட்டு, விசேட பூசை நடத்தப்படுகிறது. ஐந்தாம் நாள் விழாவின் முடிவில் அம்பிகையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் இவ்விழாவின்போது கோயிலில் இருந்து இந்த அம்பிகையை தூக்கிக்கொண்டு ஓடும் வழக்கம் இருந்தது. எனவே இவ்விழா காளி ஓட்டத்திருவிழாஎன்று அழைக்கப்பட்டது. இப்போது இவ்வழக்கம் நடைமுறையில் இல்லை.

காவிரி நதியுடன், குடமுருட்டி நதி சங்கமிக்கும் இடத்தின் தென்கரையில் கோயில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு பவுர்ணமியன்றும் மாலையில் அம்பாளுக்கு நவதானியம் மற்றும் உப்பில்லாத அன்னம் நைவேத்யமாக படைத்து விசேட பூசை நடக்கிறது. இந்த நைவேத்யத்தையே பிரசாதமாக தருகின்றனர். இதை சாப்பிட்டால் புத்திரப்பேறு உண்டாவதாக நம்பிக்கை.

கோயில் முன்மண்டபத்தில் கருப்பண்ணசுவாமி, மதுரைவீரன் ஆகிய காவல் தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். வளாகத்தில் அரசமரத்தின் கீழ் வலம்புரி விநாயகர் காட்சி தருகிறார்.

திருவிழா:

சித்திரையில் 7 நாள் காளிஓட்ட விழா, புரட்டாசியில் இலட்சார்ச்சனை, நவராத்திரி, ஆடி மற்றும் தை வெள்ளி.

திருமண, புத்திர தோடம் உள்ள பெண்கள் பவுர்ணமியில் அம்பிகைக்கு விசேட பூசை செய்துவேண்டிக்கொள்கிறார்கள்.

அம்பாளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தாலி, எலுமிச்சை மாலை அணிவித்தும், விளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *