அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி, சிவகங்கை மாவட்டம்.

+91-4577- 264 237

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வளரொளிநாதர்(வைரவன்)
அம்மன் வடிவுடையம்பாள்
தல விருட்சம் ஏர், அளிஞ்சி
தீர்த்தம் வைரவர் தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வடுகநாதபுரம்
ஊர் வைரவன்பட்டி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற அகந்தையுடன் இருந்தார். ஒருமுறை பார்வதிதேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய மரியாதைகளை, பிரம்மனுக்கு செய்தார். பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார். பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து கூறினாள். எனவே, சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இவரே, இத்தலத்தில் வைரவர் என்ற பெயரில் அருளுகிறார்.

இங்கு கருவறை கோஷ்டத்தில் இராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி இராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

அம்பாள் சன்னதிக்கு முன் பைரவர் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். இவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது. இதில் நீராடி, சுவாமியை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பாவம் தீரும், நோய், எதிரிபயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை வணங்கினால் தோஷங்கள் தீரும். இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாகக் கட்டப்பட்டுள்ளது.

தெட்சிணாமூர்த்தி ஏழிசைத்தூண் மண்டபத்தில் அமைந்துள்ளதும், சண்டிகேஸ்வரர் சன்னதி, ஒரே பாறையில் செய்யப்பட்ட குடைவரைக்கோயில் போன்ற அமைப்பில் உள்ளதும், குதிரையில் போருக்கு செல்லும் வீரன் ஒருவனது நிலையை தத்ரூபமாக செதுக்கியிருப்பதும் சிறப்பு. நந்தி தனி மண்டபத்தில் அமைந்துள்ளது.

திருவிழா:

சம்பகசூர சஷ்டி, பிள்ளையார் நோன்பு.

கோரிக்கைகள்:

எதிரி பயம், கிரக தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். துலாபாரமும் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *