அருள்மிகு சாஸ்தா (கைவிடேயப்பர்) திருக்கோயில், கைவிளாஞ்சேரி

அருள்மிகு சாஸ்தா (கைவிடேயப்பர்) திருக்கோயில், கைவிளாஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாஸ்தா (கைவிடேயப்பர்)
அம்மன் பூரணை, புஷ்கலை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கைவிளாஞ்சேரி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தைக் கைப்பற்றிய அவர்கள் இந்திரலோகத்தையும் கைப்பற்றினார்கள். அங்கும் ஆட்சி அமைத்தார்கள். இந்திர லோகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த தேவர்களின் தலைவனான இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்தான். சீர்காழி என்ற புண்ணியத் தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி மூங்கிலாக வடிவெடுத்து இருவரும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இந்திரலோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் தவமிருந்து வழிபட்டனர். இரவில் யார் கண்ணிலும் படாதபடி மறைந்து சென்று சாஸ்தாவின் கையில் உள்ள தாமரைப் பூவிதழ்களின் நடுவே தங்கி தங்களை பாதுகாத்துக் கொண்டனர். இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார். இந்திரன், இந்திராணியை சாஸ்தாவிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். சில காலத்திற்குப் பின், சாஸ்தா தனது காவல் கணக்குகளை சிவபெருமானிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வருமுன் இந்திராணியை தனது தளபதியான மகாகாளரிடம் ஒப்படைத்தார். இதுபோன்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை அஜமுகி, அழகே உருவான இந்திராணியைத் தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளை கவர்ந்து செல்ல முயன்றாள். இதைக் கண்டு கோபமடைந்த மகாகாளர், அஜமுகியிடம் சண்டையிட்டார். அவளது கரத்தை வெட்டியதும், அலறியடித்து ஓடினாள். மகாகாளர் இந்திராணியை மீட்டார். அரக்கியான அஜமுகியின் கை விழுந்த காடு கைவிழுந்த சேரி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது கைவிளாஞ்சேரிஎன அழைக்கப்படும் ஊராகும். சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்திராணியைக் கை விடாது காப்பாற்றிய சாஸ்தா இங்கு கைவிடேயப்பர்என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

இவ்வூரிலிருந்தும் அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து கைவிடேயப்பரை தரிசனம் செய்த பின்னரே தங்களது பயணத்தைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இருமுடி கட்டிக்கொண்டு தங்களது சபரிமலை பயணத்தைத் தொடங்குகின்றனர். சுற்றிலும் நீண்ட திருமதிற் சுவர்களைக் கொண்ட இடத்தில் எதிரே காசிவிஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளது. இரண்டு ஆலயங்களும் ஒரே மதிற் சுவரின் உள்ளே அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நீண்ட பிராகாரத்தில் நந்தி தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு அன்னை நான்கு கரங்களுடன், மேல் கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் கருணையே வடிவாக காட்சி தருகிறாள்.

அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் கல்யாண விநாயகர் திருமேனி உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் இராகு கால நேரத்திற்கு முன் கன்னிப் பெண்கள் இவரை வணங்குவதால் அவர்கள் திருமணம் விரைவில் நடந்தேறுவாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்திரன் மனைவி இந்திராணியை கைவிடாது காப்பாற்றிய கைவிடேயப்பர், தங்களது கோரிக்கைகளைத் தீர்த்து வைத்து தங்களையும் கை விடாது காப்பார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

முகப்பில் மூன்று நிலை இராஜகோபுரம். உள்ளே புகுமுன் வலதுபுறம் ஜிதேந்திரிய செல்ல ஆஞ்சனேயரும், இடது புறம் வினாயகர் மற்றும் இராகு கேதுவும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் இறைவன் காசி விஸ்வநாதர் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். பிரகாரத்தின் மேற்கில் செல்வ விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். தேவகோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் உள்ளே கைவிடேயப்பர் பூரணை, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டும், மறு காலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார்.

திருவிழா:

ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம், பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி. மார்ச் மாதம் கடைசி ஞாயிறு அன்று கைவிடேயப்பருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

வேண்டுகோள்:

பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள கைவிடேயப்பரை வணங்குகின்றனர். திருமணம் விரைவில் நடைபெற இங்குள்ள கல்யாண விநாயகரை இராகுகால நேரத்தில் வணங்குகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் கோரிக்கைகள் நிறைவேறியவுடன் கைவிடையப்பருக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *