அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சாஸ்தாநகர்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சாஸ்தாநகர், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சாஸ்தாநகர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

ஐயப்பக்தர்கள் ஐயப்பனுக்கு சேலத்தில் சன்னிதானம் அமைக்க வேண்டும் என்பதற்காக ஒரு டிரஸ்டை துவக்கினர். ஐயப்பன் சன்னதி அமைக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் தோன்றிய விதமே சுவாரஸ்யம் தான்.

சேலத்தில் எந்த இடத்தில் கோயில் கட்டலாம் என்று குரங்கு சாவடி சென்றாய பெருமாள் கோயிலில் நிர்வாகிகளிடம் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆலோசனை செய்தபோது, திடீரென ஒரு ஒளி தோன்றி கோயில் அமைக்கும் இடத்தை காண்பித்ததாம். அதன் பிறகு அந்த இடத்தை வாங்கி, அங்கு கோயில் நிர்மாணிக்கும் வேலைகளைத் துவக்கினர்.

கோயிலுக்கான வரைபடத்தை காணிப்பையூர் ஸ்ரீ கிருஷ்ணன் நம்பூதிரிவரைந்து கொடுத்தார். இவர் சபரி மலை மற்றும் குருவாயூர் கோயில்களை நிர்மாணித்த பரம்பரை வழி வந்தவர். பின்னர் கோயிலை மகாபலிபுரம் கணபதி ஸ்தபதி கட்டி முடித்தார்.

நீராஜனம் எனப்படும் சனிதோஷ நிவர்த்தி பூஜை தமிழகத்தில் எங்குமில்லை. புதுச்சேரி மாநிலத்தின் புகழ் பெற்ற திருநள்ளாறு தலத்தில் கூட இப்பூஜை இல்லை. ஆனால், இந்த பூஜை சேலம் சாஸ்தாநகர் ஐயப்பன் கோயிலில் நடக்கிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து மனமுருகி ஐயப்பனை தியானிக்கின்றனர். இந்த குறையுடன் வருபவர்களுக்காக சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கிறது. மேலும் சனிதோஷம் உள்ளவர்களுக்காக நீராஜனம்என்ற விசேஷ பூஜை இங்கு செய்யப்படுகிறது. நவக்கிரக ப்ரீதியும் செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் சகஸ்ர கலசாபிஷேகம்நடக்கிறது. இதற்காக இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர்கொண்டுவரப்படுகிறது. அந்த சமயத்தில் பிரம்மாண்டமான வேள்வி நடத்தி, புண்ணிய நதிகளின் நீரை கொண்டு அபிஷேகம் செய்து ஐயப்பனுக்கு பூஜை செய்வர்.

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்கள் தங்க இடமும், உணவும் டிரஸ்ட் மூலம் வழங்கப்படுகிறது. அத்துடன் சபரிமலையில் செய்யும் நெய் அபிஷேகத்திற்கு தேவையான நெய் அபிஷேக சீட்டு இங்கே வழங்கப்படுகிறது.

கோயிலின் உள்ளே நுழைந்ததும் முதலில் நம்மை வரவேற்பது பலிபீடமும், 42 அடி உயர கொடி மரமும்தான். இடது பக்கத்தில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது. கோயிலுக்குள் நடு நாயகமாக பிறந்த குழந்தையை போன்று, சாந்தமே உருவாக காட்சியளிக்கிறார் ஹரிஹர மைந்தன். வலப்பக்கத்தில் அவரது சகோதரன் ஆனைமுகன்அருள்பாலிக்கிறார். மேலும் தியான மண்டபம், இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வோர் அமர்வதற்கு தேவையான இடம் உள்ளிட்ட இதர வசதிகள் உள்ளது.

திருவிழா:

மகர ஜோதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பவானி கூடுதுறையில் உற்சவருக்கு ஆறாட்டு நடத்தி, யானையின் மேல் திருவாபரண பெட்டி வைத்து வீதியுலாவாக சேலம் கொண்டு வரப்பட்டு, “கூசமலையில் கற்பூர ஜோதி ஏற்றப்படுகிறது. அதேபோன்று தினமும் கணபதிஹோமம் செய்து கோயிலை சுத்தம் செய்தும், பூஜைக்கு பின்னர் இரவு ஹரிவராசனத்துடன் நடையை சாத்துகின்றனர்.

வேண்டுகோள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *