அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம்

அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம், ஈரோடு மாவட்டம்.

+91 4258 220 749, 98423 70761

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காடு ஹனுமந்தராய சுவாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தாராபுரம்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

ஆஞ்சநேய பக்தரான ஸ்ரீவியாஸராயர் சுவாமி 1460லிருந்து 1530ம் ஆண்டு வரை வாழ்ந்தார். இவர் நாடு முழுவதும் 732 ஆஞ்சநேயர் கோயில்களைக் கட்டினார். அதில் 89வதாகக் கட்டப்பட்டது தாராபுரம் கோயில். அந்தக் கோயில் கட்டிய இடம் காட்டுப்பகுதியாக இருந்ததால் சுவாமிக்கு காடு ஹனுமந்தராய சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. 1810ல், கோவை கலெக்டராக இருந்தவர் ஆங்கிலேயரான டீலன்துரை. இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது சிலர் நோய் நீங்க காடு ஹனுமந்தராய சுவாமியை வழிபடுமாறு கூறினர். கலெக்டரும் அவ்வாறே செய்ய நோய் நிவர்த்தியானது. இதற்கு நன்றிக்கடனாக கோயிலில் கர்ப்பக்கிரகத்தை பெரிதாகக் கட்டினார். கோபுரம் கட்ட முயன்ற போது, பக்தர் ஒருவரின் கனவில் சுவாமி தோன்றி, கோபுரம் தேவையில்லை என்று கூறியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மத்வாச்சாரியரின் நூல்களுக்கு விளக்கவுரை (டீகா) எழுதியவர் ஜெயதீர்த்த சுவாமிகள். இதனால் இவருக்கு டீகாசார்யா என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இவருடைய மூல பிருந்தாவனம் மைசூரு அருகிலுள்ள மல்கேடாவில் உள்ளது. இங்கிருந்து மிருத்திகை (புனிதமண்) கொண்டு வந்து, இந்தக் கோயிலிலுள்ள இலட்சுமி நரசிம்மன் சந்நிதியில் இவருக்கு பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்வ மத மடாதிபதிகளில் முக்கியமானவரான இராகவேந்திர சுவாமிகளின் மந்திராலயத்தில் இருந்து மிருத்திகை கொண்டு வரபட்டடு இராமர் சந்நிதியில் அவரது பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிருந்தாவனங்களில் அமர்ந்து வழிபடுவதன் மூலம் ஞானசக்தியும், கல்வியும் மேம்படும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயில் ஆஞ்சநேயருக்குரிய தலமாக இருந்தாலும், அவரது நாதனான இராமபிரானுக்கே முதல் பூஜை நடக்கிறது. அதே போல் பிரம்மோற்ஸவமும் நாராயணனின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மருக்கு நடத்தப்படுகிறது.

இங்குள்ள இலட்மி நரசிம்மர் வெகு நாட்களாக காவிரியும், பவானியும் சங்கமமாகும் கூடுதுறையில் தண்ணீரில் ஜலவாசம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் பக்தர் ஒருவருக்குத் தரிசனமளித்தார். அவர் அந்தச் சிலையைக் கொண்டு வந்து இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்தார். இவருக்கு தனிச்சன்னதி உள்ளது. காடு ஹனுமந்தராய சுவாமி ஏழு அடி உயரம், மூன்று அடி அகலத்துடன் உள்ளார். இடுப்பில் சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. வலது இடுப்பில் கத்தியும், கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகளும் காணப்படுகிறது. வலது கை அபயஹஸ்தமாகவும், இடது கை சவுகந்திகாமலர் ஏந்திய நிலையிலும் உள்ளது. முகம் வடகிழக்கு திசை நோக்கியும், பாதங்கள் வடக்கு நோக்கியும் உள்ளன. கிரீடத்தின் பின் புறத்தில் பட்டாகத்தி இருக்கிறது. முகத்தின் வலதுபுறம் சக்கரமும் இடதுபுறம் சங்கும் உள்ளன. வாலில் மூன்று மணிகள் உள்ளன.

திருவிழா:

அனுமன்ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி.

வேண்டுகோள்:

நினைத்த காரியம் நிறைவேற இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து, வெற்றிலை மாலை சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *