அருள்மிகு ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம்

அருள்மிகு ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91-4633-245250, 98429 40464

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர்
தல விருட்சம் நெல்லிமரம்
தீர்த்தம் அனுமன் தீர்த்தம்
புராணப் பெயர் கிஷ்கிந்தாபுரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கிருஷ்ணாபுரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் இராமரின் தூதனான அனுமன். இவர் ஒரு முறை இராமர் தந்த மோதிரத்துடன் சீதையை தேடி வானர வீரர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டு செல்கிறார். பசி, தாகத்தால் வானர வீரர்கள் களைப்படைந்த போது அவர்கள் கண்ணுக்கு ஒரு விசித்திரமான குகை ஒன்று தென்பட்டது. அந்த குகைக்குள்ளேயிருந்து தண்ணீரில் நனைந்தபடி பறவைகள் வருவதை பார்த்து விட்டு அதனுள் நுழைந்து பார்த்தனர். அங்கே நீர் நிறைந்த குளங்கள், மாளிகைகள், கோபுரங்கள் இருந்ததையும், குளத்தின் அருகே சுயம்பிரபை என்ற பெண் தவத்தில் இருப்பதையும் கண்டனர்.(இந்தக் குகையையும் குளத்தையும் இப்போதும் பார்க்கலாம்) சுயம்பிரபையை கண்ட ஆஞ்சநேயர் அவளை வணங்கி, “தாங்கள் யார்? என்று கேட்கிறார்.” அதற்கு சுயம்பிரபை,”முன்னொரு காலத்தில் தேவலோகத்தை சேர்ந்த மயன் என்பவன் இந்த பகுதியில் அழகிய ஊரை அமைத்தான். ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் வரம் பெற்றான். அத்துடன் தெய்வப்பெண்ணான ஹேமையுடன் தான் அமைத்த அழகிய நகரில் வாழ்ந்து வந்தான். மயன் ஹேமையுடன் இருப்பதாக நாரத முனிவர் இந்திரனிடம் கூறினார். இதனால் கோபமடைந்த இந்திரன் மயனைக் கொன்று விட்டான். கொலைப்பாவத்தால் சிரமப்பட்ட இந்திரனைக் காக்க தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவனின் ஆணைப்படி கங்கை இந்த குகைக்குள் வர அதில் குளித்து தன் பிரம்மகத்தி தோஷத்தை இந்திரன் போக்கி கொண்டான். அன்றிலிருந்து இந்த குளத்தை நான் காத்து வருகிறேன். அத்துடன் இராமதூதன் அனுமன் இப்பகுதி வரும் போது அவனிடம் ஒப்படைத்து விட்டு நீ தேவலோகம் வந்து விடலாம்என்று பிரம்மன் கூறினார். “எனவே இன்று முதல் இந்த தீர்த்தத்தை நீ பாதுகாத்து வரவேண்டும். நான் தேவலோகம் செல்கிறேன்என்றாள் சுயம்பிரபை. ஆனால் அனுமனோ, “தாயே, சீதா தேவியை இராமருடன் சேர்த்து வைக்காமல் நாங்கள் எங்கும் தங்க மாட்டோம். மேலும் இராமர் பட்டாபிஷேகம் முடிந்த பின் இங்கு வந்து தங்குகிறேன்என்று கூறி விடை பெற்றுச் சென்றார். இலங்கையில் வெற்றி கண்ட இராமர் சீதையுடன் புஷ்பவிமானத்தில் அயோத்தி திரும்புகிறார். அப்போது இத்தலத்தில் வசிக்கும் சுயம்பிரபை பற்றியும், அவள் பாதுகாத்துக்கொண்டிருக்கும் தீர்த்தத்தைப்பற்றியும் இராமரிடம் ஆஞ்சநேயர் எடுத்துக் கூறினார்.
அனுமன் கூறியதைக்கேட்ட இராமரும், “ஆஞ்சநேயா. பட்டாபிஷேகம் முடிந்தவுடன் அவசியம் இத்தலத்திற்கு வருவோம்என்றார். இராமர் பட்டாபிஷேகமும் சிறப்பாக நடந்தது. ஒரு சுபமுகூர்த்த நாளில் ஆஞ்சநேயரை அழைத்துக்கொண்டு கிருஷ்ணாபுரம் வந்தார் இராமர். ஆஞ்சநேயரை யந்திரங்கள் எழுதச்செய்து, தானே யாகம் வளர்த்து அனுமனைப் பிரதிஷ்டை செய்து, “நீ இங்கேயே தங்கி உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும்என்று உத்தரவிடுகிறார் இராமர்.

எந்த இடத்தில் இராமரின் திருநாமம் ஒலிக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் அனுமான் நிச்சயம் இருப்பார். அதே போல் அனுமன் நாமம் ஒலிக்கின்ற இடங்களில் இராமபிரான் இல்லாமலா போய் விடுவார். இதனால் தான் இக்கோயிலில் இராமச்சந்திர மூர்த்தி, சீதை, இலட்சுமணன், அனுமாரோடு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இராமனின் அடுத்த அவதாரமாகிய கிருஷ்ணனுக்கும், அனுமனுடன் தொடர்பு இருக்க வேண்டும் என நினைத்தார். எனவே ஆஞ்சநேயர் கோயில் இருக்கும் பகுதி கிருஷ்ணாபுரம்எனப்பட்டது. கோயில் மூலவராக ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் சுயம்பு மூர்த்தியாக ஆறடி உயரத்திற்கு மேல் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இதுவே ஒரு மிகப்பெரிய விசேஷம் தான். நெல்லிமரம் தலவிருட்சமாகவும், அனுமன் தீர்த்தம் தல தீர்த்தமாகவும் உள்ளது. கிஷ்கிந்தாபுரம் என்பதே இப்பகுதியின் புராணப்பெயராகும். “அனுமார் வாழ்ந்த காலத்தில் அவரைப் பார்க்காதவர்கள் இங்குள்ள ஆஞ்சநேயரை பார்ப்பது மிகவும் விசேஷம். ஏனெனில், சாதாரணமாக அனுமார் எப்படி இருப்பாரோ அதேபோல் இங்கு கிரீடம் ஏதும் இல்லாமல், இராமர் கொடுத்த கணையாழியைத் தன் வலது ஆள்காட்டி விரலில் அணிந்தபடி மிக எளிமையாக அபஹஸ்தமுடன் இருக்கிறார். அனுமார் படங்களை வீடுகளில் வைத்து வழிபடத் தயங்குவார்கள். ஆனால் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் ஆயுதம் ஏதும் இல்லாமல், கேட்டதையெல்லாம் தருகிறேன் என்பது போல் இருக்கிறார். எனவே இவரை வீடுகளில் வைத்து வழிபட்டால் அனுமாரையே நேரில் சந்தித்து நம் குறைகளை கூறுவதுபோல் கூறி, பலன்களை பெறலாம். குற்றாலம் செல்பவர்கள் மதுரை குற்றாலம் ரோட்டில் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சென்று ஆஞ்சநேயரை ஒரு முறை கும்பிட்டு கோடி மடங்கு பலனை பெற்று வரலாம். சுயம்பிரபா என்ற தீர்த்தம் உள்ள இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் ஒன்றுக்கு இரண்டு மடங்கு பலன்.

இராமபிரானே இங்கு வந்து யாகம் செய்ததால் இத்தலத்தை கும்பிட்டால் ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு பலன். இராமர் யாகம் செய்த பகுதி என்பதால் இப்பகுதியில் எங்கு தோண்டினாலும் வெண் சாம்பல் கிடைக்கிறது. அதையே விபூதி பிரசாதமாக பூசி இராமனின் அருளையும் பெறலாம்.

வயல்களுக்கு நடுவே சுத்தமான இடத்தில் கோயில் அமைந்துள்ளதால் வழிபடும் அனைவருக்கும் ஒன்றுக்கு பத்தாயிரம் மடங்கு பலன் கிடைக்கிறது.
புனித ஸ்தலங்களின் ஒன்று என்பதால் இங்கு வந்தாலே லட்சம் மடங்கு பலன். மேலும் மகான்கள் சித்தி பெற்ற ஸ்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஒரே ஒரு தடவை வந்து மனமுருகி வேண்டினாலோ கோடி மடங்கு பலன் கிடைத்து விடுகிறது.

திருவிழா:

அனுமன் ஜெயந்தி விழா ஒரு வாரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை விஷு, ஸ்ரீ இராமநவமி, புரட்டாசி சனி, ஆங்கிலப்புத்தாண்டு, தைப்பொங்கல், ஐப்பசி விஷு மற்றும் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் எல்லாம் திருவிழா தான்.

வேண்டுகோள்:

மேலும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *