அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல்

அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம்.

+91-99767 90768 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் காலை 11 மணி வரையும், இரவில் 9 மணி வரையும் திறந்திருக்கும்.

மூலவர் அபயவரத ஆஞ்சநேயர்
தல விருட்சம் பலா
தீர்த்தம் அனுமன் தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திண்டுக்கல்
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட ஆஞ்சநேய பக்தரான சிற்றரசர், போருக்குச் செல்லும்போது, ஆஞ்சநேயரை வழிபட்டே செல்வார். அவருக்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. ஆனால், எங்கு கோயில் கட்டுவதென அவருக்குத் தெரியவில்லை. மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சயநேர், அப்பகுதியில் இருந்த மலைக் கோட்டையை சுட்டிக்காட்டினார். மன்னர் ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, கோட்டையில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்தார். இவர், “அபய வரத ஆஞ்சநேயர்எனப் பெயர் பெற்றார்.

திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக அமைந்த கோயில் இது. கோயிலுக்கு கீழே அனுமன் தீர்த்தம் உள்ளது.

பெருமாள், இராமாவதாரம் எடுத்தபோது, சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்ததாகச் சொல்வர். இதை உணர்த்தும்விதமாக இக்கோயிலில், ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால், இங்கு சிவ அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். சிவ வடிவமான தட்சிணாமூர்த்திக்கு வியாழன் உகந்தது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுமன் ஜெயந்தியன்று சன்னதி முன் மண்டபம் முழுதும் பூக்கள், பழம் மற்றும் வடைகளால் அலங்காரம் செய்துவிடுவர். தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு அலங்காரம் செய்து, விசேஷ பூஜை நடக்கும். பெரும்பாலான ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால், இங்கு கிரக, ஜாதக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வேண்டுகின்றனர். இளநீரின் மேற்பகுதியில் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியைக் குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்துவிடுவர். அர்ச்சகர் அதை அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆஞ்சநேயரின் வாலில் கட்டிவிடுவார். ஆஞ்சநேயருக்கு வாலில் தான் சக்தி அதிகம். வாலைக் கொண்டு சீதைக்கு துன்பம் செய்தவர்களின் ஊரையே அழித்தது போல, நமக்கு தொல்லை தரும் கிரகதோஷங்களையும் எரித்து விடுவார் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது. தலவிருட்சமான பலாவின் கீழ், இராமலிங்கசுவாமி காட்சி தருகிறார். பவுர்ணமி மற்றும் பிரதோஷ வேளையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். இவருக்கு பின்புறம் வேணுகோபாலர் சன்னதி உள்ளது. ரோகிணி நட்சத்திர நாளில் இவருக்கு திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கிறது.

இக்கோயிலுக்கு அருகில் அபிராமி, கோட்டை மாரியம்மன் கோயில்கள் உள்ளன.

திருவிழா:

இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி.

வேண்டுகோள்:

ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கன்று ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று பெண்கள் கோயில் தீர்த்தக்கரையில் தாலிக்கயிறு மாற்றுகிறார்கள். துவங்கும் செயல்களில் தடையின்றி, வெற்றி கிடைக்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை, வடை மாலை அணிவித்தும், வெண்ணெய் காப்பு செய்வித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *