அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில், மடப்புரம்

அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில், மடப்புரம், சிவகங்கை மாவட்டம்.

+91 – 4575 272411(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பத்ரகாளி

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – பிரம்மகுண்டம், மணிகர்ணி தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – மடப்புரம்

மாவட்டம்: – சிவகங்கை

மாநிலம்: – தமிழ்நாடு

ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதி கேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.

மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கே திருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். இதனால் ஆதிகேசனின் வாயில் இருந்து வெளியான நஞ்சை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள்.

அங்குள்ள அய்யனார் காவல் தெய்வம் அம்மனுக்கு தன் வாகனமாகிய குதிரையை தந்து அம்மனுக்கு நிழல் தந்து அடைக்கலம் தந்தார். இதனால் அடைக்கலம் காத்த அய்யனார் என்று அவர் பெயர் பெற்றார். மிகப்பழமையான இத்தலத்திலுள்ள காளி பக்தர்களின் எண்ணற்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறாள்.

பத்ரகாளியம்மன் தோற்றம்:  

***************************************
சம்கார தேவதையாக காட்சி தருகிறாள் பத்ரகாளியம்மன். கீழ்த்திசையை நோக்கித் திரிசூலத்தைக் கீழ்நோக்கிப் பற்றி கலியுகத்தில் அநீதிகளை அழிக்கும் சம்கார தேவதையாக தனது தலையில் சுடர்விடும் அக்கினயையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள். வலக்கையில் பற்றிய திரிசூலம் அநீதியை அழிக்கவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாது சாம்பலாக்கவும், நின்ற நிலை தன்னை நாடி வரும் தன் மக்களை என்றும் எப்போதும் காத்து வரும் ஆயத்த நிலையையும் உணர்த்துகிறது.

காளி நிற்கும் பீடம் நீளம் அகலம் உடையது. அதன் மேல் போருக்கு ஆயத்தமான நிலையில் தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி முன்னங்கால்களை தூக்கி அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வடிவமான குதிரை நிற்கிறது.

அடைக்கலம் காத்த அய்யனார் :

கருவறையில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து நின்ற கோலத்தில் விளங்குகிறது. இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். இத்தலத்தின் ஆட்சி தெய்வம் என்பதால் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமென பக்தர்கள் பயபக்தியோடு கூறுகிறார்கள்

தலபெருமைகள் :

அம்பாளுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமாக குதிரை வாகனம் இருக்கிறது. மற்ற கோயில்களில் குதிரை மீது இருக்கும் அய்யனார் இங்கு தனியாக சன்னதியில் அமர்ந்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகள் முந்திய பழமையான கோயில்.

தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளுக்கு நடுவே உள்ளது.

மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே கொடியவர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இங்கு விநாயகர் வினை தீர்க்கும் விநாயகராய் அருள்பாலிக்கிறார்.

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடுகிறது. பௌர்ணமி பூசை பால் முழுக்காட்டு. தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூசை.

செய்வினை, பில்லி, சூன்யம் ஆகியவற்றை இத்தலத்து அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.

இத்தலத்து பத்ரகாளியம்மன் மிகவும் ஆக்ரோசமான சக்தி உள்ளவர். பகைவர்களை வெல்லும் சக்தியைத் தருகிறாள்

பத்ரகாளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது.

வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உண்டு. மிகப்பெரிய கோடீசுவரர்கள்கூட இங்கு அடிக்கடி வந்து வழிபடுது வழக்கம்.

ஆரம்ப காலங்களில் சாமியாடிகள் கூடி களரி எனும் சாமி ஆடுவது வழக்கமாக இருந்தது. அம்மனை குளிர்ச்சியூட்ட எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது.

கோரிக்கை நிறைவேறியதும் அம்மனுக்குப் புத்தாடை அணிவித்து நன்றி செல்லுத்துகின்றானர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *