அருள்மிகு சுவாமி நாராயண திருக்கோயில், அக்ஷர்தாம்

அருள்மிகு சுவாமி நாராயண திருக்கோயில், அக்ஷர்தாம், அகமதாபாத், குஜராத் மாநிலம்.

+91-79 – 23260001-2 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுவாமி நாராயணர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் அக்ஷர்தாம்
மாவட்டம் அகமதாபாத்
மாநிலம் குஜராத்

குஜராத் மாநிலத்தில் உள்ள சாப்பியா என்ற கிராமத்தில் 1781ம் ஆண்டு சுவாமி நாராயணன் அவதரித்தார். பிஞ்சில் பழுத்த பழம் என்ற வாசகத்துக்கு இவரே சிறந்த உதாரணம். சுவாமி நாராயண் தன் ஏழு வயதிலேயே நான்கு வேதங்கள், உபநிஷதங்கள், பகவத்கீதை மற்றும் ஆன்மிக நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். தன் பத்தாம் வயதில் வாரணாசி (காசி) சென்ற அவர், விசிஷ்டாத்வைத தத்துவம் குறித்து பண்டிதர்கள் மத்தியில் பேசி கைத்தட்டல் பெற்றார். 11ம் வயதிலேயே தன் வீட்டை விட்டு வெளியேறினார். குடும்பப் பற்றைத் துறந்து தீவிர ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டார்.

இந்தியா முழுவதும் உள்ள புண்ணிய சேத்திரங்களுக்கு பயணம் செய்தார். அவரது இடுப்பில் கட்டிய ஒரு துண்டைத் தவிர வேறு எதுவும் அவரிடமில்லை. நடந்தே யாத்திரை சென்றார். முதலில் இமயமலையிலுள்ள பனிச்சிகரங்களில் உள்ள புண்ணியப்பகுதிகளை தரிசித்தார். பின்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கன்னியாகுமரி வரை அவரது பயணம் நீடித்தது. மதுரை, ராமேஸ்வரம் முதலான புண்ணிய சேத்திரங்களும் இதில் அடக்கம். மீண்டும் குஜராத்தை அடையும் போது அவருக்கு வயது 18 ஆகியிருந்தது. இந்த ஏழு ஆண்டு காலத்துக்குள் அவர் நடந்தே பயணித்த தூரம் 12 ஆயிரம் கி.மீட்டர். இராமானந்த சுவாமி என்பவர் இளமையிலேயே இவருக்கு இருந்த ஆன்மிக ஆர்வத்தைப் பார்த்து, தனது சீடர்களிடம், “இவரே இனி உங்கள் குருஎன அறிவித்தார். அவருக்கு சகஜானந்தாஎனப் பெயர் சூட்டினார். சகஜானந்தரின் சிறப்பை அறிந்த பல்துறை வல்லுநர்கள் அவரது பக்தர்கள் ஆயினர். இவர்களில் 3ஆயிரம் சாதுக்களும் அடக்கம். அவர்கள் சுவாமி நாராயணனைத் தங்கள் தெய்வமாகவே கருதினர்.

ஏழை மக்களிடமும், பாவம் செய்து துன்பப்படும் மக்களிடமும் அவர் மிகுந்த அன்பு செலுத்தினார். மூடநம்பிக்கை, இன்பம் தரும் பொருட்களிடம் அடிமையாகி கிடத்தல் ஆகியவற்றில் சிக்கியிருந்த மக்களை சந்தித்து அவர் உபதேசம் செய்தார். இதன் காரணமாக குஜராத் மக்களில் பெரும்பாலோனோர் ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்து மனஅமைதி பெற்றனர். அந்த மகானின் நினைவாக இக்கோயில் எழுப்பப்பட்டது. 1992 அக்டோபர் 30ல் திறக்கப்பட்ட இந்தக் கோயில் 23 ஏக்கர் பரப்பளவுள்ள பசுமையான நிலத்தில் அமைந்துள்ளது. கோயிலில் சுவாமி நாராயண் நினைவிடம், “ஆர்ஷ்எனப்படும் ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், பூங்கா ஆகியவை உள்ளன. ராஜஸ்தான் மார்பிளால் ஆன சுவாமி நாராயணன் நினைவிடத்தின் மத்தியில் 7 அடி உயரமுள்ள சுவாமியின் தங்கச்சிலை அமைந்துள்ளது. சுவாமியை பின்பற்றி வாழ்ந்த மகான்களின் மார்பிள் சிலைகள் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலை கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆனது. 6 ஆயிரம் மெட்ரிக் டன் (60 லட்சம் கிலோ) இளஞ்சிவப்பு நிற கற்கள் பயன்படுத்தப்பட்டது. 108 அடி உயரமும், 240 அடி நீளமும், 131 அடி அகலமும் உடையது இந்த கோயில்.

சுவாமி நாராயணனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது போதனைகளை விளக்கும் கண்காட்சி அரங்கம் இங்கு உள்ளது. நுழைவுக்கட்டணம் 20 ரூபாய் தான். ஆனால், நான்கு மணி நேரத்துக்கு குறையாமல் சுற்றிப்பார்க்கும் வகையில் இது அமைந்துள்ளது. ஒரு மாய உலகத்துக்குள் சென்று திரும்பிய உணர்வை இது ஏற்படுத்துகிறது. இங்குள்ள சிலைகளுள் திருப்பாவை இயற்றிய நம் தமிழகத்து ஆண்டாள் சிலையும் அடக்கம். இராமாயணம், மகாபாரதக் காட்சிகளை விளக்கும் அரங்கங்களை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்கலாம். சினிமாக்களில் கூட இவ்வளவு பிரம்மாண்ட அரங்கங்கள் அமைத்தது இல்லை என சொல்லுமளவு இவை உள்ளன. சுவாமி நாராயணனின் பக்தர்கள் பாடுவது போன்ற ஒரு பிரேமானந்த்என்ற அரங்கம் எவரையும் கைத்தட்டி மகிழ வைக்கும்.

உள்ளுக்குள் இருக்கும் பிரம்மாண்ட திரையரங்கில், “குரு இல்லாமல், ஒரு மனிதன் கடைத்தேற முடியாதுஎன்பதை விளக்கும் திரைப்படம் காட்டப்படுகிறது. இப்படி ஒரு திரைப்பட அரங்கு ஆசியாவில் வேறு எங்கும் இல்லை என கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர். அதாவது ஒரே இடத்தில் 14 திரைகள் உள்ளன. 22 ஸ்லைடு வீடியோ புரொஜக்டர்களைக் கொண்டு திரையிடுகின்றனர். ஒரே நேரத்தில் 14 காட்சிகளை பார்ப்பதென்றால் வியப்புக்குரியது தானே!

15 ஏக்கர் பரப்பளவுள்ள பூங்கா ஒன்று இங்கு இருப்பது இன்னும் விசேஷம். இதில் இருக்கும் நீர்நிலை ஒன்றில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக சித்தரித்துள்ளனர். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தெடுக்கும் காட்சியும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் கல்வி, மருத்துவம், ஆதிவாசிகள் மற்றும் கிராமநலன், உயிரினங்கள், இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் விதம், சமுதாய சீர்கேடுகளை ஒழித்தல், கலை மற்றும் பண்பாடு குறித்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. ஏராளமான அறிஞர்களை உள்ளடக்கிய இந்த மையம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. கருத்தரங்க கூடமும் இருக்கிறது.

திருவிழா: தீபாவளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *