அருள்மிகு சூரியனார் திருக்கோயில், சூரியனார்கோயில்

அருள்மிகு சூரியனார் திருக்கோயில், சூரியனார்கோயில், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 2472349 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவசூர்யன்
அம்மன் உஷாதேவி, சாயாதேவி
தல விருட்சம் வெள்ளெருக்கு
தீர்த்தம் சூரியதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சூரியனார்கோயில்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடைய நவகிரகங்களை வேண்டி வழிபட்டார். நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர். இதனை அறிந்த பிரம்ம தேவன் கோபம் கொண்டார். “சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் வரம் தரும் அளவுக்கு மீறிச் செயல்பட்டுவிட்டீர்கள். எனவே நீங்கள் பூலோகத்தில் தொழுநோய் பீடித்து உழல்வீர்களாக என சாபமிட்டார்.”

அதன்படி பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர். அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும். பல்வகைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுகிரகம் செய்வீர்களாகஎன அருளினார் என்பதே இத்தலத்தின் வரலாறு ஆகும்.

சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில். தெற்கே இந்த சூரியனார் கோயில். கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.

கருவறையில் சூரிய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார். சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார். சூரிய பகவான் உக்கிரம் அதிகம். அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார். அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது. மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது. சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.

நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர். இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது. இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர். சங்க காலத்தில் பூம்புகாரில் இருந்த உச்சிக்கிழான் கோட்டம் என்ற சூரியன் கோயில் கடல்கோளால் அழிந்து விட்டபோதிலும் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயில் இன்றும் பொலிவுடன் விளங்கி வருகிறது.

சூரியனார் கோயில் எனும் இத்தலம் தொன்மைச் சிறப்பாலும், புராணவரலாற்றுச் சிறப்பாலும், தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் சிறப்பாலும் புகழ் வாய்ந்த தலமாகும்.

திருவிழா:

ரதசப்தமி உற்சவம் தை மாதம் – 10 நாட்கள் திருவிழா.

பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இது மகா அபிசேகம் என்று அழைக்கப்படுகின்றது.

சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி ஆகியநாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிசேக ஆராதனைகள் நடக்கும்.

வேண்டுகோள்:

ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து தொடர்ந்து பன்னிரெண்டாவது ஞாயிற்றுகிழமை முடிகிற வரை சுமார் இரண்டரை மாத காலம் (78 நாட்கள்) இத்தலத்திலே தங்கியிருந்து நாடோறும் நவதீர்த்தங்களிலும் நீராடி உபவாசமிருந்து திருமங்கலகுடி பிராணநாதரையும் மங்கள நாயகியையும் இத்தலத்து நாயகர்களையும் முறைப்படி வழிபட்டு வரவேண்டும். தத்தமது தோஷத்துக்கான பரிகாரங்களையும் செய்து வரவேண்டும். இப்படிச் செய்து வந்தால் மேற்படி தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுகின்றனர்.

இத்தலத்தில் வழிபடுவதால் நவகிரக தோசங்கள் நீங்கும். காரியத் தடை விலகும்.

நேர்த்திக்கடன்:

நாடி பரிகாரம் செய்வது இங்கு விசேசம். நவகிரக ஹோமம் செய்யலாம். சூர்ய அர்ச்சனை செய்யலாம். சர்க்கரை பொங்கல் அபிசேகம் செய்வது இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது. நவகிரக தோசம் விலக நவகிரக அர்ச்சனை, நவகிரக அபிசேகம் செய்தல் நல்லது. தவிர அபிசேகம் அர்ச்சனை துலாபாரம், கோதுமை, வெல்லம், விளைச்சல் ஆகியவற்றறை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் தூளி கட்டி வழிபடுகிறார்கள். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *