அருள்மிகு பரசுராமர் திருக்கோயில், திருவல்லம்

அருள்மிகு பரசுராமர் திருக்கோயில், திருவல்லம், திருவனந்தபுரம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 471-238 0706 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரசுராமர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருவல்லம்
மாவட்டம் திருவனந்தபுரம்
மாநிலம் கேரளா

பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்கு கிடைத்த இலிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவம் செய்து தோஷம் நீங்கப் பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தைப் பூஜை செய்துள்ளனர். வல்லம் என்றால் தலைஎன்று பொருள். முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம் வரை நீண்டிருந்ததால் இத்தலம் திருவல்லம்எனப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாபரைப் பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு சுருங்கிவிட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பெருமாளின் உடல் பகுதியாகவும், திருவல்லம் பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந் தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமாளின் கால் பகுதியாகவும் விளங்குவதால் ஒரே நாளில் இம்மூன்று தலங்களையும் தரிப்பது மிகவும் நல்லது.

பரசுராமர் தன் தாய்க்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் தட்சிண கயைஎன அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பாளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார். பரசுராமர் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். வாழ்வில் முன்னேற ஒழுக்கம் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த அவதாரத்தின் நோக்கம். தன் தாய் ஒரு வாலிபனை ஏறிட்டு பார்த்து விட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக, தந்தை ஜமதக்னி முனிவரின் உத்தரவுப்படி தாயை வெட்டி கொன்றவர். பிறகு தந்தையிடம் பெற்ற வரத்தால் தாயை பிழைக்க வைத்தவர். சகல கலைகளையும் கற்றவர். அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. இவரது ஆயுதம் பரசுஎன்பதால் பரசுராமர்ஆனார். தன் தந்தை ஜமதக்னி முனிவரை அரசன் ஒருவன் கொன்றான் என்பதற்காக, ஒட்டு மொத்த அரச வம்சங்களையும் வேரோடு அழிக்க சபதம் எடுத்தார்.

இவ்வேளையில், இராமனும் மன்னர் குடும்பத்தில் இருந்து வர, வந்திருப்பது மகாவிஷ்ணுவின் மற்றொரு அவதாரம் என்பதை உணர்ந்தார். அதன்பின் தன்னிடமிருந்த அஸ்திரங்களையும், வில்லையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு தவம் செய்ய சென்று விட்டார். இவர் தன் கோடரியால் மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே மலைநாடான கேரளா ஆகும். பரசுராமர் வழிபட்ட இந்த இடத்தில் அவரது பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது. இந்த பீடத்தைப் பரசுராமரின் சீடரும், சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இங்குள்ள சிவபெருமானை பரசுராமரும், மகாவிஷ்ணுவின் அம்சமாக வேதவியாசரை விபாகரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

திருவிழா:

ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களிலும், மாதாந்திர அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் பிதுர் தர்ப்பணம் கொடுக்க பெருமளவில் கூடுகின்றனர். பரசுராமர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வேண்டுகோள்:

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க, படிக்கும் குழந்தைகள் வேதவியாசருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். தமிழகத்தில் திருக்கடையூரில் நடைபெறுவதை போல, நீண்ட நாள் வாழ்வத்ற்கு இங்கு ஆயுள் விருத்தி ஹோமங்கள் நடைபெறுகின்றன. நோயற்ற வாழ்க்கைக்காகவும், நிம்மதியான மனநிலை வேண்டியும், பக்தர்கள் இந்த பீடத்திற்கு பூஜைசெய்கிறார்கள். குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் வளர இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னதானம் செய்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *