அருள்மிகு ஹெத்தையம்மன் நாகராஜர் திருக்கோயில், மானிஹடா, மஞ்சக்கம்பை

அருள்மிகு ஹெத்தையம்மன் நாகராஜர் திருக்கோயில், மானிஹடா, மஞ்சக்கம்பை, நீலகிரி மாவட்டம்.

+91-423 228 6258, 94869 04422

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகராஜர்
அம்மன் ஹெத்தையம்மன்
தலவிருட்சம் ஆலமரம்
தீர்த்தம் சந்தானக்குளம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மஞ்சக்கம்பை
மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

மலைப்பகுதியான மஞ்சக்கம்பையில் அம்மன் கோயில் கட்டுவதற்காக மானிஹடா என்ற பகுதியில் மண் எடுத்துக் கொண்டிருக்கும் போது திடிரென சப்தம் கேட்டது. அந்த இடத்தில் 2 குகையும், ஒரு நாகராஜர் சிலையும் இருந்தது. பின் அந்த இடத்தில் நாகராஜருக்கும் கோயில் கட்ட குழி வெட்டிய போது பாறை ஒன்று இடையூறாக இருந்தது. அதை அகற்றிய போது அதற்கடியில் நாகம் ஒன்று உயிரோடிருந்தது. இதையடுத்து அந்தந்த இடங்களில் அம்மனுக்கும், நாகராஜருக்கும் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. இந்த நாகம் தற்போதும் கோயிலில் உயிரோடு இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கோயில் நீலகிரி மாவட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மானிஹடா மகா சக்தி என்று மிகப் பெருமையுடன் அழைக்கப்படும் மிக சிறப்பு வாய்ந்த கோயில். அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து வழிபடும் மிக முக்கியமான கோயில்.

இராமர் அயோத்திக்குத் திரும்பிப் போகும்போது இந்த மஞ்சக்கம்பை மானிஹடா வழியாக சென்றதாக ஐதீகம். இங்குள்ள இராமர் பாதம் மிகப் புனிதமாகப் பக்தர்களால் வணங்கப்படுகிறது.

நாகராஜர் ஆலய மூலஸ்தானத்துகுள் இன்னும் ஒரு நாகம் உயிரோடு இருக்கிறது. அது அடிக்கடி பக்தர்களுக்கு காட்சி தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாகராஜர் ஆலயத்திலிருக்கும் நாகம் தானாகவே சுரங்கப்பாதை அமைத்து அருகிலிருக்கும் ஹெத்தையம்மன் ஆலயத்திற்கு வந்து போவது அதிசயம். மற்ற எந்த கோயிலிலும் இல்லாத சுற்றுச் சூழலும் இயற்கை எழிலும் அமைந்திருப்பது சிறப்பம்சம். மன அமைதிக்காக இங்கு மக்கள் ஏராளமானேர் வருகின்றனர்.

திருவிழா:

பூக்குண்டம் மிதித்தல் மே 1, 2 தேதிகள். 48 நாட்களுக்கு விரதம் இருக்க வேண்டும். விரத நாட்களில் மாலை அணிந்திருக்க வேண்டும். விரதம் இருக்கும் நாட்களில் மஞ்சள் அல்லது சிகப்பு நிறத் துணிகளை அணிந்து கொள்ள வேண்டும். அது முடியாத பெண்கள் கழுத்தில் துண்டு அணிந்து கொள்ள வேண்டும். குண்டம் இறங்கும் அன்று உணவு ஏதும் அருந்தாமல் குண்டம் இறங்கினால் பக்தர்கள் நினைத்தது நிறைவேறும். மாதந்தோறும் அமாவாசை அன்று நாகராஜர் ஆலயத்தில் பக்தர்கள் பெருமளவில் கூடுவர்.

வேண்டுகோள்:

நாகராஜர் ஆலயத்தில் பூஜை செய்து விட்டு சந்தான லட்சுமி அம்மன் சன்னதிக்கு சென்று அரைகால் வெள்ளை துணியையும் எலுமிச்சம் பழத்தையும் எடுத்து சென்று பூஜை செய்ய வேண்டும். பின்னர் அம்மன் கோயிலை வலம் வந்து அங்குள்ள மரத்தில் வெள்ளை துணியால் தொட்டில் கட்ட வேண்டும். இவ்வாறு கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

மேலும் இத்தலத்தில் வழிபட்டால் குடிபோதை, சிகரெட்பிடித்தல் போன்றவற்றிலிருந்து விடுபட முடிகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுச்சூழல் உடற்பிணிகளை நீக்குகிறது. மன அமைதி வேண்டுபவர்கள் ஏராளமானோர் இத்தலத்துக்கு வருகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

குழந்தை வரம் வேண்டியவர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு குண்டம் மிதிப்பார்கள். தவிர மொட்டை அடித்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். நாகதோசம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜர் கோயிலில் உள்ள புற்றில் பால் மற்றும் பழத்தை வைக்கின்றனர். அமாவாசை நாட்களில் இவ்வாறு தொடர்ந்து வேண்டிக்கொண்டால் கூடிய விரைவில் தோசம் விலகுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *