அருள்மிகு நாகராஜர் திருக்கோயில், மாளா, பாம்புமேக்காடு மனை

அருள்மிகு நாகராஜர் திருக்கோயில், மாளா, பாம்புமேக்காடு மனை, திருச்சூர் மாவட்டம், கேரளா.

+91 – 480 – 289 0453, 289 0473 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலையில் மட்டும் திறந்திருக்கும்.

மூலவர் நாகராஜா
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் மாளா, பாம்புமேக்காடு மனை
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா

இரிஞ்ஞாலக் குடா அருகிலுள்ள மேக்காட்டில் வசித்த நம்பூதிரி ஒருவர் சிறந்த பக்திமான்; ஆனால் ஏழை. தன்குடும்ப வறுமை தீர அருகிலுள்ள திருவற்றிக்குளம் சிவன் கோயிலில் 12 ஆண்டுகளாக தொடர்ந்து பஜனைப் பாடல்கள் பாடி வந்தார். சிவனிடம் தன் குடும்ப வறுமை நீங்க, உருக்கமாக பிரார்த்தித்தார். ஒரு முறை, அவர் தண்ணீர் எடுக்க அருகிலுள்ள குளத்துக்குச் சென்றார். அப்போது அங்கே பிரகாசம் எழுந்தது. சகல ஐஸ்வர்யங்களும் மிக்க ஒரு உருவம் அங்கு வந்தது. அதன் கையில் மாணிக்கக்கல் இருந்தது. நம்பூதிரி அந்த உருவத்திடம், “நீங்கள் யார்? இவ்வளவு பிரகாசமாக இருக்கிறீர்களே. உங்கள் கையில் ஏதோ மின்னுகிறேதேஎன வரிசையாய் கேள்விகளை அடுக்கினார். இந்த உருவம் சற்று கோபத்துடன், “என்னைப் பற்றிய விசாரணை உனக்கு தேவையில்லாதது. தண்ணீர் எடுக்கத்தானே வந்தாய். எடுத்துக் கொண்டு போய்விடுஎன்றது. இருப்பினும் நம்பூதிரி விடவில்லை. “சரி. உங்களைப் பற்றி எதுவும் செல்ல வேண்டாம். உங்கள் கையிலுள்ள கல் பளிச்சிடுகிறதே அதை எனக்கு தருவீர்களா?” என்றார்.

அது உனக்கு எதற்கு?” என்றதும், “தாருங்கள். எனக்கு தெரிந்த ஒரு தம்பிரான் இங்கு உள்ளார். அவரிடமும் இந்த அதிசயக்கல்லை காட்ட வேண்டும்என்றார். அந்த உருவம் அவரது கோரிக்கையை ஏற்றது. “சரி தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. இது மாணிக்கக்கல். இதை தம்பிரானிடம் காட்டிவிட்டு, மீண்டும் என்னிடமே தந்து விடவேண்டும். நீ வரும் வரை இங்கே நான் காத்திருப்பேன்என்றது. நம்பூதிரி அதைத் தம்பிரானிடம் காட்டினார், தம்பிரானுக்கு அக்கல்லை திருப்பிக் கொடுக்க மனமே வரவில்லை. ஆனால் நம்பூதிரி அந்த உருவத்திற்கு தான் செய்து கொடுத்துள்ள வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் எனக்கூறி கல்லுடன் மீண்டும் குளத்துக்கு வந்து உருவத்திடம் ஒப்படைத்தார். உடனே அந்த உருவம் மறைந்து விட்டது. அவ்வுருவம் இருக்கும் வரை பிரகாசமாக இருந்த அந்த இடம் அது மறைந்தவுடன் இருளாகிவிட்டது. அவ்வுருவம் யார் என்பதற்கு நம்பூதிரிக்கு விடை கிடைக்கவில்லை. இதனிடையே 12 ஆண்டு கால பஜனைப்பணி முடிய மூன்றே நாட்கள் இருந்த வேளையில், அந்த உருவம் மீண்டும் குளக்கரைக்கு வந்தது. நம்பூதிரி மகிழ்ந்தார், அது ஏதோ தெய்வசக்தி என்பதை புரிந்து கொண்டு, அதன் காலில் விழுந்தார். “பரமசிவன் மீது ஆணையாக கேட்கிறேன், நீங்கள் யார் என்பதை என்னிடம் சொல்ல வேண்டும். உங்கள் உருவத்தை காட்ட வேண்டும்என்றார். அவ்வுருவம் பரமசிவனின் பெயரைக் கேட்டதும், “நம்பூதிரி என் பெயர் வாசுகி. என்னை ஒளிமயமாக நீ பார்க்கிறாய். இதை பார்க்கும் சக்தி உனக்கு உண்டு. ஆனால் என் நிஜவடிவை உன்னால் பார்க்க முடியாது. அந்த சக்தி உனக்கு இல்லைஎன்றது. “பரவாயில்லை உங்கள் உருவத்தை நான் பார்க்கிறேன், காட்டுங்கள்என்றார். உருவம் தன் சுயவடிவைக் காட்டியதோ இல்லையோ, நம்பூதிரி மயங்கி விழுந்து விட்டார். அது ஒரு ஐந்துதலை நாகம். அவ்வளவு தலை கொண்ட பாம்பை அவர் பார்த்ததே இல்லை, மயக்கம் தெளிந்து எழுந்த அவரிடம் மீண்டும் அவ்வுருவம் பரமசிவனிடம் நீ வைத்த கோரிக்கை உன் நிஜமான பக்தியால் ஏற்கப்படுகிறது. உனக்கு என்ன வரம் வேண்டும்என்றது. நம்பூதிரி தன் வறுமை நிலையை அதனிடம் சொன்னார். உடனே உருவம் அந்த மாணிக்கக்கல்லை அவரிடம் கொடுத்தது. “இன்னும் மூன்று நாள் கழித்து வீட்டுக்கு போ, என்னுடைய சாந்நித்யம் உன் வீட்டில் எப்போதும் இருக்கும். உன் வீட்டுக்கு நாகயக்ஷியும் வந்து சேரும். எங்கள் இருவரையும் உன் வீட்டில் ஒரு பகுதியில் பிரதிஷ்டை செய். அங்கு இரண்டு அணையா தீபங்களை ஏற்று. இதுதவிர எங்கள் இனப் பாம்புகள் ஏராளமாக உன் வீடு தேடி வரும். அவற்றுக்கு புகலிடமாக அவ்வீட்டை சுற்றியுள்ள பகுதி அமையட்டும். உன் வீட்டில் சமையலறையைத் தவிர எங்கும் தீ வைக்கக்கூடாது. வீட்டைச் சுற்றியுள்ள மரங்களை வெட்டவோ, சுற்றுப்பகுதிகளைக் கிளறவோ கூடாது. பாம்புகளை உன் குடும்பத்தார் யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. அப்படி தொந்தரவு செய்து அவை தீண்டினால், உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால் அந்த பாம்பு இறந்து விடுமே தவிர, உங்களுக்கு பாதிப்பு இருக்காது. இருப்பினும் பாம்பு அழிவதற்கு நீங்கள் காரணமாக இருக்கக்கூடாதுஎன்றது.

நம்பூதிரி வீட்டுக்கு வருவதற்குள் அக்குடும்பத்தில் மூத்தவர் ஒருவர், பனை ஒலையால் செய்த தன் தலைப்பாகையை கழற்றி வைத்தார். அப்போது அங்கு வந்த ஒரு பாம்பு தலைப்பாகையோடு இணைந்தது. இதன்பின் ஊர் திரும்பிய நம்பூதிரி தான் பார்த்த உருவத்தை நாகராஜாவாகவும், தலைப்பாகையோடு இணைந்திருந்த பாம்பின் உருவத்தை நாகயக்ஷியாகவும் வடித்தார். நாகதோஷம் சம்பந்தமான வழிபாடுகளை நம்பூதிரியின் வம்சத்தினர் இன்று வரை செய்து வருகின்றனர்.

இது கோயில் அல்ல, வீடு தான். தனியாருக்கு உட்பட்டது. தமிழகத்திலுள்ள நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இவ்வீட்டார் நிர்ணயித்த தாந்த்ரீக முறைப்படியே பூஜை நடக்கிறது.

சர்ப்பதோஷம் நீங்க இங்கு பூஜை நடத்திக் கொள்ளலாம். பத்து ரூபாயிலிருந்து 6 ஆயிரம் வரை செலவாகும் பூஜைகள் நடக்கின்றன. பூஜை முடிவில் எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது. நாகம் தவிர, பகவதி பத்ரகாளி வழிபாடும் நடக்கிறது.

சுற்றிலும் புல், பூண்டு, மரம், மட்டைகளுமாய் காட்சி தர ஒரு பெரிய வீட்டுக்குள் நாகராஜா, நாகயக்ஷி ஆகியோர் சிலை வடிவத்தில் உள்ளனர். அணையா விளக்கு எரிகிறது.

இப்படிப்பட்ட பாம்புக்கோயில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாளா நகரிலுள்ள பாம்பு மேக்காடு மனை கோயிலாகும். கேரளாவிலுள்ள பாம்பு கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கார்த்திகை முதல் தேதியிலிருந்து 41 நாட்கள் தொடர்ச்சியாகவும், ஆவணியில் முதல் ஏழுநாட்களும் அனைவரும் கோயில் அருகில் சில நிபந்தனைகளின் பேரில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற நாட்களில் கண்டிப்பாக முன் அனுமதி பெற்றால் மட்டுமே அனுமதி உண்டு. ஜாதவேத நம்பூதிரி என்பவர் பூஜைகளைக் கவனிக்கிறார். காலையில் மட்டுமே பூஜை உண்டு.

வேண்டுகோள்:

சர்ப்பதோஷம் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் நாகருக்கு பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *