அருள்மிகு பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில், குறிச்சி

அருள்மிகு பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில், குறிச்சி -614 602 புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:- பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ)மகாலட்சுமி

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – குறிச்சி

மாவட்டம்: – புதுக்கோட்டை

மாநிலம்: – தமிழ்நாடு

 

பட்டுக்கோட்டை அறந்தாங்கி ரோட்டில் பட்டுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் குறிச்சி என்ற கிராமத்தில் தனராமலிங்க தேவர் என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

ஆன்மிகவாதியான அவர் ஏழை மக்களுக்கு மருத்துவ வசதியையும், சோதிடம், பரிகாரம் செய்தல் ஆகிய பணிகளையும் செய்துவந்தார். அப்போது அருகிலுள்ள பாலத்தளி கிராமத்தினர் தனராமலிங்கத்தேவரை சந்தித்து துர்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த வழிகேட்டனர். அவரது பெரும் முயற்சியால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

ஒரு வெள்ளிக்கிழமை இரவில் அசரீரி ஒலித்தது. அவரிடம், “ஒரு குறிப்பிட்ட இடத்தில், உன் மனதில் உள்ளபடி எனது தோற்றத்தை சிலையாக வடித்து தயாராக வை. சித்தர் ஒருவர் உன்னை தேடி வருவார். அவரது ஆலோசனைப்படி சிலையை வைக்கலாம்,” என கூறியது.

இதன்பிறகு தனராமலிங்கத்தேவர் தனராமலிங்க சுவாமியாக மாறினார். அப்போது ஒரு சித்தர் அவரை தேடி வந்தார். நிறைந்த அமாவாசை நாளில் நவபாடானத்தால் முப்பெரும் தேவியரை துர்க்கை உருவத்தில் வடித்து 18 கைகளுடனும், சிம்ம வாகனத்தில் அமர்ந்ததுபோலும் 12 அடி உயர சிலையை ஒரே இரவில் அந்த சித்தர் வடிவமைத்தார். பின்பு தன்னைப்பற்றி எதுவுமே சொல்லாமல் கொல்லிமலை செல்வதாக எழுதிக்காட்டிவிட்டு சென்று விட்டார்.

பின்பு இந்த சிலைக்கு பதினெட்டுக்(அஷ்டதசபுஜ)கை மகாலட்சுமி துர்க்கை அம்மன் என பெயர் சூட்டப்பட்டது.

இத்தலத்தில் செந்தில் ஆண்டவர் மந்திராலயக் குடிலில் ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கிறது. மூலவர் சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு எதிரே 15 அடி தூரத்தில் ஒரு ருத்ராட்ச மரம் முளைத்தது.

இந்தியாவில் இமயமலை அடிவாரப்பகுதியிலும், திருப்பதியிலும் மட்டுமே ருத்திராட்ச மரம் உள்ளதாக கூறுகிறார்கள். அவ்வளவு அபூர்வமான மரம் இங்கும் வளர்ந்தது. 1997ம் ஆண்டு முதல் இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவிளக்கு பூஜை நடந்துவருகிறது. பதினெட்டுக்கை(அஷ்ட தசபுஜ) மகாலட்சுமி துர்க்கை அம்மனை வழிபட்டால் முப்பெரும் தேவியரை தனித்தனியே வழிபட்ட பலன் கிடைக்கும். தீராத நோய்கள் தீரும்.

இந்த கோயிலில் உள்ள ருத்திராட்ச மரத்தடியில் இரட்டை விநாயகர் அருள்பாலிக்கிறார். பொதுவாக அரசமரத்தின்கீழ் அருள்பாலிக்கும் விநாயகர் இங்கு ருத்திராட்ச மரத்தின் அடியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலுக்கு வருபவர்கள் தாங்களாகவே ருத்திராட்ச இரட்டை விநாயகருக்கு பூசை செய்து வழிபடலாம்.

இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவிளக்கு பூசை நடந்துவருகிறது.

தீராத நோய்கள் தீரவும், தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்படவும், திருமணத்தடை நீங்கி குழந்தைச் செல்வம் கிட்டவும், வேலை கிடைக்கவேண்டியும், கணவன் மனைவி பிரச்னை நீங்கி நிம்மதி கிடைக்கவும், கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் பெறவும் இத்தல அம்பிகையிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வேண்டுகோள் நிறைவேறியதும் அம்பாளுக்குத் திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *