அருள்மிகு குருசாமி அம்மையார் திருக்கோயில், கண்டமங்கலம்

அருள்மிகு குருசாமி அம்மையார் திருக்கோயில், கண்டமங்கலம், அரியூர், புதுச்சேரி மாவட்டம்.

+91 94866 23409, 98848 16773

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குருசாமி அம்மையார்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கண்டமங்கலம்
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுசேரி

1890-ல் இருந்து 1895 வரை இந்தப் பகுதியில் குருசாமி வசித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி, சுதந்திர காலத்துக்கு முன் அதாவது 1947-க்கு முன் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்ததாம். மேலே சொன்னபடி இரண்டு மாநிலத்துக்கும் இது எல்லையாக அமைந்தமையால், இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்துக்கு அருகே புதுவை எல்லையில் பிரெஞ்சுப் படையும், தமிழக எல்லையில் பிரிட்டிஷ் படையும் தனது வீரர்களை நிறுத்திக் காவல் காத்து வந்ததாம். எனவே, இரண்டு படைகளும் நிரந்தர முகாமிட்டிருக்கும் இடத்துக்கு அருகே உள்ள குருசாமி அம்மையார் ஜீவ சமாதி எவருக்கும் புலப்படவில்லை. இந்தப் பகுதி வழியாகப் பயணிப்போர் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று இங்கே அமர்ந்தாலும், அவர்களை விரட்டி விடுவார்கள் இரண்டு படையினரும். காரணம் போராட்டக்காரர்களாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் எவரையும் இதன் அருகே நெருங்க விட மாட்டார்களாம். தமிழகப் பகுதிக்கு ஒரு வழியாக சுதந்திரம் கிடைத்த பின்னும், பிரெஞ்சுக் குடியரசின் ஒரு பகுதியாகவே புதுவைப் பிரதேசம் தொடர்ந்து வந்தது. எனவே, குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதியை நிம்மதியாகத் தரிசிக்க வரும் பக்தர்களை, பிரெஞ்சுப் படைகள் சந்தேகக் கண் கொண்டே பார்க்க ஆரம்பித்தது. எங்கே, தமிழகம் மாதிரி தங்களது கட்டுப்பாட்டில் உள்ள புதுவைப் பிரதேசத்திலும் ஏதேனும் கலகம் விளைவித்து விடுவார்களோ என்று பிரெஞ்சுப் படை பயந்தது. காலம் உருண்டோடியது. எல்லாப் படைகளும் தொலைந்தொழிந்த பின்னர்தான் இந்த ஜீவ சமாதி, ஒரு வெளிச்சத்துக்கு வந்தது என்று சொல்லலாம்.

வடநாட்டில் இருந்து இங்கே வந்தவர் குருசாமி அம்மையார் என்பது ஒரு செய்தி. கால்நடையாகப் பல பகுதிகளுக்கும் சென்ற இவர், கடைசியாக வந்து அமர்ந்தது இந்த கண்டமங்கலத்தின்தான். இந்த இடத்தின் சூழலும், அமைதியும் அம்மையாருக்குப் பிடித்துப் போக, இங்கே ஒரு மரத்தடியில் தங்கி தன் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டார். சாப்பாடு என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், எந்நேரமும் தியானத்திலேயே இருப்பாராம். யாரோ ஒரு வட நாட்டுப் பெண் சாது தங்கள் ஊருக்கு வந்து தியானத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள், அம்மையாரிடம் வந்து அருள் கேட்பார்களாம். தங்களுக்குள்ள மனக் குறை, வியாதி, வீட்டில் நல்ல காரியம் நடைபெறுவதற்கு இருக்கும் தடைகள் போன்றவற்றை அம்மையாரிடம் கொட்டுவார்களாம். அவர்களின் குறைகளை எல்லாம் புன்னகையுடன் கேட்டுக் கொண்டு, ஆசி புரிந்து அனுப்பி வைப்பாராம். அதன் பின் நிம்மதியுடன் வீடு திரும்புவார்கள் பக்தர்கள்.

குருசாமி அம்மையார் இறையருள் பெற்றவர். இவரிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றவர்கள் அடுத்து வந்த சில நாட்களிலே தங்களது குறைகள் அகலப் பெற்றனர். அதன்பின் அம்மையாருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, இவரது இருப்பிடம் தேடி வணங்கிச் செல்வார்கள். அப்படி வருபவர்களில் பொருள் வசதி படைத்த சிலர் அம்மையாரின் தியானமும் அருட்பணியும் தடைபடாமல் இருப்பதற்காக, போதிய இட வசதியை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். இன்னும் சிலர் நிலபுலன்களையும், சில சொத்துக்களையும் அம்மையார் பெயருக்கு எழுதிக் கொடுத்து சந்தோஷப்பட்டனர். சித்த புருஷர்கள் என்றால், அவர்களின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும். அதுபோல், குருசாமி அம்மையாரிடம் ஒரு நடைமுறை இருந்து வந்தது. அதாவது ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் உடல் முழுக்கக் காய்ந்த மிளகாயின் அரைத்தெடுத்த விழுதை நன்றாக உடல் மேல் பூசிக் கொண்டு, சற்று நேரம் ஊறிய பிறகு அருகில் உள்ள கிணற்றில் இறங்கிக் குளிப்பது வழக்கமாம். அம்மையாரின் சமாதிக்கு அருகில் அந்தப் புனிதக் கிணறு இன்று பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண் பக்தர்கள் சிலரே மிளகாயை அரைத்து, அம்மையாரின் மேல் பூசிவிடுவார்கள். இப்படி மிளகாயை அரைப்பது இந்த மடத்திலேயே செய்ய வேண்டுமாம். வீட்டில் இருந்து மிளகாயை அரைத்து எடுத்து வரக்கூடாது. இப்படி அரைத்துக் கொடுத்த பெண்களின் கைகளே ஜிவுஜிவுவென்று எரியும். அப்படி இருக்கும்போது இதை உடலில் பூசிக்கொண்டு சிரித்த முகத்துடன் அந்தப் பெண்களுக்கு ஆசி வழங்குவாராம் அம்மையார். மிளகாய் அரைக்கும்போது பெண்கள் என்ன பிரார்த்தித்தாலும், கூடிய விரைவிலேயே அது நடந்துவிடும் என்பது நம்பிக்கை. உடல் முழுக்க மிளகாய் அரைத்த விழுதுகள் அப்பி இருக்க, அதோடு அருகில் இருக்கும் கிணற்றில் இறங்கி விடுவாராம். கிணற்றின் மேல் அவர் கால் வைப்பது தான் தெரியுமாம். அடுத்த கணம் கிணற்றுக்குள் இருப்பாராம். எப்படி இறங்குவார் என்பது எவருக்குமே தெரியாதாம். கிணற்றுக்குள் இருக்கும் அம்மையாரை எவரும் எட்டிப் பார்க்க கூடாதாம். அப்படி ஒரு முறை எட்டிப் பார்த்த பெண்மணி, அம்மையாரைப் பார்க்கவே முடியவில்லை. அவரது தலைமுடி கிணற்றின் நீர்ப் பரப்பு மேல் படர்ந்து இருந்தது. அவரைக் காணவில்லை என்று பய உணர்ச்சியுடன் சொல்லி இருக்கிறார். அதுபோல் குளித்து முடித்து எப்படி மேலே ஏறி வருகிறார் என்பதும் எவருக்கும் தெரியாது. தரைக்கு வந்தவுடன் அம்மையார் அப்படியும் இப்படியும் திரும்பும்போது அவரது ஈரமான தலைமுடியில் இருந்து சிதறும் நீர்த் துளிகள் பலர் மீதும் பட்டுத் தெரிக்கும். அந்த நீர்த் துளிகள் தங்கள் மேல் படாதா என்கிற ஆர்வத்துடன் பலரும் அம்மையாரை நெருங்குவார்களாம். நீர்த் துளிகள் பட்டால் தங்கள் குடும்பம் சிறக்கும் என்பதற்காகப் பலரும் அருகே செல்வதற்குப் போட்டி போடுவார்களாம். இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் குருசாமி அம்மையாரின் மூலவர் விக்கிரகத்துக்கு மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்யும் வழிபாடு நடக்கிறது. இதற்காகப் பல பெண் பக்தர்களும் இங்கு வந்து ஆலய வளாகத்திலேயே மிளகாய் அரைத்துத் தருகிறார்கள். ஏதாவது ஒரு பிரார்த்தனையை மனதில் வைத்துக் கொண்டு, அம்மையாரின் அபிஷேகத்துக்கு மிளகாய் அரைத்துக் கொடுத்தால், அது நிச்சயம் பலித்து விடும் என்கிறார்கள். மற்றபடி வியாழக்கிழமைகளில் பால், எலுமிச்சம்பழச் சாறு கொண்டு குருசாமி அம்மையாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அன்றைய தினத்தில், இந்த மடம் இன்று செயல்படுவதற்கு உறுதுணையாக இருந்து வரும் வள்ளலார் ஆன்மிகப் பேரவை அன்னதானக் குழுவினர் அன்னதானம் செய்கின்றனர்.

குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி, தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்த நடராஜ சுவாமிகள் எனும் ஆன்மிக அடியாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இளம் வயதிலேயே துறவறம் பூண்ட நடராஜர், யாத்திரையாகப் புறப்பட்டு பல திருத்தலங்களைத் தரிசித்து வந்து கொண்டிருந்தார். அப்படி வந்தவர் புதுவையை அடைந்து சித்தானந்த சுவாமி கோயிலில் தவத்தில் ஆழ்ந்தார். அதுவரை நிரந்தரமாக எங்கும் தங்காமல் யாத்திரையாகப் பயணப்பட்டுக் கொண்டே இருந்த நடராஜரை, ஓர் அசரீரிக் குரல் தடுத்தாட்கொண்டது. “குருசாமி கோயிலுக்குப் போ. அங்கே உனக்குப் பணிகள் காத்திருக்கின்றனஎன்பதே அந்த அசரீரி. இதன்பின் அவரது உள்ளுணர்வுக்குக் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு விழுப்புரம் சாலையில் அரியூர் பகுதி வந்ததும், ஏதோ ஒரு குறிப்பு கிடைக்க, அங்கே புதர் மண்டிய ஓர் இடத்தில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார். அந்தப் புதருக்குள்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி புதையுண்டு கிடந்தது. தியானத்தின் போது நடராஜருக்கு குருசாமி அம்மையார் காட்சி கொடுத்து, “நான் இங்கேதான் குடி கொண்டிருக்கிறேன்என்று சொல்ல, சட்டென்று தியானம் கலைந்து எழுந்தார் நடராஜர். பரபரவென்று அந்த முள் புதரை அகற்றினார். சமாதியைக் கண்டுபிடித்தார். பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படையினரின் எதிர்ப்பை எல்லாம் சமாளித்து, அந்த ஜீவ சமாதிக்குப் புத்துயிர் தந்தார் நடராஜர்.

நடராஜரின் இந்தத் திருப்பணிகளுக்கு உள்ளூர்க்காரர்கள் சிலரும் உதவ முன்வந்தனர். அதன் பின், குருசாமி அம்மையாரின் திருவுருவப் படத்தைப் பாதுகாத்து வரும் ஒரு அன்பரை மங்கலம்பேட்டையில் கண்டுபிடித்து, அதை வணங்கினார். படத்தில் உள்ள உருவத்தைக் கொண்டு அம்மையாருக்கு ஒரு திருமேனி வடிக்கச் செய்தார். அந்தத் திருமேனியே இன்று நாம் தரிசிப்பது. வழிபாட்டையும் அன்னதானத்தையும் அந்த ஜீவ சமாதியில் துவங்கி வைத்தார். குருசாமி அம்மையாருக்கு செல்வந்தர்கள் கொடுத்த சொத்துக்களைக் கஷ்டப்பட்டுக் கண்டறிந்து அவற்றைக் கொண்டு கல்வி உட்பட பல திருப்பணிகளைச் செய்தார் நடராஜர். 1970-ஆம் ஆண்டு நடராஜ சுவாமிகள் மறைந்து விடவே, அவரது சீடரான சீதாராம் என்பவர் இந்தப் பணிகளைத் தொடர்ந்து நடத்தினார். இந்த இரு அருளாளர்களின் பெருமுயற்சியால்தான், குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி பலராலும் அறியப்படும் நிலைக்கு வந்தது என்றே சொல்லலாம். நடராஜ சுவாமிகள், சீதாராம் சுவாமிகள் ஆகிய இருவரின் சமாதிகளும் அம்மையாரின் சமாதி அமைந்துள்ள இடத்துக்கு அருகே அமைந்துள்ளன.

திருவிழா:

குருசாமி அம்மையாரின் குருபூஜை தினம் சித்திரை மாத பௌர்ணமி தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வேண்டுகோள்:

ஏதாவது ஒரு பிரார்த்தனையை மனதில் வைத்துக் கொண்டு, அம்மையாரின் அபிஷேகத்துக்கு மிளகாய் அரைத்துக் கொடுத்தால், அது நிச்சயம் பலித்து விடும் என்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

மிளகாய் அரைத்து கொடுப்பது, எலுமிச்சை பழச்சாறு கொண்டு அம்மையாருக்கு அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *