அருள்மிகு பாபாஜி திருக்கோயில், பரங்கிப்பேட்டை

அருள்மிகு பாபாஜி திருக்கோயில், ரேவு மெயின்ரோடு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91 44 – 2464 3630, 99941 97935

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் சன்னதிக்கு வெளியே நின்று பாபாஜியைத் தரிசிக்கலாம்.

மூலவர் பாபாஜி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பரங்கிப்பேட்டை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

பரங்கிப்பேட்டையில் சுவேதநாதய்யர், ஞானாம்பிகை தம்பதியர் வசித்தனர். சுவேதநாதய்யர் இங்குள்ள முத்துக்குமாரசுவாமி கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கி.பி.203ம் ஆண்டு, கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு நாகராஜன் என பெயர் சூட்டினர். சிறு வயதிலேயே கல்வி, கேள்விகளில் புலமை பெற்றவராக திகழ்ந்த நாகராஜன், பிற்காலத்தில் பாபாஜிஎன பெயர் பெற்றார். நாகராஜனுக்கு ஏழு வயதானபோது, முருகன் கோயிலில் திருவிழா நடந்தது. விழாவுக்கு வந்த ஒருவர், அவரைக் கடத்திச் சென்று காசியில் விட்டு விட்டார். அங்கு யோக மார்க்கத்தைக் கற்ற பாபாஜி, பொதிகைமலைக்குச் சென்று அகத்தியரைத் தரிசித்தார். அவர், “பக்தனே. உனக்கு யோக மார்க்கத்தை போதிக்கும் குரு கதிர்காமத்தில் (இலங்கை) இருக்கிறார்எனச் சொல்லி அனுப்பி வைத்தார். 12 நாட்களில் கதிர்காமம் சென்ற பாபாஜிக்கு, அங்கிருந்த போகர் சித்தர் பஞ்சாங்க கிரியா முறைகளை உபதேசித்தார். அதன்பின், பாபாஜி இமயமலைக்குச் சென்றார். தற்போதும் இவர் இமயமலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பிற்காலத்தில் பாபாஜியின் சீடர் ராமைய்யா, இங்கு பாபாஜிக்கு கோயில் எழுப்பினார்.

பாபாவின் தீவிர பக்தர் ஒருவர், அவரது தரிசனம் கிடைக்க விரும்பி பலமுறை இமயமலைக்குச் சென்றார். அவருக்கு பாபா காட்சி தரவில்லை. சோர்வடைந்த பக்தர், தனக்கு குறிப்பிட்ட நாளில் காட்சி கிடைக்காவிட்டால், தான் மலையிலிருந்து குதித்து உயிரை விடப்போவதாக கூறினார். அப்போதும், பாபாவின் தரிசனம் கிடைக்காமல் போகவே, அவர் இமயமலையில் இருந்து குதித்தார். பாபா அவரது உடலை எடுத்து வரச்செய்து, மீண்டும் உயிர் கொடுத்து, தன் சீடராக ஏற்றுக் கொண்டார். இவரையும், மற்றொரு பிரதான சீடரான அன்னை என்பவரையும் இயந்திரமாகப் பிரதிஷ்டை செய்துள்ளனர். அருகிலேயே பாபாஜி மற்றும் முருகன் யந்திரங்கள் உள்ளன.

அமைதியே உருவாக அமைந்த தலம் இது. பாபாஜியின் சன்னதிக்கு முன், கவுரிசங்கர்பீடம் என்னும் யாக குண்டம் உள்ளது. பாபாஜி அவதார நாளன்று (கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரம்) இதில் யாக பூஜை நடக்கும். அருகில் பாபாஜியின் பாதம் உள்ளது. சன்னதி முன்புள்ள இரண்டு தூண்களில் அன்னை மற்றும் கிரியா அம்மான் என்னும் சீடர்களின் வடிவங்கள் உள்ளன. இந்த தூண்களின் கீழே பஞ்சாங்க கிரியாபீடம் உள்ளது. சன்னதி முகப்பில் விநாயகர் இருக்கிறார். பாபாஜி கதிர்காமம் சென்றபோது, அவருக்கு முருகன் காட்சி தந்தார். இதை உணர்த்தும்விதமாக, ஒரு ஆலமரத்தின் கீழ் பாபவிற்கு முருகன் காட்சி தரும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. பாபாஜி சன்னதி விமானத்தில் அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

பிரதான சன்னதியில் பாபாஜி, சதுர வடிவ ஆவுடையார் பீடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். வலது கையில் அபய முத்திரை காட்டுகிறார். இடக்கையை மடியில் வைத்திருக்கிறார். இவ்வூரில் மட்டுமே பாபாஜியை சிலை வடிவில் தரிசிக்கலாம். வியாழனன்று இரவு 7 மணிக்கு பாபாஜிக்கு அபிஷேகம் நடக்கும். சன்னதி முகப்பில் விநாயகர் இருக்கிறார். திருவிழா: பாபாஜி அவதார நாளான கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் யாக பூஜை நடக்கும்.

வேண்டுகோள்:

தியானம் மற்றும் யோக நிலையை அடைய விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் நெய் தீபமேற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *