அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கோவை குமரன் கோட்டம், கோயம்புத்தூர்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கோவை குமரன் கோட்டம், திருச்சி சாலை, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை5 மணி முதல்1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுவாமி நாதர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கோயம்புத்தூர்

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஆறுமுகனின்ஆறுபணிகள்

தமிழ் மறை நூல்களில் முருகப்பெருமானின் ஆறுமுகங்கள்செய்யும் பணிகள் விளக்கப்பட்டுள்ளன.

1. அறியாமை அகற்றி ஞானம் வழங்குகிறது.

2. பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.

3. பக்தர்களுக்கு வலிமையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.

4.மறைந்துள்ள இரகசியங்களை வெளிக்கொணர்ந்து மனதில் வைராக்கியத்தை உண்டாக்குகிறது.

5.நல்லவர்களைக்காத்து தீயவர்களை அழிக்கிறது.

6.எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

முருகன் படைத்தல், காத்தல், அழித்தல் மற்றும் எல்லாத்தொழில்களையும் செய்கிறார் என்பது 12 கரங்களில் உள்ள ஆயுதங்களால் விளங்குகிறது. இந்த பூவுலகிலுள்ள ஒவ்வொரு மனிதப்பிறவியும் ஐம்பூதங்களாலும் உள்ளே இருக்கும் ஆன்மாவாலும் ஆனது.

இதே போல் முருகப்பெருமானுக்கு, சிவனின் நெற்றியிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் ஆன்மாவாவும், உடல் ஐம்பூதங்களாலும் அமைந்திருக்கிறது. இது இறைவன் மனிதப்பிறவி எடுக்கும் போது அதற்கேற்ற முறையில் அவரது உருவம் அமைவதை உணர்த்துகிறது.

முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை. தந்தையாகிய சிவ பெருமானுக்கு குருவாக இருந்து, “ஒம்என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசித்தவர் முருகன். இந்த சுவாமிநாத சுவாமியை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு ஞானமும் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது கல்விச்செல்வம். இத்தகைய கல்வி செல்வம் வற்றாமல் கிடைப்பதற்காகத்தான் குமரன் கோட்டத்தில் சுவாமிநாதசுவாமி கோயில் எழுந்தருளியிருக்கிறது.

வெண்மை; தூய்மை; என்பதற்கேற்ப கோயில் முழுவதுமே வெண்மைதான். ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரத்தின் உள்ளே சென்றதும் நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் நீங்கி, “நான்என்பதை விட உயர்ந்தது இந்த இராஜகோபுரம் தான் என்ற உணர்வு ஏற்படுகிறது. வலதுபக்கத்தில் வினைதீர்க்கும் விநாயகன் தனது தம்பியின் கோயிலில் முழுமுதற்கடவுளாக முதல் ஆளாக அமர்ந்திருக்கிறார். அடுத்ததாக குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்க கூடிய குமரன் சரவணப்பொய்கையில் அவதரித்ததை நினைவுகூறும் வகையில் பிரம்மாண்டமான தீர்த்த தொட்டியின் நடுவிலே தாமரை இதழ்களில் குழந்தை முருகனின் அவதார நிலை. இந்த சரவண பொய்கையை அஷ்டதிக் பாலகர்கள் காவல் காத்து வருகிறார்கள்.

முருகனை தரிசிப்பது என்றால் சாதாரண விஷயம் அல்ல. எனவே நம்மிடம் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் என்ற பஞ்ச விகாரங்களையும் பலியிட்டு விட்டு முருகனிடம் செல்வதற்காக பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தையும் மயில் வாகனத்தையும் தாண்டிச் சென்றால், உலக நாயகனான தந்தை ஈசனுக்கே பாடம் சொன்ன சுவாமிநாத சுவாமி சந்தனக்காப்புடன் இராஜ அலங்காரத்தில் நானே அழகுஎன்பது போல் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். முருகனுக்கு மயில்தானே வாகனம். ஆனால் இங்கோ சுமாமிமலையில் இருப்பது போலவே யானை வாகனமாக உள்ளது. எதையெதையோ முருகனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நாம் செல்வோம். ஆனால் சுவாமிநாதனைப் பார்த்தவுடனேயே அவனைப்பார்த்தாலே போதும் அனைத்தையும் அடைந்து விட்ட திருப்தி ஏற்பட்டுவிடும்.

மூலஸ்தான சுவாமிநாதனை தரிசித்து விட்டு வலம் வந்தால் திருத்தணிகை வேலன், வள்ளிதெய்வானையுடன் தனி சன்னதியில் அருள்புரிவதை தரிசிக்கலாம். அவரை தரிசித்து விட்டு நகர்ந்தால் சூரனை வதம் செய்த திருச்செந்தூர் செந்திலாண்டவர் வேலுடன் தனி சன்னதியில் காட்சிதருகிறார். அடுத்து சென்றால் தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கேட்டதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருக்கிறார். தனக்கு வேண்டிய மாம்பழத்தை தன் அண்ணனுக்கு கொடுத்ததற்காக கோபித்து சென்ற பழநி தண்டாயுதபாணி, கையில் தண்டம் ஏந்தி, “எதற்கும் ஆசைப்படாதேஎன நமக்கு அறிவுறுத்துவது போல் அவரே துறவியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இல்வாழ்க்கை இனிமையாக அமைய என்னை வணங்கு என்பதைப் போல், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியர் தனி சன்னதியில் அருளாசி அள்ளி வழங்குகிறார். இப்படி ஆறுபடை வீடு திருமுருகனும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிப்பதை பார்க்க பார்க்க, நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து வளங்களும் ஒரே இடத்தில் கிடைத்து விட்ட நிம்மதி ஏற்படும்.

ஆறுபடைமுருகனை தரிசித்து விட்டு வந்தால் முருகனின் பெற்றோர்கள் காசி விஸ்வநாதர் விசாலாட்சி தனி சன்னதிகளில் நம்மை ஆசீர்வதிக்கிறார்கள். அத்துடன் 63 நாயன்மார்களும், ஒரே கல்லினாலான நவக்கிரகமும் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.

இங்கு ஆறுகால பூஜை நடைபெறுகிறது. இங்குள்ள சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் தான் ஆறுபடை வீடு முருகனும் ஒரே இடத்தில் தனிதனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இதில் மிகப்பெரும் விசேஷம் என்னவென்றால் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி திருத்தணி, சுவாமிமலை, சோலைமலை மண்டபம் ஆகிய ஆறுபடைவீடுகளில் முருகப்பெருமான் எந்த பெயரில் எந்த திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாரோ, அதே பெயரில் அதே திசையில் இங்கும் அருள்பாலிக்கிறார். இந்த சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்து இங்குள்ள ஆறு முருகப்பெருமானை தரிசித்தால் ஆறுபடைவீடும் சென்று தரிசித்த திருப்தி ஏற்படும்.

திருவிழா:

கார்த்திகை, சஷ்டி, சித்திரை வருடப்பிறப்பு, தைப்பூசம், பங்குனி உத்திரம், விசாகம், பங்குனி உத்திரத்தில் பிரம்மோத்சவம் ஒரு வாரம்.

வேண்டுகோள்:

அறியாமை அகல, வலிமையும், ஊக்கமும் பெற, மனதில் வைராக்கியம் ஏற்பட, தீமைகள் அகல, மகிழ்ச்சி பெருக இங்கு பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *