அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கிழக்கு தாம்பரம், கந்தாஸ்ரமம்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கிழக்கு தாம்பரம், கந்தாஸ்ரமம், சென்னை மாவட்டம்.

+91- 44-2229 0134, +91- 2229 3388,

+91- 94446 29570 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுவாமிநாதர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கந்தாஸ்ரமம்

மாவட்டம்

சென்னை

மாநிலம்

தமிழ்நாடு

புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர் சுயம்பிரகாசர். இவரது சீடர் சாந்தானந்த சுவாமி. 1921ல் அவதரித்த இவரது இயற்பெயர் சுப்ரமண்யம். இந்த பெயர் காரணமாகத்தான், இவரால் ஸ்தாபிக்கப்பட்ட தலங்கள் கந்தாஸ்ரமம்எனப் பெயர் பெற்றன. சேலம் கந்தாஸ்ரமத்தை அமைத்தவரும் இவரே. 2002 மே 27ல் இவர் சமாதி அடைந்தார்.

கணபதியின் 32 அம்சங்களில் ஒருவரான பஞ்சமுக ஹேரம்ப கணபதி, சென்னை கந்தாஸ்ரமத்தில் அருளுகிறார். 12 அடி உயரம், ஐந்து முகம், பத்து கரம், சிங்க வாகனத்துடன் கன்னி மூலையில் இருக்கிறார். அபயம், வரம், பாசம், தந்தம், உருத்ராட்ச மாலை, மாவட்டி, பரசு, உலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை தாங்கியுள்ளார். சங்கடகரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில் விசேஷ அபிஷேக ஆராதனை உண்டு. இவரது சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) பால கணபதி, பஞ்சமுக ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி உள்ளனர்.

இங்குள்ள முருகன் சுவாமிநாத சுவாமிஎன்ற திருநாமத்துடன் 12 அடி உயரத்தில் அருளுகிறார். பழநியைப்போன்று இங்கும் முருகப்பெருமான் மேற்கு பார்த்துள்ளார். வலது கையில் தண்டம் பிடித்து, இடது கையை இடுப்பில் வைத்து, வேலை வலது கை மேல் சாத்திய நிலையில் கேட்ட வரம் தரும் வள்ளலாக விளங்குகிறார். மேற்கு பார்த்த முருகனை வணங்கினால் ஞானம், செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

சூரனை வதம் செய்வதற்காக தாயை வணங்கி, வேல் பெற்றதை நினைவு படுத்தும் வகையில் தாய் புவனேஸ்வரியின் எதிரில், பணிவுடன் நிற்கிறார். தந்தைக்கே பாடம் சொல்லிக்கொடுத்தால் ஏற்பட்ட சுவாமிநாதன்என்ற திருநாமத்துடன் குருவின் குருவாகஅருள்பாலிக்கிறார். குருபெயர்ச்சி நாளில் இவரை வணங்குவது சிறப்பு.

கந்தசஷ்டி விரதத்தை ஒட்டி ஆறு நாட்களும் இவருக்கு விதவிதமான அலங்காரம் செய்யப்படும். கிருத்திகை தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உண்டு. இவரது கோஷ்டத்தில் பாலமுருகன், கதிர்காம முருகன், அறுபடை வீடு முருகன் மற்றும் ஒன்பது வகையான முருக வடிவங்கள் உள்ளன.

கோயிலின் வாயு மூலையில் இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, கிழக்கே வானர முகம், தெற்கே நரசிம்ம முகம், மேற்கே கருட முகம், வடக்கே வராக முகம், மேல் நோக்கி குதிரை முகம் ஆகியவை உள்ளன. 12 அடி உயரமுடையவர். கத்தி, சூலம், மரம், மலை, பாசம், அங்குசம், சின்முத்திரை, பிண்டிபாலம், கட்வாங்கம், குண்டிகை ஆகியவற்றுடன் காட்சிதரும் இவருக்கு அமாவாசை, அனுமன் ஜெயந்தி, மூல நட்சத்திர நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வணங்குகின்றனர். கோஷ்டத்தில் பக்த ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர் உள்ளனர்.

10 அடி உயரத்தில் வீற்றிருக்கும் சரபேஸ்வரரின் கையில் மான், மழு, சர்ப்பம், நெருப்பு ஆகியன உள்ளன. விசேஷ காலங்களில் இவருக்கும், எதிரே உள்ள இலிங்கத்திற்கும் அபிஷேகம் நடக்கிறது. பிரதோஷம் மற்றும் ஞாயிறு இராகு காலத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படும். எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட வருகின்றனர். கோஷ்டத்தில் அஷ்ட பைரவர்கள், சுவர்ணஹர்ஷண பைரவர் அருளுகின்றனர்.

சரபேஸ்வரருக்கு எதிரில் பிரத்யங்கிரா தேவி அருளுகிறாள். இவள் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். இவளது உதவியுடன் தான் சரபேஸ்வரர் நரசிம்மரின் கோபத்தை தணித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 10 அடி உயரத்தில் சிங்கமுகத்துடன் கூடிய இவளது கையில் சூலம், கபாலம், பாசம், டமருகம் உள்ளன. சிங்க வாகனத்தில் அமர்ந்திருக்கும் இவளுக்கு அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.

இங்குள்ள யாக சாலையில், தினமும் காலை 9.15 முதல் 11.15 மணி வரை பிரத்யங்கிரா கோடி ஹோமம் நடக்கிறது. தேவதைகளின் அனுக்கிரக சக்தி அதிகரிக்கவும், தெய்வ பலம் ஏற்படவும், கோயில் நிறுவனர் சாந்தானந்தசுவாமிகள் கூறியபடி இதற்கான மூல மந்திரங்களை ஒரு கோடி தடவை ஜபித்து, ஹோமங்கள் நடந்து வருகின்றன.

சுமார் 19 அடி உயரம் உள்ள, பஞ்சலோகத்திலான பிரமாண்ட சுதர்சன மூர்த்தி கிழக்கு நோக்கியும் அவருக்கு பின்னால் மேற்கு நோக்கி லட்சுமி நரசிம்மரும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

பொதுவாக சுதர்சன சக்கரத்தின் பின்புறம் யோக நரசிம்மர் இருப்பார். ஆனால், இங்கு லட்சுமி நரசிம்மர் இருப்பது சிறப்பு. சுதர்சனரின் அருகே பிரகலாதனும், எதிரே 5 அடி உயரத்தில் சுதையால் ஆன வெங்கடாசலபதி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பிரகதீஸ்வரர் பாணத்தை விட உயரமான பாணத்தையுடைய இலிங்கம் இங்கு உள்ளது. இது ஆயிரம் இலிங்கங்களை உள்ளடக்கிய சகஸ்ரலிங்கமாக அமையும். தஞ்சாவூர் லிங்கத்தின் பாணம் (ஆவுடையாருக்கு மேலுள்ள பகுதி) 7 அடி 6 அங்குலம் உயரமுள்ளது. இந்த சகஸ்ரலிங்கத்தின் பாணம் 8 அடி 1 அங்குலமாக இருக்கும். இதன் எதிரே 6 அடி உயர நந்தி உள்ளது. இந்த அஷ்ட சகஸ்ரலிங்கத்தில் வரிசைக்கு 53 என்ற கணக்கில் 19 வரிசைகளில் 1007 சிறு லிங்கங்கள் இருக்கும். பிரமாண்ட லிங்கத்துடன் சேர்த்து 1008 லிங்கங்கள் என கணக்கில் கொள்ளப்படும். இதன் எடை 20 டன்.

இந்த இலிங்கம் அமையும் சன்னதியைச் சுற்றி தெட்சிணாமூர்த்தி, அலமேலு தாயார்வெங்கடாசலபதி, பிரம்மா சிலைகள் உள்ளது.

பிரம்மா, விஷ்ணு, சிவனின் அம்சமான தத்தாத்ரேயர், அத்ரி மகரிஷிக்கும் அனுசூயாவுக்கும் அவதரித்தவர். சுமார் 12 அடி உயரத்தில் அமைந்துள்ள இவருக்கு பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு எதிரில் 12 அடி உயரத்தில் சனிபகவான் அருளுகிறார். வலதுகாலை காக வாகனத்தில் ஊன்றியபடி நிற்கும் இவரை வணங்கினால் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. கோஷ்டத்தில் மூன்று கோலங்களில் சனிபகவான் காட்சி தருகிறார். மாதத்தின் முதல் சனியன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.

கோயிலின் நடுவே ஐந்தடி உயரத்தில் பஞ்சலோகத்தில் மகாமேரு அமைந்து உள்ளது.
இதற்கு அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி திதிகளில், நவாவர்ண பூஜை (மாலையில்) நடக்கிறது. இதில் ஆட்சிசெய்யும் திரிபுரசுந்தரியை வழிபட்டால் நவக்கிரக தோஷம் விலகும் என்கின்றனர்.
நாள்தோறும் மாலை 4.30 – 5.30 மணிக்கு ஸ்ரீதுர்கா ஸப்தசதி பாராயணமும், அஷ்டலட்சுமியின் அருள் வேண்டி தினமும் காலை 7 மணிக்கு கோபூஜையும் நடக்கிறது. தினமும் மதியம் அன்னதானம் நடக்கிறது. அன்னதான மண்டபத்தில் அன்னபூரணி தனி பீடத்தில் அருளுகிறாள். கோபுரங்கள் ஒரிசா மாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. அமைதியான முறையில் தியானம் செய்ய மண்டபம் உள்ளது. பஞ்சலோகத்தில் ஆன பிரமாண்டமான ஐயப்பன் சிலை வேறு எங்கும் இல்லை. அஷ்டா தசபுஜ மகாலட்சுமி, துர்கா தேவி அருள்செய்கின்றனர்.

திருவிழா:

கந்தசஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி, சங்கடகரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, அமாவாசை, அனுமன் ஜெயந்தி.

வேண்டுகோள்:

ஞானம், செல்வம் பெருக, மேற்கு பார்த்த முருகனையும், எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரபேஸ்வரரையும் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *