அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், புதுவண்டிப்பாளையம்

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், புதுவண்டிப்பாளையம், கடலூர் மாவட்டம்.

முருகன் தலங்களிலேயே திருச்செந்தூரைப் போலவே மிகவும் சிறப்பாக சூரசம்காரம் கொண்டாடப் படும் தலம் கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்.

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சமணர்களின் கொடுமைக்கு ஆளானார். சமணர்களின் தலைவனும், அரசனுமான மகேந்திரவர்மன் அவரை கல்லோடு சேர்த்துக் கட்டி வங்கக் கடலில் வீசி எறிந்தான். இருந்தும் அந்த கல்லையே தெப்பமாக்கி நமசிவாயஎன்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து திருப்பாதிரிப்புலியூருக்கு தென் திசை நோக்கி மிதந்து வந்து, கெடில நதி வாயிலாக கரையேறினார் நாவுக்கரசர்.

அப்பர் பெருமான் கரையேறிய அருங்காட்சியினை ஆண்டு தோறும் சித்திரை அனுஷத்தில் கொண்டாடுவார்கள். அப்படி கொண்டாடும் போது திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனாய பாடலீஸ்வரரும், புதுவண்டிப்பாளையம் முருகப்பெருமானும் அந்த தலத்துக்கு எழுந்தருளி அப்பருக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுக்கின்றனர்.

இத்தலம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம். இங்கு வேல் கோட்டம்தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

மூலவர் சிவசுப்பிரமணிய பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். இவர் சிவனிடம் செண்டுஎன்ற ஆயுதம் பெற்று மேருமலையின் ஆணவத்தை அடக்கிய விழாவும், ஆனி மாதத்தில் நடராஜருடன் மாணிக்கவாசகர் இரண்டற கலந்த விழாவும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா இங்கு 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுடன் இங்கு எழுந்தருளி இத்தலத்தில் முருகனின் திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுடன் நகர் வலம் வருவர். ஐப்பசியில் ஆறுநாள் சூரசம்கார விழா நடத்தப்படுகிறது.

வழிகாட்டி: கடலூரிலிருந்து கேப்பர் செல்லும் ரோட்டில் 1 கி.மீ. தூரத்தில் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமிகோயில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *