அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அனுவாவி

அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அனுவாவி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-94434 77295, 98432 84842 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்ரமணியர்

தலவிருட்சம்

மாமரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அனுவாவி

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைச் சுமந்து கொண்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்குத் தாகம் ஏற்பட்டது. அவர் இம்மலையில் உள்ள முருகப்பெருமானை வேண்டினார். அனுமனின் வேண்டுதலுக்கு மனமிரங்கிய முருகன், தன் வேலால் ஒரு இடத்தில் குத்த, அந்த இடத்திலிருந்து தண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. அனுமான் தாகம் தீர்ந்தார். கந்தப் பெருமான் வழிபாடு இராமாயண காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு வால்மீகி ராமாயணம் எடுத்துக்காட்டு. இராமன் விட்ட அம்புகள் கந்தனின் வேல் போல் பிரகாசித்ததாக 2 இடங்களில் சொல்லப் பட்டுள்ளது.


ஹனுஎன்றால் ஆஞ்சநேயர். “வாவிஎன்றால் ஊற்று, நீர்நிலை என்று பொருள். அனுமனுக்காக தோன்றிய ஊற்றாதலால் இத்தலம் ஹனுவாவிஎன்று பெயர் பெற்று தற்போது அனுவாவிஆகிவிட்டது. அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் அனுமக்குமரன் மலைஎன்ற பெயரும் உண்டு.

இங்குள்ள ஊற்று நீரின் ஆரம்பம் எங்குள்ளது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை. அதனால், மைசூர் மன்னன் ஒருவன் இங்குள்ள ஊற்றை காணாச்சுனைஎன பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளான். எந்த காலத்திலும் வற்றாத இந்த புனித நீர் பக்தர்களின் தாகம் தீர்க்கிறது. திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் சுவாமியின் சிரசில் பூ வைத்து, ஒரு செயலைத் துவங்கலாமா என பார்க்கும் பழக்கம் உள்ளது.

சுயம்புமூர்த்தியாக அருள்பாலித்த சுவாமியும், தல விருட்சமாக இருந்த 5 மாமரங்களும் கடந்த 1957ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் அடித்து செல்லப்பட்டது. அதன் பின் புதிய கோயில் அமைக்கப்பட்டு 1969ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. 500 படிக்கட்டுகள் ஏறினால் கோயிலை அடையலாம். மலைக்கோயிலுக்கு முன்பாக இடும்பன் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னதி உள்ளது. சிவபெருமான் அருணாசலேஸ்வரராக அருள்பாலிக்கிறார். கோயில் அமைந்துள்ள பகுதிக்கு நேர் தென்புறத்தில் மருதமலை உள்ளது. மலைப்பகுதி வழியாக ஏறி இறங்கினால் மருதமலையை அடையலாம்.

திருவிழா:

சூரசம்காரம், கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

வேண்டுகோள்:

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள். தீர்த்தத்தில் சூரிய உதயத்திற்கு முன் தொடர்ந்து சில நாட்கள் குளித்தால் மன நோய், தோல் நோய் அகலும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, புத்தாடை காணிக்கை செலுத்தி, கல்யாண உற்சவம் நடத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *