அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்.

+91-4639 – 242 221 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்பிரமணியசுவாமி
உற்சவர் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்
அம்மன் வள்ளி, தெய்வானை
தீர்த்தம் சரவணபொய்கை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

சீரலை வாயில்

ஊர் திருச்செந்தூர்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

தேவர்கள் தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறைத் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், “ஜெயந்திநாதர்என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே செந்தில்நாதர்என மருவியது. தலமும் திருஜெயந்திபுரம்‘ (ஜெயந்தி வெற்றி) என அழைக்கப்பெற்று, “திருச்செந்தூர்என மருவியது.

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.

சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்காரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். “சாயாஎன்றால் நிழல்எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். இத்துடன் சூரசம்கார வைபவம் நிறைவடையும்.

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்களது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்காரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை ஆடைஉடுத்தி, பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.

இக்கோயிலின் இராஜகோபுரம் மேற்கு வாயிலின் மீது அமைந்திருப்பதால் மேலைக்கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழக ஆலயங்களில் பொதுவாக கிழக்கு வாயிலின் மீது அமைக்கப்படும் கோபுரமே உயரமானதாக அமைக்கப்படும். இத்தலத்தில் கிழக்கு வாயில் கடலுக்கு அருகில் இருப்பதால் அதன்மீது கோபுரம் கட்டினால் கடல் அரிப்பால் பாதிக்கப்படும். அத்துடன் உறுதியான அடித்தளம் அமைக்க முடியாதென்பதால் இராஜகோபுரத்தை மேற்கு வாயில் மீது கட்டியுள்ளனர். இக்கோபுரம் ஒன்பது அடுக்குகள் கொண்டது. வாயில் உள்ள வியாள மட்டத்திலிருந்து உயரம் 137 அடி உயரமும் 90 அடி அகலமும் கொண்டதாகும். தென்வடலாக அமைந்த இக்கோபுரத்தின் அகலம் 65 அடிகளாகும். மேல்தளம் 20 அடி உயரமும், 47 அடி அகலமும் கொண்டது. உச்சியில் ஒன்பது செப்புக் கலசங்கள் அமைந்துள்ளளன. இக்கோயிலின் முதன்மை வாயில் தெற்கு நோக்கியவாறு உள்ளது. இதன் வழியாக உட்சென்றதும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சண்முக விலாசம் என்னும் பெரிய மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபம் 120 அடி உயரமும், 86 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதைத் தாங்குகின்றன. முன்னாளில் வெள்ளைக் கற்களால் கட்டப்பட்டிருந்த இந்த மண்டபத்தை மெளன சுவாமிகள் கருங்கல்லால் புதுப்பித்துள்ளார். இம்மண்டபத்தின் கருங்கல் கூரை தமிழர்களின் கட்டிடக்கலையின் தொழில் நுட்பத்திறமையைப் பறைசாற்றுகிறது. சண்முக விலாச மண்டபத்திலிருந்து (உட்சென்று) மகாமண்டபத்தில் கோயில் கொண்டுள்ள சண்முகப் பெருமானையும், தேவியர்களையும் வழிபடலாம். தெற்கு நோக்கியவாறு அமைந்த தங்கக் கால்கள் கொண்ட விமானத்தில் சண்முகரைக் காண்கிறோம். இம்மண்டபத்தின் படிகளில் இறங்கும்போது, ஆடவர்கள் தங்கள் மேலாடைகளைக் களைந்து விடுகின்றனர். இக்கோயிலை அமைத்த கேரள மன்னர்கள் காலத்திய வழக்கம், இங்கு இன்றும் நடைமுறையில் உள்ளது.

இரண்டாவது பிரகாரம் படிகளில் இறங்கி இரண்டாவது பிரகாரத்தை அடையலாம். இங்கு தெற்கு நோக்கியவாறு சிறிய தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவரை வணங்கியபின், இதே பிரகாரத்தில் மேற்குப் பகுதியில் 108 சிவலிங்கங்கள் அமைந்த சந்நிதி உள்ளது. தொடர்ந்து சூரசம்கார மூர்த்தி திருவுருவத்தைக் காணலாம். அடுத்து திருப்புகழ் என்னும் நூலை அருளிச் செய்த அருணகிரிநாதர் சந்நிதி உள்ளது. இவருடைய சந்நிதியை அடுத்து மேல்கோபுர வாயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் உள்ளது. தொடர்ந்து வலம்வரும்போது, மேற்கு கோபுர வாயிலுக்கு நேராக மேற்கு நோக்கியவாறு விநாயகர் உள்ளார். இவர் மேலவாசல் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவர் மேலைக்கோபுரத்தைக் கட்டும்போது துணையாக இருந்து காத்தருளினார் என்கின்றனர். இந்தப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் பெருமாள் சந்நிதி உள்ளது. இதில் பெருமாள் நின்றவாறு காட்சியளிக்கிறார். சந்தனாசலம் என்னும் பாறையைக் குடைந்து செய்யப்பட்ட ஆலயத்தில் அரங்கநாதர் பள்ளி கொண்டவாறு காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் கஜலட்சுமித் தாயாரைக் காண்கிறோம். மேலும் இங்கு ஒரே வரிசையில் அமைந்த ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோருடன் பன்னிரு ஆழ்வார்களின் திருவுருவங்களும் உள்ளன. முதல் பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் கருவறைக்கு நேராக செப்புத்தகடு போர்த்திய கொடிமரம் உள்ளது. மாசி மாதம், ஆவணி மாதம் நடைபெறும் பெருந்திருவிழாக்களின்போது இதில் கொடியேற்றப்படுகிறது. இக்கொடிமரத்திற்கு நேராக மதிற்சுவரில் நீளவாட்டில் அமைந்த துளை உள்ளது. இதன் வழியாகப் பார்த்தால் நுரையுடன் பொங்கி வந்து கரையில் மோதித்திரும்பும் அலைகளையும், அதன் பின்புலத்தில் அமைதியான நீலக்கடலையும் காணலாம். இந்தத் துளையின் அருகில் காதை வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி கேட்கிறது. கொடிமரத்தின் அருகில் விநாயகர் திருவுருவம் உள்ளது. முதற் பிரகாரம் முதல் பிரகாரத்தில் நுழைந்ததும் இடப்புறத்தில் குமாரவிடங்கர் என்னும் உற்சவ மூர்த்தி உள்ளார். இவரே முதன்மை மூர்த்தியாவார். இவர் சண்முகரின் பிரதி பிம்பமாவார். தெய்வத் திருமண நிகழ்ச்சிகளில் மணவாளராக எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச்சாமி என அழைக்கப்படுகிறார். இவரை வணங்கியபின் தொடர்ந்து வரிசையாக இருக்கும் அறுபத்து மூன்று நாயன்மார்கள், தொகையடியார்கள் திருவுருவங்களைக் கண்டு வணங்கலாம். இங்குள்ள தூண்களில் இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகளைச் செய்த காசி சுவாமிகள், மெளனச்சுவாமிகள், தேசிகமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரின் திருவுருவங்கள் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட வள்ளியம்மன் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதியின் பின்புறம் சங்கர நாராயணர் சுவாமி, விசாலாட்சி அம்மன், வேதபுரீசுவரர் சுவாமி, வாதபுரீசுவரர் சுவாமி, ஏகாம்பரநாதர் சுவாமி நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அடுத்ததாகப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள தெய்வயானை சந்நதி உள்ளது. இப்பகுதியில் யாகசாலை உள்ளது. இப்பிராகாரத்தின் வடக்கில் சந்திரேசுவரர் (சுந்தரேசுவரர்) சந்நிதி உள்ளது. அதற்கு நேர் எதிரில் நடராஜர், சனீஸ்வரர், வைரவர் சந்நிதிகள் உள்ளன. நடராஜர் சந்நிதியில் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்க, அருகில் சிவகாமியம்மை உள்ளார். நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டு வியந்து அமர்ந்திருக்கும் காரைக்காலம்மையாரையும் காண்கிறோம். இங்கிருந்து சற்றுத் தெற்கே சென்றால், தங்கமுலாம் பூசிய நெடிய கொடிக்கம்பம் உள்ளது. இதில் கொடியேற்றும் வழக்கமில்லை. மகாமண்டபம் மகாமண்டபத்தில் இருந்தவாறு மூலவராக அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பாலசுப்பிரமணியப் பெருமாளையும், சபையில் வீற்றிருக்கும் ஆறுமுக நயினாரையும் தரிசிக்கலாம். மூலவருக்கு முன்னுள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கே இருந்தவாறு பார்வதி தேவியாரையும், கரிய மாணிக்க விநாயகரையும் கண்டு தரிசிக்கலாம். கருவறை வாயிலில் வீரபாகு தேவரும், வீரமகேந்திர தேவரும் வாயிற்காவலர்களாக உள்ளனர். மூலவர் கிழக்கு நோக்கிய கருவறையில், கிழக்கு நோக்கியவாறு பாலசுப்பிரமணியர் (செந்தில்நாதன்) எழுந்தருளியுள்ளார். தலையில் சடையை எடுத்துக் கட்டியுள்ளார். நான்கு கரங்களுடன் திகழும் இவர், மேற்கரங்களில் வஜ்ரம், ஜப மாலையும், கீழ்க்கரங்களில் தாமரையும், ஊரு முத்திரையும் தாங்கியுள்ளார். மூலவருக்கு முன்பாக வலப்புறத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட ஸ்ரீபலிநாயகரும், இடப்புறம் தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீபலிநாயகரும் உள்ளனர். கருப்பக்கிரகத்தின் பின்புறம் பாம்பறை எனப்படும் ஒரு குகை உள்ளது. அதில் ஐந்து இலிங்கங்கள் உள்ளன. இந்த ஐந்து இலிங்கங்களை முருகப்பெருமான் பூசித்து கொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர். கருவறைக்கு நேர் எதிரில் (மகா மண்டபத்தில்) இரண்டு மயில்களையும், ஒரு நந்தியையும் காணலாம். நந்தி பஞ்சலிங்கங்களுக்கு வாகனமாகும். ஆறுமுகர் (சண்முகர்) மகாமண்டபத்தின் வலப்புறம் சண்முகர் சந்நிதி உள்ளது. இதில் ஆறுமுகங்களும் பன்னிரண்டு கரங்களும் கொண்டவராக முருகப்பெருமான் அறுமுகநாயினார் எனும் பெயரில் உள்ளார். இவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வானையர் உள்ளனர். இச்சந்நிதியில் ஆத்மலிங்கம் ஒன்று உள்ளது. ஜெயந்தி நாதர் பிரகாரத்தில் உள்ள தூணில் ஆறுமுகரின் திருவுருவம் உள்ளது. மணியடியின் வெளிப்புற வாயில் வழியாக வரும்போது, ஜயந்திநாதர் எனும் உலாத்திருமேனியைக் காண்கிறோம். இவரே மூலவருக்கு இணையான உலாமூர்த்தியாவார். செந்தில் நாயகர் எனப்படும் இவரே தங்கத்தேரில் உலா வருவார். சூரனோடு போரிடுபவரும் இவரே. இவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வானையர் உள்ளனர். மேலும், இங்கு அலைவாய் உகந்த பெருமான், முதலான உலாத்திரு மேனிகளும் உள்ளன. தீர்த்தங்கள் (புனித நீர்நிலைகள்) முருகப்பெருமான் சூரபத்மனை சம்காரித்தபின் அவனைக் கொன்ற பாவம் தீர திருச்செந்தூரில் சிவவழிபாடு செய்தார். இத்தலத்தில் அன்பர்களின் பாவங்களையும் நோய்களையும் தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றின் பெயர்கள் யாவும், கடற்கரையில் உள்ள தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்தங்களில் வதனாரம்ப தீர்த்தம், நாழிக்கிணறு முதலியவை சிறப்புடையவையாகும். நாழிக் கிணறு சண்முக விலாச மண்டபத்திலிருந்து நாழிக் கிணற்றுக்குச் செல்ல நீண்ட நடைபாதை உள்ளது. நாழிக் கிணற்றில் நீராட, கட்டணம் செலுத்தவேண்டும். 24 அடி ஆழமுள்ள இடத்தில் ஒரு அடி சதுரப்பரப்புள்ள தொட்டி போன்ற அமைப்பில், நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இதில் எடுக்க எடுக்கக் குறையாது தண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. தனது படைவீரர்களின் தாகத்தைத் தணிக்க முருகப்பெருமான் தன் வேலை ஊன்றி இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது. இதனருகில் உள்ள கிணற்றுநீர் கந்தக மணம் கொண்டது. வடமொழியில் இதை கந்த புஷ்கரணி என்று அழைக்கின்றனர். கந்தன் கைவேல்பட்டதால் இப்பெயர் வரலாயிற்று. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முருகனை வழிபடுவதற்கு முன்பாக கடலிலும், நாழிக் கிணற்றிலும் நீராடுவதைப் புண்ணியம் என்று கருதுகின்றனர். உப்புக்கரிக்கும் நெடிய கடற்கரையில் தூயநீர் ஊற்றாகப் பெருகி வருவது இயற்கையின் சிறப்பு மிக்க அதிசயமாகும். வதனாரம்ப தீர்த்தம் இது மூலவரை நோக்கியுள்ள கடலில் உள்ளதாகக் கூறுவர். பிரம்மன் இதில் மூழ்கித் தனது இழந்த தலையைப் பெற்றான். கலிங்க தேசத்து மன்னனின் மகள் கனக சுந்தரி ஒரு சாபத்தால் குதிரை முகத்தோடு பிறந்தாள். மன்னன், அவள் முகம் மனித முகமாவதற்கு பல தலங்களுக்குச் சென்றான். இங்கு வந்து நீராடியபோது அவள் பெண்முகம் பெற்றாள். அதையொட்டி வதனாரம்ப தீர்த்தம் எனப்படுகிறது. இதை நினைவூட்டும் வகையில் திருச்செந்தூரில் உள்ள வெயிலுகந்த அம்மன் ஆலயத்தில் குதிரை முகத்தோடு கூடிய சிலை வைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் பாறைகள் நிறைந்த இடத்தில் இருப்பதால் பக்தர்கள் இதில் நீராட முடியாது. வடக்கு வெளிப்பிரகாரத்திற்கு அருகில் வள்ளிக்குகை என்னுமிடம் உள்ளது. அங்குள்ள குகையில் வள்ளியம்மை திருவுருவம் உள்ளது. முருகன் துரத்தி வந்தபோது வள்ளியம்மை இங்கே வந்து ஒளிந்து கொண்டாள் என்கின்றனர். இப்போது இந்தக் குகைக்கு அருகே தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சரவணப் பொய்கை இக்கோயிலின் அருகில் உள்ள பெரிய குளத்திற்கு சரவணப் பொய்கை என்பது பெயர். இதில் பக்தர்கள் நீராடுகின்றனர். தாமரை மலரில் ஆறு குழந்தைகளின் திருவுருவங்கள் கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் தாலாட்டப்படுகிறது. இக்கோயில் திருப்பணியில் தமது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மெளனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி ஆகிய மூவரின் சமாதிகள் நாழிக் கிணற்றின் தெற்கே உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி, மெளனசாமி மூவரின் திருவுருவங்கள் தூண் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன நடைபாதை கொட்டகை. ஆலயத்தில் இருந்து ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவில் நாழிக் கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றுக்குச் செல்ல நீண்ட பாதை உள்ளது. இதில் சிமெண்ட தூண்களை நிறுத்தி கல்நார் ஓடுகளால் கூரை வேய்ந்துள்ளனர். இதை நடைபாதைக் கொட்டகை என்கின்றனர்.

பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கர், “மாப்பிள்ளை சுவாமிஎன்றழைக்கின்றனர்.

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் சந்தனமலையில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, “கந்தமாதன பர்வதம்என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

திருச்செந்தூரில் முருகன் ஞானகுருவாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களைப் பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், “குரு தலமாகக்கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, “ஞானஸ்கந்த மூர்த்திஎன்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.

சூரனை சம்காரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப்படுகிறது.

மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாகச் சொல்கிறார்கள்.

முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு இலிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் இலிங்கம் இருக்கிறது. இவ்விரு இலிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்கசன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, “கங்கை பூஜைஎன்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் படைவீடுஎனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, “ஆறுபடை வீடுஎன்கிறோம். வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், “ஆற்றுப்படைஎனப்பட்டது. இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, “திருமுருகாற்றுப்படை” (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, “ஆறுபடைஎன்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

திருவிழா:

பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம். கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்காரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

கோரிக்கைகள்:

திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

திருநெல்வேலியிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கோயில் சென்னையில் இருந்து ஏறத்தாள 600 கி.மீ தொலைவில் உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் இந்த திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலுக்கு மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற ஊர்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகளும், தென் மாவட்டத்திலிருக்கும் முக்கிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து சில பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் பயண வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *