அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர், தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 -253 202, 94866 31196

(மாற்றங்களுக்குட்பட்டவை)

மூலவர்

சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்

முருகன்

அம்மன்

வள்ளி, தெய்வானை

தலவிருட்சம்

பிரம்பில்

தீர்த்தம்

புஷ்கரணி

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

பிரம்ம மங்களபுரம்

ஊர்

பெரம்பூர்

மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் பெயரில் பார்வதிதேவி பிறந்து சிவனை மணந்தாள். ஒரு சமயம் தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். இதில் பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலந்து கொண்டார். இதனால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. பிரம்மா சிவனிடம் சாப விமோசனம் வேண்டினார். மனமிரங்கிய சிவன் பூலோகத்தில் தீர்த்தம் உண்டாக்கி என்னை வழிபட்டால் சாபம் நீங்கும் என்றார். அதன்படி வழுவூர் என்னுமிடத்தில் வீரட்டேஸ்வரர் என்னும் பெயரில் சிவலிங்கம் எழுப்பி வழிபட்டு பிரம்மா சாபம் நீங்கப்பெற்றார். அத்துடன் இத்தலத்தின் அருகில் உள்ள பிரம்ம மங்களபுரத்தில் (பெரம்பூர்) தந்தைக்கு உபதேசம் செய்த சுப்பிரமணியரை வணங்கி ஞான உபதேசமும் பெற்றார்.

தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் அழித்தார். மயிலாகவும், சேவலாகவும் மாறிய சூரபத்மன் முருகனின் ஞான உபதேசம் பெற விரும்பினான். பிரம்மனுக்கும், மயிலுக்கும் முருகன் ஞான உபதேசம் செய்ததால், இத்தல முருகன் ஞான குருவாக விளங்குகிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்கு முருகனின் இடது பக்கம் திரும்பியிருப்பது சிறப்பம்சமாகும்.

மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் ஆறுமுகம், 12 திருக்கரங்களுடன், மயில்மீது அமர்ந்தபடி, வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்.
இங்கு முருகப்பெருமான் ஞான குருவாக விளங்குகிறார். எனவே குக தட்சிணாமூர்த்தி, குக சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர். அப்பர் தேவாரத்தில் இத்தலம் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. தை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள துர்க்கைக்கு விசேஷமான முறையில் விளக்கு பூஜை செய்யப்படுகிறது.

கோயில் பிரகாரத்தில் ஆதி விநாயகர், மகாவிஷ்ணு, ஐயப்பன், துர்க்கை, பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தவல்லி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, பிரம்மா, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலைகளுடன் கூடிய பிரமாண்ட கோபுரம். இரண்டு பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என கோயில் பெரியதாக அமைந்துள்ளது. கோயில் வாசலில் விநாயகருக்கும் இடும்பனுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

மிளகு செட்டியார் என்பவர் இத்தலத்தில் தங்கி இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார். எனவே அவரது சிலை நந்திக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. திருவாதிரை நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது

பொதுவாக சிவன் கோயில்களில் சிவன் சன்னதிக்கு பின் புறம் வடமேற்கு திசையில் முருகனுக்குத் தனி சன்னதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகன் குருவாக விளங்குவதால், முருகனின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வடமேற்கு திசையில் தனி சன்னதியில் குபேரலிங்கேஸ்வரரும், ஆனந்தவல்லி அம்மனும் வீற்றிருந்து அருளுகின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுவதாக கூறப்படுகிறது. இது போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது மிகவும் அரிது. தெய்வானை இங்கு தனி சன்னதியில் அருளுகிறாள்.

திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல்.

வேண்டுகோள்:

திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்து பலன் அடைகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

முருகனுக்கு சண்முக அர்ச்சனை செய்தும், காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இத்தல முருகனுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறவிக்கடன் தீரும் என்பது ஐதீகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *