அருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில், பரங்கிப்பேட்டை

அருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில், பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.

+91 84184 11058, 98940 48206 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

முத்துக்குமரர்

உற்சவர்

முத்துக்குமரர்

அம்மன்

வள்ளி, தெய்வானை

தீர்த்தம்

சுவேதா நதி, வங்காள விரிகுடா கடல்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர்

பரங்கிப்பேட்டை

மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

நமுசி என்ற அசுரன், எத்தகைய பலமான ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இதனால், ஆணவத்துடன் தேவர்களைத் துன்புறுத்தினான். இந்திரன் அவனுடன் போரிட்டு தோற்றான். தனக்கு அருளும்படி சிவனை வேண்டினான். சிவன் அவனிடம், இங்குள்ள கடலில் நுரையை எடுத்து அதை அசுரன் மீது வீசும்படி கூறினார். அசுரன் பெற்ற வரத்தின்படி, ஆயுதங்களால் தான் அவனுக்கு அழிவு உண்டாகாது. கடல் நுரை என்பது ஆயுதமாக கருத முடியாதென்பதால், அசுரனை அழிக்க சிவன் இவ்வாறு ஒரு தந்திரம் செய்தார். அதன்படி, இந்திரன் கடல் நுரையை வீச, அசுரன் அழிந்தான். மகிழ்ந்த இந்திரன் இங்கு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். இவர் விஸ்வநாதர் எனப் பெயர் பெற்றார். இவருக்கு இந்திர இலிங்கம்என்றும் பெயருண்டு. காலப்போக்கில் இவரது பரிவார மூர்த்தியாக எழுப்பப்பட்ட முத்துக்குமர சுவாமி (முருகன்) சன்னதி எதிரில் கோபுரம், கொடிமரம் அமைக்கப்பட்டதால், இவர் பிரசித்தி பெற்று விட்டார். கோயிலும் அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய திசையில் (வடகிழக்கு) அமைந்த தலம் இது. முருகன் சன்னதிக்கு வலப்புறம் விஸ்வநாதர் இருக்கிறர். அருகிலேயே தென்திசை நோக்கி விசாலாட்சி சன்னதி உள்ளது.

இந்திரன், இங்கு கார்த்திகை முதல் ஞாயிற்றுக் கிழமையில் வணங்கி அருள் பெற்றானாம். எனவே, இந்நாளில் இங்கு வழிபடுவது விசேஷம். கார்த்திகை திங்களில் 108 சங்காபிஷேகமும் நடக்கும். சிவன் கோயில்களில் கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) பிரம்மா, நின்ற நிலையில்தான் இருப்பார். இங்கு அமர்ந்து இரண்டு கைகளையும் கூப்பி, வணங்கிய நிலையில் இருக்கிறார். இவரது தரிசனம் மிக விசேஷம். அருகிலுள்ள துர்க்கை எட்டு கைகளுடன் காட்சியளிப்பது மற்றொரு சிறப்பு. வளர்பிறை அஷ்டமியன்று இவளுக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும்.

முத்துக்குமரர் முன்புறம் ஐந்து, பின்புறம் ஒன்று என ஆறு முகங்களுடன், இந்திர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். கிருத்திகை நாட்களில் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். செவ்வாய் தோறும் இவருக்கு சத்ருசம்ஹார திரிசதிஅர்ச்சனை நடக்கிறது. அப்போது, முருகனின் ஆறு முகங்களுக்கும் செவ்வரளி மாலை அணிவித்து, தனித்தனியே தீபாராதனை செய்து, தனித்தனி நைவேத்யத்துடன் பூஜை நடக்கும். இவ்வேளையில் இவருக்கு பிரதானமாக தேன் படைத்து, அதையே பிரசாதமாகத் தருவர். மலைப்பகுதியில் பிறந்த வள்ளியின் கணவன் என்பதன் அடிப்படையில், தேன் படைக்கின்றனர்.

முன் மண்டபத்தில் 18 படிகளுடன் ஐயப்பன் சன்னதி உள்ளது. தமிழ் மாத பிறப்பு நாட்களில் இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அப்போது சுவாமி பிரகார வலம் வருவார். முன் மண்டபத்தில் உள்ள நடராஜர், ஆனி திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என வருடத்தில் இருமுறை புறப்பாடாவார். வழக்கமாக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாட்களில்தான் விசேஷ பூஜை நடக்கும். இங்கு, அமாவாசையன்று இரவில் பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் ஐந்து தலை நாகத்தின் கீழே ஐந்து நாகங்களுடன் நாகராஜா சன்னதி உள்ளது. இருபுறமும் இரண்டு நாக கன்னிகள் உள்ளனர். நாகதோஷம் மற்றும் களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளோர் நாகருக்கு தாலி மற்றும் சிவப்பு ஆடை அணிவித்து வழிபடுகின்றனர். பிரகாரத்தில் ஆதிவிநாயகர், பாலசுப்பிரமணியர், மகாலட்சுமி, சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.

இமயமலையில் இருப்பதாகச் சொல்லப்படும் பாபாஜியின் தந்தை சுவேதநாதைய்யர் இக்கோயிலில்தான் அர்ச்சகராக பணியாற்றினார். இங்கிருந்து சற்று தூரத்தில் பாபாஜியின் அவதாரத்தலத்தில் அவருக்கு கோயில் உள்ளது.

விழாக்காலங்களில் முருகப்பெருமான் அவருக்குரிய ஆடு, மயில் வாகனங்கள் தவிர, சிவனுக்குரிய ரிஷபம் மற்றும் ஐராவதம் எனப்படும் தேவலோகத்து வெள்ளை யானையிலும் பவனி வருவார். இந்திரன் வழிபட்டு அருள் பெற்ற தலமென்பதால், அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக, சுவாமி இவ்வாறு பவனி வருவதாகச் சொல்கின்றனர். முருகன் அருள்பெற்ற இடும்பனும் இங்கு வாகனமாக இருக்கிறார். இவர் மீதும் சுவாமி பவனி செல்வார்.

திருவிழா:

நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம். கந்தசஷ்டி விழாவின்போது தெய்வானை திருக்கல்யாணமும், தைப்பூசத் திருவிழாவின்போது வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது. தைப்பூசத்தன்று முருகன் சுவேதா நதிக்கும் (வெள்ளாறு), மாசி மகத்தன்று வங்காள விரிகுடா கடலுக்கும் சென்று தீர்த்தவாரி காண்பார்.

வேண்டுகோள்:

நாகதோஷம் மற்றும் களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளோர் இங்குள்ள நாகரை வழிபடுகின்றனர். பொருளை இழந்தவர்கள் மீண்டும் கிடைக்கவும், தெரிந்தோ, தெரியாமலோ பதவியிறக்கம் அல்லது வேலை இழந்தவர்கள் மீண்டும் பணி கிடைக்க சிவனுக்கு புத்தாடை அணிவித்து, சம்பார் சாதம் அல்லது பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். விசாலாட்சி அம்பிகைக்கு வடை, சர்க்கரைப்பொங்கல் படைத்து லலிதா சகஸ்நாமம் பாராயணம் செய்து வணங்குகின்றனர்.

நேர்த்திக்கடன்:

நாகருக்கு தாலி மற்றும் சிவப்பு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சிவனுக்குப் புத்தாடை அணிவித்து, சம்பார் சாதம் அல்லது பொங்கல் படைத்தும், விசாலாட்சி அம்பிகைக்கு வடை, சர்க்கரைப்பொங்கல் படைத்து லலிதா சகஸ்நாமம் பாராயணம் செய்து வணங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *