அருள்மிகு நெல்லையப்பர்திருக்கோயில், திருநெல்வேலி

அருள்மிகு நெல்லையப்பர்திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.

+91- 462 – 233 9910 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர்)
அம்மன் காந்திமதி, வடிவுடையம்மை
தல விருட்சம் மூங்கில்
தீர்த்தம் பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை
ஆகமம் காரண ஆகமம், காமீக ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருநெல்வேலி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

தமிழகத்தில் மூன்று மூலவர்களைக் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே. மூலவரான வேண்ட வளர்ந்தநாதர்சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே நெல்லையப்பர்எனப்படுகிறார். இந்த இலிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். எனவே, சுவாமிக்கு சக்தி இலிங்கம்என்ற பெயரும் உண்டு. இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த இலிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. இவரே இக்கோயிலின் முதல் இலிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. மூவருமே மூலவராகவே வணங்கப் படுகின்றனர். இங்கு பஞ்ச தெட்சிணாமூர்த்தி களையும் தரிசிக்கலாம்.

வேதபட்டர் என்பவர் இறைவனுக்கு தினமும் நைவேத்யம் படைப்பதற்காக உலரப் போட்டிருந்த நெல், மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டு காப்பாற்றியதால் இறைவனுக்கு நெல்வேலிநாதர்என்று பெயர் ஏற்பட்டது. இத்தலமும் நெல்வேலி (திருநெல்வேலி)” எனப் பெயர்பெற்றது.

மூங்கில் மரங்கள் நிறைந்த காட்டின் வழியாக அந்நாட்டினை ஆண்டு வந்த மன்னருக்கு தினந்தோறும் பால் நிரம்பிய குடங்களை எடுத்துச் செல்வார் இராமக்கோன் என்னும் ஆயன். இவ்வாறு தினம் பால் எடுத்துச் சென்ற வேளையில் ஒருநாள், அங்குள்ள மூங்கில் கன்றில் மோதி கால் தடுக்கி பால் மட்டும் சிந்தும், ஆனால் குடம் உடைவதில்லை. இது போன்ற நிகழ்வு நாள்தோறும் நிகழ்ந்தது. அதிசயித்த இராமக்கோன் தினமும் மூங்கில் கன்றில் கால் இடருவதால் அதனைக் கோடரியால் வெட்டினார். வெட்டிய வேகத்தில் அதில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதனைக் கண்டு பயந்த ஆயன் மன்னரிடம் சென்று முறையிட அவர் தன் பரிவாரங்களுடன் அவ்விடத்திற்கு வந்தார். மரத்தில் குருதி வடிவத்தைக் கண்டார். அந்நிலையில் ஆயன் இறைவனை எண்ணி பெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்து, இறைவனது முழு திருமேனியையும் காட்டியருள்க என வேண்டி இரத்தம் வரும் பகுதியைத் தொட்டவுடன் குருதி வருவது நின்றது. நிலவினைச் சூடிய தலையில் ஆயனால் வெட்டுபட்ட காயத்துடன் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க முழு, வானுயர வடிவத்தினையும், பின் அரசனின் வேண்டுகோளுக்கிணங்க குறுகிய தோற்றத்துடனும் காட்சியளித்தார். திருமூலநாதருக்கும், வேயின் முளைத்த லிங்கத்திற்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் ஆகம விதிப்படி திருக்கோயில் அமைத்து விழாக்களும் நடத்தினார் அரசர். இத்திருவிளையாடல் பங்குனி மாதம் செங்கோல் திருவிழாவின் நான்காம் நாள் அன்று நடைபெறுகிறது.

இறைவனின் மறுபெயர்கள்:

நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர்.

அம்மையின் மறுபெயர்கள்:

காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்.

தீர்த்தங்கள் :

மொத்தம் 32. முக்கியமான தீர்த்தங்கள் 9. திருக்கோயிலின் உள்ளே அமைந்துள்ள தீர்த்தங்கள் பொற்றாமரை தீர்த்தம், கருமாறி தீர்த்தம், வயிரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம். திருக்கோயில் வெளியே அமைந்த தீர்த்தங்கள் கம்பை, தெப்பக்குளம், சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குதுறை.

திருநெல்வேலிக்கு வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம் போன்ற பெயர்களும் உண்டு.

அம்மன் தலையில் வைரமணி முடி, இராக்குடியுடனும், முகத்தில் புல்லாக்கு மூக்குத்தியுடனும், நவமணி மாலை அணிந்தும், காலில் மணிச் சிலம்பும், வலக்கரம் உயர்த்திய நிலையிலும், இடக்கரம் தாழ்த்திய நிலையிலும், கிளியுடனும் காட்சி தரும் காந்திமதி அம்மனின் தோற்றம், கருணை வடிவம். காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிறப் புடவையிலேயே காட்சி தருகிறாள். இறுதிக்காலத்தில் உலகம் அனைத்தும் அம்பிகையிடம், ஐக்கியமாவதை உணர்த்தும்விதமாக இவ்வாறு காட்சி தருவதாக ஐதீகம்.
நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்குத் தனி இராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி இராஜகோபுரமும் உண்டு. இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது. பார்ப்பதற்கு தனித்தனி கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும்.

அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் ஆரம்பத்தில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பிற்காலத்தில் 7-ம் நூற்றாண்டில் நின்றசீர்நெடுமாறனாலும் கட்டப் பட்டவையாகும். கி.பி. 1647-ம் ஆண்டு வாக்கில் வடமலையப்ப பிள்ளையன் இரண்டு கோயிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை கட்டினார். இத்திருக்கோயிலில் சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் என பல்வேறு மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த மண்டபங்கள் சிற்பக் கலையின் சின்னமாகத் திகழ்கின்றன. பொதுவாக கோயில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும். ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.

பெண்கள், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். ஐப்பசி பிரம்மோத்சவத்தின் முதல் பத்து நாட்கள் அம்பாள், சிவனை மணக்க வேண்டி தவமிருப்பாள். பத்தாம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள் வாள். 11ம் நாள் மகாவிஷ்ணு, தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று, அம்பிகையை மணம் செய்வார். அப்போது பக்தர்கள், மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. 12ம் நாளிலிருந்து இருவரும், 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் காண்கின்றனர். 14ம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் சிவன் சன்னதிக்கு மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை, “காந்திமதி சீர்என்பார்கள்.

இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது.


மூலஸ்தானம் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். அருகில் உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது. தன் தங்கையை மணந்த சிவனை, விஷ்ணு மார்பில் தாங்கினார். இதன் அடிப்படையில் இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். இவரது கையில் தாரை வார்த்துக்கொடுத்த தீர்த்த பாத்திரமும் இருக்கிறது.


பிரதோஷத்தின்போது, சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூஜை நடக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள். சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.
இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணித் தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாக எடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர். தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாகச் சொல்வதுண்டு. அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும் துவாரபாலகிகளாகவும் காணலாம். கங்கையும், யமுனையும் தாமிரபரணி நகர் நாயகிக்குப் பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.


தை மாதத்தில் உத்ராயணம் துவங்குவதால், மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாக கருதப்படுகிறது. ஆகவே, கோயில்களில் மார்கழி அதிகாலையில் திருவனந்தல் பூஜை நடக்கும். ஆனால், இங்கு மார்கழி பூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமி களுக்கும் பூஜை நடக்கிறது. இந்த 30 நாட்களும் சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். இங்கு கந்தசஷ்டி ஐப்பசி அமாவாசையில் துவங்கி பவுர்ணமி வரையில் 15 நாட்கள் நடக்கிறது. அப்போது ஆறுமுக நாயனாருக்கு லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.


இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி, சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் இருக்கிறாள். சிங்கமும், மானும் ஒருசேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் சக்தியை அவள் தருகிறாள். அருகில் அவளது தோழி இருக்கிறாள். அம்பாள் சன்னதியில் பண்டாசுரனை வதம் செய்த அம்பாளின் சிலை உள்ளது. இவளை மஞ்சன வடிவாம்பிகைஎன்பர். இவளையும் துர்க்கையின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்.
பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்குள்ள புதனோ, வடக்கு நோக்கியிருக்கிறார். இது மிக அரிய கோலம். தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் புதனின் திசையில் மாற்றமில்லை.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர் இருக்கிறார். அதுபோல, இங்குள்ள விநாயகரும் இதே திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். ஆனால், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது ஒரு காரணம் என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள். ஆம்! இக்கோயிலின் அமைப்பை பார்த்தால் இவ்விஷயம் புலப்படும். கோயில்களில் சுவாமி அபிஷேக தீர்த்தம் வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம். பிரகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சந்நிதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந்தீட்டப்பட்டுள்ளன. அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது.

பஞ்சபூத ஸ்தல இறைவன் நடனமாடிய சபைகள் ஐந்து உள்ளன.
1.
திருக்குற்றாலம் சித்திரசபை
2.
மதுரை வெள்ளிசபை
3.
திருவாலங்காடு ரத்தின சபை
4.
சிதம்பரம் பொற்சபை
என இந்த வரிசையில்,
5.
திருநெல்வேலி தாமிரசபை
அமைந்துள்ளது.

தூண்கள்தோறும் சிற்பவேலைப்பாடுகள், ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு, மறுபக்கம் தன் பெரியபிள்ளைக்கு சோறூட்டும் அன்புத் தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்துச் செல்லும் அக்கால கணவன் மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம்தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனைக் கொல்லவந்து, கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன், போன்றோரது சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்யும் வண்ணம் அமைந்துள்ளன. இந்த சிற்பங்களில் எலும்பு தெரிகிறது. நரம்பு, நகம், மண்டை ஒட்டு மாலையில் ஒவ்வொரு தலையும் தனித்தனியாகத் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால் முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல, உயிருடன் வந்த கலை.

தேவாரப்பதிகம்:

அக்குலா மரையினர் திரையுலா முடியினர் அடிகளன்று தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலும் சோலைத் திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலியுறை செல்வர் தாமே.

திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல்பெற்ற

பாண்டிநாட்டுத்தலங்களில் இது 14வது தலம்.

திருவிழா:

ஆண்டு முழுவதும் திருவிழாக்கள்தான். ஆனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்போது நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். வருடாபிஷேகம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா அம்பாளுக்கு பத்து நாட்கள், பௌத்திர உற்சவம் நான்கு நாட்கள், அம்மனுக்கு ஐப்பசி மாதத்தில் பதினைந்து நாட்கள் திருக்கல்யாண வைபவம், கந்த சஷ்டி திருவிழா, கார்த்திகை மாதத்தில் சோமவாரம் நான்கு நாட்கள், மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி முப்பது நாட்கள், திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம், தை மாதத்தில் தைப்பூசத் தெப்ப உற்சவம் உட்பட பன்னிரண்டு நாட்கள், வைகாசி விசாகத் திருநாள் மூன்று நாட்கள், மாசி மகத்தன்று பொற்றாமரைத் திருக்குளத்தில் அப்பர் தெப்பம்.

பிரார்த்தனை:

கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு நோக்கி திரும்பியிருப்பதன் மூலம், படித்தவர்கள் இவரை வணங்கினால், செல்வாக்கு மிக்க வேலையோ, தொழிலோ செய்யலாம் என்று நம்புகிறார்கள். ஜாதகத்தில் புதன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபடுகிறார்கள். கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒற்றுமையுடன் இருப்பர் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதியில், 12 துளைகள் கொண்ட கல் ஜன்னல் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டு, குழந்தைப்பேறு பெற்றவர்கள், குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்து வாங்கி வித்தியாசமான நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த நேர்த்திக் கடனால் குழந்தைகள் விநாயகரின் பாதுகாப்பைப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வர் என்பதும், கல்வியில் சிறந்து விளங்குவர் என்பதும் நம்பிக்கை.

வழிகாட்டி:

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து 284 km தொலைவிலும், மதுரையில் இருந்து 154 km தூரத்திலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகரத்தின் நடுநாயகமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. நெல்லை புகைவண்டி நிலையத்தில் இருந்து சுமார் 2 km தொலைவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *