அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி

அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி, விருதுநகர் மாவட்டம்.

+91-4566-282 644 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர்
அம்மன் துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை
தல விருட்சம் அரசு, புன்னை
தீர்த்தம் பாகவரிநதி (குண்டாறு), கவ்வைக்கடல் (சந்நிதிக்கு எதிரில் உள்ளது.) “ஒலிப்புணரிஎன்றும் பெயர்.
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சுழியல்
ஊர் திருச்சுழி
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

சிவபெருமான் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் புகச்செய்த இடம் என்பதால் இத்தலம் சுழியல்என வழங்கப்படுகிறது என்பது தல புராணத்தில் கூறப்படும் பெயர்க் காரணமாகும்.

சிவபெருமான் திருக்கயிலை மலையைக் காட்டிலும் சிறப்புடையது என்று கருதி இத்திருச்சுழியலில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்துள்ளனர். சுந்தரர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டுத் திருமடத்தில் தங்கியிருந்துபோது இறைவன் அவரது கனவில் கையில் பொற்செண்டும், திருமுடியில் சுழியுமும் கொண்டு காளைப் பருவத்தினராய்க் காட்சிதந்தார் என்பது வரலாறு. திருமணக் கோலத்தில் இறைவன் விளங்குவதால் மக்கள் பலரும் கோயிலில் திருமணம் செய்து கொள்வதைச் சிறப்பாகக் கொண்டு திருமணம் புரிந்து கொள்கின்றனர். சிவராத்திரியன்று திருச்சுழியில் உள்ள சிவனை ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் அனைத்துத் தலங்களிலும் உறையும் இறைவனை ஆயிரம் வில்வ இலைகளால் அர்ச்சித்த பயனைத் தரும். திருச்சுழியல் நினைத்தாலும், பேசினாலும், கண்டாலும் சிவபதம் தரவல்ல தலம். அறிந்தோ, அறியாமலோ, மறந்தோ, மறவாமலோ செய்த பாவம் திருச்சுழியலை அடைந்தால் புயல் காற்றில் அகப்பட்ட பஞ்சு போல் ஆகிவிடும். இத்தலத்தில் செய்யும் தானதருமங்கள், வேள்விகள் ஆகியவற்றின் பயன் ஏனைய தலங்களிற் செய்யும் பயனைவிட மிகுதியாகும். இத்தலத்தின் வேறு பெயர்கள்: வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி.

அம்பாள் துணைமாலை நாயகி மதுரை மீனாட்சி அம்மனை போலவே காட்சி தருகிறார். எல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் இத்தலத்தில் நீங்கும். ஆனால் இந்த ஊரில் செய்த பாவம் இங்குத்தீர்வதன்றி வேறெங்கும் தீராது.

திருச்சுழியல் பெரிய ஊர். தேரோடும் நான்கு வீதிகள் சூழத் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிள்ளையாரை வழிபட்டு ஆலயத் திருவாயிலுள் நுழைந்தால் எதிரே அம்பாள் சந்நிதி.

வலதுபுறம் சுவாமி சந்நிதிக்கு எதிரே கவ்வைக்கடல் தீர்த்தம் உள்ளது. அருகே ஆஸ்தான மண்டபம் உள்ளது. முதலாவதாகக் காணப்படும் கம்பத்தடி மண்டபத்தில் கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள்ளன. திருவாயிலின் இருமருங்கிலும் விநாயகர், முருகன் உள்ளனர். சுவாமி சன்னதியிலுள்ள இராஜகோபுரம் ஏழுநிலைகளுடன் கூடியது. வாயிலில் உள்ள அதிகாரநந்தி தேவரை வணங்கி உள்ளே சென்றால் அறுகாற்பீடம் காணப்படுகிறது. இங்கு இத்தலத்திருப்பதிகக் கல்வெட்டு உள்ளது.

அடுத்து சபாமண்டபம், அந்தாரளமண்டபம், அர்த்த மண்டபங்கள் உள்ளன. மூலலிங்கப் பெருமானாகிய திருமேனிநாதர் சுயம்புலிங்கமாகக் கருவறையில் காட்சி தருகிறார். வழிபட்டு வெளியில் சபாமண்டபத்தில் சிலை வடிவில் விளங்கும் நடராஜரைத் தரிசித்து வெளியே வந்து முதல் திருச்சுற்றை அடையலாம். கிழக்கே சூரியன், தெற்கே அறுபத்து மூவர், சப்தமாதர்கள் உள்ளனர். தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் உள்ளனர்.

வடக்கே சண்டேசர் கோயில் உள்ளது. வடகிழக்கே நடராசப் பெருமானும் கிழக்கே காலபைரவர், சந்திரன் ஆகியோரும் விளங்குகின்றனர்.

கருவறையைச் சார்ந்த கோஷ்டங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே இலிங்கோத்பவர், வடக்கே துர்க்கை ஆகியோர் உள்ளனர். அடுத்து கோயிலின் தென்பால் இறைவனுக்கு வலது பாகத்தில் விளங்கும் அம்பாள் கோயிலை அடைவோம். நந்திபலிபீடங்களை வழிபட்டு உள்ளே சென்றால் திருப்பள்ளியறை மண்டபம் காணப்படும். அடுத்து அர்த்த மண்டபமும் கருவரையும் உள்ளன. இது இராமநாதபுரம் சேது சமஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களில் ஒன்று.

தேவாரப்பதிகம்:

கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக் கொவ்வைத்துவர் வாயார்குடைந்து ஆடும் திருச்சுழியல் தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார்அடி தொழுவார் அவ்வத்திசைக்கு அரசாகுவார் அலரால் பிரியாளே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 12வது தலம்.

திருவிழா:

நவராத்திரி, ஆவணி மூலம், சித்திரை விஷு, கார்த்திகை சோமவாரம், ஆடித்தபசு, தைப்பூசம், பங்குனி பிரமோத்சவத் திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம்.

பிரார்த்தனை:

திருமணத்தில் தடை உள்ளவர்கள் திருமணக்கோலத்தில் உள்ள இறைவனை வணங்கிப் பலனடைகின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இருப்பிடம் :

திருச்சுழியல், விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. விருதுநகர் மானாமதுரை ரயில்பாதையில் திருச்சுழியல் உள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்கு தெற்கே 1 கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து பஸ்கள் இத்தலத்திற்கு வருகின்றன. பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகில் கோயில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *