அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம்

அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம், திருக்கண்ணமங்கை போஸ்ட், திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 241 978 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கரவீரநாதர் ( பிரம்மபுரீஸ்வரர்)
அம்மன் பிரத்தியட்சமின்னம்மை
தல விருட்சம் செவ்வரளி, அலரி
தீர்த்தம் அனவரத தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கரவீரம்
ஊர் கரைவீரம்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

முன்னொரு காலத்தில் தேவகன்னியர்கள் கைலாயத்தில் சிவனையும் சக்தியையும் தரிசிக்க சென்றனர். அப்போது அவர்கள் பார்வதியிடம்,”தேவி! தங்களுக்கு சிவபெருமான் கணவனாக உள்ளார். குழந்தைகளும் உள்ளது. எங்களுக்கும் திருமண பாக்கியம் தந்தருள வேண்டும்என வேண்டினர். அதற்கு பார்வதி தேவி சிவனிடம்,”இறைவா, இதற்கு தாங்கள் தான் பதில் கூறவேண்டும்என வேண்டினாள். உடனே சிவபெருமான் காவிரியின் தென்கரையில் தானே இலிங்கம் அமைத்துக் கொடுத்து, அதை அமாவாசை தினத்தில் தேவகன்னியரை வழிபாடு செய்யக் கூறினார். தேவகன்னியரும் அதன்படி செய்து பலனடைந்தனர் என தலபுராணம் கூறுகிறது. எனவே அமாவாசை நாட்களில் பெண்கள் இங்கு வந்து, இங்குள்ள தலவிருட்சத்தில் தண்ணீர் ஊற்றி, சிவனை வழிபாடு செய்கின்றனர்.

சிவபெருமான் தான் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தைப் பராமரிக்க கவுதம முனிவரை நியமித்தார். கவுதம முனிவர் இத்தலத்தில் தவம் செய்து இறைவனின் அருள் வேண்டினார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன்,”வேண்டும் வரம் கேள்என்றார். அதற்கு முனிவர்,”இறைவா! நான் இறந்தபின் எனது உடலை யாரும் பார்க்கக்கூடாது. ஏனெனில் உனக்கு சேவை செய்ய வந்தவன் நான். சிவனை வணங்க வருபவர்கள், முனிவராகிய என்னையும் சேர்த்து வழிபாடு செய்வார்கள். எனவே என்னை இத்தலத்தின் தலவிருட்சமாக ஏற்று அருள்புரியுங்கள்என்றார். இறைவனும் அதன்படி அருள்புரிந்தார். எனவே தான் அமாவாசை நாட்களில் பெண்கள் கவுதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.

கரவீரம் என்பதற்கு பொன்னலரி என்பது பொருள். அலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் எனப்படுகிறது. திருஞான சம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார். சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் எனப் பாடியுள்ளார். எனவே, ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

சிவபெருமானின் தரிசனம் வேண்டி ஒரு கழுதை இத்தலத்தில் தவம் இருந்தது. தரிசனம் கிடைக்காத வருத்தத்தில் நாகூர் வரை நடந்து சென்று கடலில் விழ இருந்தது. அப்போது ஏதோ சப்தம் கேட்க, கழுதை திரும்பி பார்த்த போது இத்தலத்தில் இருந்தபடியே இறைவன் தரிசனம் தந்து, மோட்சம் அளித்தார் என புராணம் கூறுகிறது. எனவே தான் சிவனின் எதிரில் கொடிமரமும், நாகூர் வரை வீடுகளும் கிடையாது. எந்த உயிரினமாக இருந்தாலும் உண்மையான பக்தி இருந்தால் சிவதரிசனம் செய்து முக்தி பெறலாம் என்பதை இதன் மூலம் அறியலாம். இத்தலவிநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

தேவாரப்பதிகம்:

பண்ணி னார்மறை பாடல் ஆடலன் விண்ணி னார்மதில் எய்தமுக் கண்ணி னான் உறையுங் கரவீரத்தை நண்ணுவார் வினை நாசமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 91வது தலம்.

திருவிழா:

மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. மார்கழி திருவாதிரை, மகாசிவராத்திரி,பங்குனி உத்திரம்.

பிரார்த்தனை:

அமாவாசை நாட்களில் பெண்கள் கவுதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்குப் புத்தாடை சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

இருப்பிடம் :

திருவாரூரிலிருந்து (8 கி.மீ.) கும்பகோணம் வழியில் வடகண்டம் பஸ்ஸ்டாப்பில் இறங்கி கரைவீரம் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *