அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், கேக்கரை

அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், கேக்கரை, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 244 714, +91- 4366 -98658 44677 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருநேத்திரநாதர் (முக்கோணநாதர்)
அம்மன் அஞ்சாட்சி (மயிமேவும் கண்ணி)
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சோடஷ (முக்கூடல்)
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கேக்கரை, திருப்பள்ளி முக்கோடல், திருப்பள்ளி முக்கூடல்
ஊர் திருப்பள்ளி முக்கூடல்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் அப்பர்

ஒரு முறை காசி மற்றும் இராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது. இதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து,”ராவணன் சீதையை தூக்கிச் செல்லும் போது நீ அதை தடுப்பாய். இதனால் சினம் கொண்ட இராவணன் உனது இறக்கையை வெட்டி விடுவான். நீ வேதனையால் துடித்துகொண்டிருக்கும் போது இராமபிரான் வருவார். நீ அவரிடம் இராவணன் சீதையை இந்த வழியாக தூக்கி சென்றான் என்ற விஷயத்தை தெரிவிப்பாய். அதைக்கேட்ட இராமர் மகிழ்ச்சியடைவார். நீ அவரது பாதத்தில் விழுந்து முக்தி பெறுவாய்எனக் கூறினார். அதற்கு ஜடாயு,”இறைவா! நான் காசி இராமேஸ்வரம் தரிசனம் கேட்டேன். ஆனால் எனது சிறகை ராவணன் வெட்டி விடுவான் என்று கூறுகிறீர்கள். நான் எப்படி இப்புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதுஎனக் கேட்டது. அதற்கு சிவன்,”நீ ஒரு சேது சமுத்திரத்தில் நீராட ஆசைப்பட்டாய். ஆனால் இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடினால், 16 (சோடஷ) சேது சமுத்திர தீர்த்தத்தில் நீராடிய பலன் உனக்கு கிடைக்கும்எனக் கூறினார். கோயில் எதிரில் உள்ள இக்குளம் பிருங்கி மகரிஷி காலத்தில் பிள்ளையாரால் வெட்டப்பட்டது என்பர். இத்தீர்த்தம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு இணையானதால் முக்கூடல் தீர்த்தம் என வழங்கப்படுகிறது.

ஒரு முறை சோழமன்னன் ஒருவன் வேட்டையாட குதிரை மீதேறி செல்லும் போது இவ்வூர் வழியாக சென்றான். இரவு நேரமாகி விட்டதால் இங்கு தங்க நேர்ந்தது. மன்னன் உணவருந்தும் போது சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான். இதையறிந்த குதிரைக்காரன் குதிரைக்கு வைத்திருந்த கொள்ளுப்பையை சிவலிங்கமாக அலங்கரித்து, அதைக்காட்டி மன்னனை உணவருந்த செய்தான். பின் அப்பையை எடுக்க முயன்றபோது அதுவே சிவலிங்கமாக மாறியது என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.

இத்தலத்து அம்மன் மயிமேவும்கண்ணிஎனப்படுகிறார். தபோவதனி என்னும் அரசி குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாகத் தோன்றினாள். அப்பெண் மணப்பருவம் வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறப்படுகிறது.

இராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று. முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலம் கேக்கரைஎன்றும் அழைக்கப்படுகிறது.

கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, கன்னி விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் உள்ளன.

தேவாரப்பதிகம்:

அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம் கடிந்தானைக் கார்முகில் போல் கண்டத்தானைக் கடுஞ்சினத்தோன் தன்னுடலை நேமியாலே தடிந்தானைத் தன்னொப்பார் இல்லாதானைத் தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் படிந்தானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 86வது தலம்.

திருவிழா:

தை, ஆடி, மகாளய அமாவாசை சிறப்பு. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

பிரார்த்தனை:

12 அமாவாசை இத்தல குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில்களில் நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி கொடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *