அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம்

அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம், திருவாரூர் மாவட்டம்.

+91-4366 – 292 300, 291 257, 94431 13025

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். இக்கோயிலுக்குச் செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.

மூலவர் இராமநாதசுவாமி
உற்சவர் நந்தியுடன் சோமாஸ்கந்தர்
அம்மன் சரிவார்குழலி
தல விருட்சம் மகிழம், செண்பகம்
தீர்த்தம் இராம தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இராமநாதீச்சரம், இராமனதீச்சரம்
ஊர் திருக்கண்ணபுரம்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

இராமர், சீதையை மீட்க இலங்கை சென்றபோது, போரில் இராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவவழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே திரும்பினார். ஒரு மரத்தின் அடியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், இராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அப்போது அம்பிகை தோன்றி, நந்தியை தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, இராமர் சிவபூஜை செய்ய உதவினாள். இராமர் சிவவழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி, “இராமநாதேஸ்வரர்என்று பெயர் பெற்றார். ராமரை நந்தி மறைத்ததால், “ராமநந்தீச்சரம்என்ற பெயரும் உண்டு. சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது இலிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.

முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு புத்திரப்பேறு இல்லை. சிவபக்தரான அவர் குழந்தை வேண்டி சிவனுக்கு யாகம் நடத்தினார். சிவன், அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்று அருளினார். ஒருசமயம் மன்னர் வனத்திற்கு வேட்டையாடச் சென்றபோது ஓரிடத்தில் 4 பெண் குழந்தைகளைக் கண்டார். குழந்தைகளை எடுத்து வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை சரிவார் குழலியாகவும்திருச்செங்காட்டங்குடியில் வாய்த்த திருகுகுழல் நாயகி,” திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை,” திருமருகல் தலத்தில் வண்டார்குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.

நான்கு அம்பிகையருக்கும், “சூலிகாம்பாள்என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கருவுற்றாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக்கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை. இடுப்பு வலி வந்தது. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் சூலிகாம்பாள்என்ற பெயர் ஏற்பட்டது. “சூல்என்றால் கருஎன்று பொருள். “கரு காத்த அம்பிகைஎன்றும் இவளுக்கு பெயர் உண்டு. பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அர்த்தஜாம பூஜையில் மட்டும் அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம்.

இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை இராமர், சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. இராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். இராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.

தற்போதும் மாலை பூஜையை இராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷம்.
சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருச்செந்தூரில் முருகப்பெருமான், வலது கையில் மலர் வைத்தபடி காட்சி தருகிறார். இத்தலத்தில் இவர் இடதுகையில் மலர் வைத்து, வலது கையால் ஆசிர்வதித்த கோலத்தில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர்.

பிரகாரத்தில் காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார். இந்த பைரவரை அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள். இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. ராமநாதசுவாமியை தரிசிக்க செல்பவர்கள், சவுரிராஜரையும் வணங்கித் திரும்பலாம். தல விநாயகரின் திருநாமம் அனுக்ஞை விநாயகர்.

தேவாரப்பதிகம்:

தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொழி சடையவன் மன்னுகாதில் குழையது இலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சரமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 77வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி.

பிரார்த்தனை:

செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்களும் சிவனுக்கு உருத்ர ஹோமம் மற்றும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். அம்பாளிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *