அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி, திருவாரூர் மாவட்டம்.

+91-94439 21146 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரட்டானேஸ்வரர்
அம்மன் ஏலவார்குழலி, பரிமள நாயகி
தல விருட்சம் துளசி
தீர்த்தம் சக்கர தீர்த்தம், சங்குதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவிற்குடி
ஊர் திருவிற்குடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனைத் தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன், சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியைப் பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுரக் குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க, வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வைத் துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர்த் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு ஜலந்தரன்என பெயர் வைக்கப்பட்டது. அவன் பெரியவனானதும், மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன், “தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ, அப்போது எனக்கு அழிவு வரட்டும்என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்கச் சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். “இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும்என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன், “என் மனைவியின் கற்பின் திறனால், எனக்கு அழிவு வராதுஎன சவால் விட்டான். இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், “நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்நேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க, அவன் கழுத்தைச் சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், “நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான் விஷ்ணு இராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது.

பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்குப் பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலைதொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதைப் பெறுவதற்காக, ஆயிரம் தாமரைகளால், சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் இரண்டு பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனைப் பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார்.

இங்கு மூலவர் வீரட்டானேஸ்வரர்.” அம்மன் பரிமளநாயகி.” பிருந்தை என்னும் சொல்லுக்கு துளசிஎன்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம். இது ஒரு வாஸ்து தோஷ நிவர்த்தி தலம். ஆஞ்சநேயர் வழிபாடு இங்கு சிறப்பு. இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது, எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்லபடித்துறைகளும் சுற்றுச்சுவரும்கொண்ட பெரிய குளம். தீர்த்தக்கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாகவுள்ளது. வெளிப்பிராகாரத்தில், பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிராகாரத்தில் வலமாக வரும்போது மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பள்ளியறை, பைரவர், சனிகவான், தனிக்கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், ஞானதீர்த்தம்மென்னும் கிணறு, பிடாரி முதலிய சந்நிதிகள் உள்ளன.

தேவாரப்பதிகம்:

கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி மார்பினர் வலங்கையில் எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் தாடிய வேடத்தர் விரியு மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி விற்குடி வீரட்டம் பிரிவி லாதவர் பெருந்தவத்தோரெனப் பேணுவர் உலகத்தே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 74வது தலம்.

திருவிழா:

சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை:

வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *