அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி, (சற்குணேஸ்வரபுரம்), திருவாரூர் மாவட்டம்.

+91-4366-273 900, 94429 32942 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சற்குணேஸ்வரர்
அம்மன் சர்வாங்க நாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் எம தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கருவிலிக்கொட்டிட்டை, திருக்கருவிலி
ஊர் கருவேலி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது. யாகத்திற்கு செல்ல விரும்பிய தாட்சாயணியை சிவன் தடுத்தார். அவரது சொல்லைக் கேளாமல் தாட்சாயணி யாகத்திற்கு சென்றாள். அழைப்பில்லாமல் வந்த மகளை அனைவரது முன்னிலையிலும் தட்சன் அவமானப்படுத்தினான். அவமானம் தாங்காத பார்வதி ஹோம அக்னியில் விழுந்து எரிந்தாள். தாட்சாயணியின் பிரிவைத் தாங்கமுடியாத சிவபெருமான், யாக குண்டத்திற்கு வந்து அன்னையின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு பித்துபிடித்தவர் போல் ஆடினார். சிவனின் உருத்ர தாண்டவத்தால், ஈரேழு லோகங்களும் அதிர்ந்தன. தேவர்கள் நடுங்கினர். அவர்கள் நாராயணனை அணுகி, சிவபெருமானைச் சமாதானம் செய்ய வேண்டினர். நாராயணன் சக்ராயுதத்தை ஏவி, தாட்சாயணியின் உடலைச் சிறிது சிறிதாக துண்டித்தார். உடலின் பாகங்கள் 51 இடங்களில் விழுந்தன. அவை மகாசக்தி பீடங்கள் என அழைக்கப்பட்டன. பின்பு சிவபெருமானைச் சமாதானம் செய்தார். “உடலை விட்ட தாட்சாயணி, பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாக, பார்வதி என்ற பெயரில் அவதரிப்பாள் என்றும், அங்கு அவளை சிவனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன்என்றும் திருமால் கூறினார். இதன்படி, கயிலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்தது.

முற்பிறவியில் ஒரு கெட்டவனுக்கு மகளாகப் பிறந்த பாவத்திற்காக, ஈசன் மனைவியே மறுபிறவி எடுக்க வேண்டி வந்தது. அவள் மறுபிறவியில், இறைவனை அடைந்ததால் பிறவா நிலை பெற்றாள். அது போலவே, இத்தலத்து இறைவனைக் காண்போருக்கும் மறுபிறவி இல்லை. அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் கரு இல்லைஎன்ற பொருளில் கருவிலிஎனப்பட்டது. காலப்போக்கில் கருவேலிஎன மருவியது. கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதும் ஆகும். எனவே இவ்வூர் இறைவன் சற்குணேஸ்வரர்எனப்படுகிறார். அம்பாள் சர்வாங்க சுந்தரிஎனப்படுகிறாள். அம்பாள் சர்வாங்க சுந்தரி சிலை ஐந்தரை அடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் பேரழகு கொண்டதாக உள்ளது. எமதீர்த்தம் கோயிலுக்கு எதிரே உள்ளது. பிராகாரத்தில் கணபதி, பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள நர்த்தன கணபதி, பாலமுருகன், துவார விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரரும் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. இத்தலத்தின் பக்கத்தில் திருநல்லம், வன்னியூர், திருவீழிமிழலை முதலிய தலங்கள் உள்ளன.

தேவாரப்பதிகம்:

பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமாறு உணர்த்த லாம் இது கேண்மின் உருத்திர கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலிக் குணத்தி னான்உறை கொட்டிட்டை சேர்மினே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 63வது தலம்.

திருவிழா:

மகாசிவரத்திரி, மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

வழிகாட்டி:

கும்பகோணத்திலிருந்து (22கி.மீ) நாச்சியார்கோவில் வழியாக மயிலாடுதுறை செல்லும் பஸ்சில், கூந்தலூர் புதுப்பாலம் ஸ்டாப்பில் இறங்கி, வடக்கே அரை கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *