அருள்மிகு மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகா திருக்கோயில், திருமீயச்சூர்

அருள்மிகு மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகா திருக்கோயில், திருமீயச்சூர், திருவாரூர் மாவட்டம்.

+91-4366-239 170, 94448 36526 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மேகநாதசுவாமி (மிகரா அருணேஸ்வரர், முயற்சிநாதர்)
உற்சவர் பஞ்சமூர்த்தி
அம்மன் லலிதாம்பிகை, சவுந்திரநாயகி
தல விருட்சம் மந்தாரை, வில்வம்
தீர்த்தம் சூரியபுஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமீயச்சூர்
ஊர் திருமீயச்சூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி, அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர இரதத்தில் இலலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி, அவளைக் கோபம் தணியும்படியும், இதற்காக மனோன்மணிஎன்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார். அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, “வசின்யாதி வாக் தேவதைகள்என்பவர்களை வரவழைத்து, தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே ஸ்ரீ மாத்ரேஎன துவங்கும் இலலிதா சகஸ்ரநாமம்ஆயிற்று.

இங்கு மூலவர் மேகநாதர். சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, இலலிதா சகஸ்ரநாமத்தையும், இலலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். இத்தலத்தில் தான் கருடன், அருணன்(சூரியனின் தேரோட்டி), வாலி, சுக்ரீவன், எமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்துள்ளனர். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் சாபத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூரியன், இங்கு வந்து வழிபட்டு, தனது கருமை நீங்கி, செவ்வொளி பெற்று இன்புற்றான். இது காளிதேவி பூஜித்த தலம்.

சூரியனின் தேரோட்டி யார் என்றால் அருணன்என்பீர்கள். இவரது கதையை மீயச்சூரில் தான் கேட்க முடியும். காஷ்யபருக்கு, வினதை மற்றும் கர்த்துரு என்ற மனைவியர் இருந்தனர். இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை வழி பட்டனர். அவர்களுக்கு ஒரு முட்டையைக் கொடுத்த சிவன், ஓராண்டு காலம் பாதுகாக்கும்படி சொன்னார். வினதையிடம் இருந்த முட்டையில் இருந்து கருடன் பிறந்தது. அது மகாவிஷ்ணுவின் வாகனமாகும் தகுதியைப் பெற்றது. கர்த்துருவின் முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க, அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தான். அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள். சிவனும் அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயத்தை அவனது பெயரால் அருணோதயம்என வழங்குவர் என்றும் அருள் செய்தார். அருணன் சிவபக்தனாக திகழ்ந்தான். சிவதரிசனம் வேண்டித் தவமிருந்தான். இதையறிந்த சூரியன் உடலில் குறைபாடுள்ள நீ எப்படி கைலாயம் செல்ல முடியும் என கேலி செய்தான். இருந்தாலும் விடாமுயற்சியால் சிவனைக் குறித்து தவம் செய்து, சிவனின் தரிசனத்தைப் பெற்றான் அருணன். மேலும் அவனைக் கேலி செய்த சூரியனை ஒளியிழக்கும்படி சபித்து விட்டார் சிவன். பதறிப்போன சூரியன், பார்வதி பரமேஸ்வரனை யானையில் அமர வைத்து வழிபாடு செய்து, மீண்டும் ஒளி பெற்றான். இந்த சிவனே இங்கு மேகநாதன்என்ற பெயரில் அருளுகிறார். சுவாமியின் கருவறை விமானம் யானையின் பின் பக்கமான கஜப்பிருஷ்ட வடிவில் உள்ளது. இந்த விமானத்தின் மேல் மூன்று கலசங்கள் உள்ளன. சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் மீயச்சூர்என அழைக்கப்படுகிறது.

மூலவர் மேகநாதர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருளுகிறார். அம்மன் இலலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் இராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு. இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவைதான். சிலையில் கிளி கிடையாது. ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு சில கோயில்களில் தான். சென்னை திரிசூலம் திரிசூலநாதர் கோயில், தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில் ஆகியவற்றிலும், திருமியச்சூரிலும் உள்ள துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது. எட்டு கரங்களுடன் உள்ள இவளை சுகப்பிரம்ம துர்க்கா தேவிஎன்று அழைக்கின்றனர். “சுகம்என்றால் கிளி.” இவள் மகிஷாசுரன் மீது நின்றாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள். இந்தக் கிளி பக்தர்களின் கோரிக்கையை துர்க்கை மூலமாக இலலிதாம்பிகையிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம். “சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளைஎன்ற சொலவடை கூட இதில் இருந்து தான் பிறந்தது. இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து இலலிதாம்பிகை சன்னதிக்கு சென்று வருவதைக் காணலாம்.

இலலிதாம்பிகையிடம் உபதேசம் பெற்றவர் ஹயக்கிரீவர். இவர் அகத்திய முனிவருக்கு இலலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர்,”லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?” எனக் கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர்,”பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும்என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று இலலிதாம்பிகையை தரிசித்து, இலலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர்,”லலிதா நவரத்தின மாலைஎன்னும் ஸ்தோத்திரம் பாடினார்.

இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். இராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர். அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம், தேவாரப் பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளை காக்கும் தெய்வீக சக்தி உண்டு என்பார்கள். சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை என்னும் தாவரம்(கொடி வகையைச் சார்ந்தது) கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான்.

இங்குள்ள இலலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும், காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். ஒருமுறை அம்பாளின் பக்தை ஒருவரின் கனவில் அம்பாளுக்கு கொலுசு மாட்டுவது போன்ற காட்சி வந்ததாம். அதன்படி பக்தை அம்பாளுக்கு கொலுசு செய்து அணிவித்தார். தற்போது பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.

பிரகாரத்தில் இரு விமானங்களுக்கு மத்தியில் நின்று பார்த்தால் பிரம்மா, இலிங்கோத்பவர் (சிவன்), விஷ்ணு ஆகிய மும்மூர்த்தி சன்னதிகளை தரிசிக்கலாம். சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். சேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.

கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலை களுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் இலலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் இரத விநாயகர், உள் பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், சப்தமாதர்கள் பூஜித்த இலிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த இலிங்கங்கள் உள்ளன. சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

இக்கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

இளங்கோயிலின் குறிப்பு:
தல மூர்த்தி : அருள்மிகு ஸகல புவனேஸ்வரர்
தல இறைவி : அருள்மிகு வித்வன் மேகலாம்பிகா (மின்னும் மேகலையாள்)
தல விருட்சம் : மந்தார மரம்
தீர்த்தம் : காளி தீர்த்தம்

தேவாரப்பதிகம்:

பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான மின்னேர் சடைகள் உடையான் மீயச் சூரானைத் தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார் அன்னேர் இமையோர் உலகம் எய்தல் அரிதன்றே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 56வது தலம்.

திருவிழா:

தைமாத ரதசப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்குரிய, அம்பிகைக்குரிய அனைத்து வருடாந்திர விழாக்களும் நடக்கும்.

பிரார்த்தனை:

மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்கின்றனர். இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

இத்திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள பேரளம் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 km தொலைவிலும், திருவாரூரில் இருந்து 22 km தொலைவிலும் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து சுமார் 20 km தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *